'வாடிக்கையாளர்களிடம் முதல் டாலரை பெற முடிந்தால், முதலீடு உங்களைத் தேடி வரும்' - இளம் நிறுவனர்களுக்கு மூத்த முதலீட்டாளர் ஆலோசனை!
சென்னையில் யுவர்ஸ்டோரி நடத்திய தமிழ்நாடு ஸ்டோரியின் ஒரு பகுதியாக, முதலீட்டுத் துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுனர்களான Chiratae Ventures இணை நிறுவனர் டி.சி.மீனாட்சி சுந்தரம் மற்றும் தி சென்னை ஏஞ்சல்ஸ் செயல்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் பகிர்ந்தவை இதோ.
வாடிக்கையாளர்களிடம் இருந்து முதல் டாலரை பெற முடிந்தால், முதலீட்டாளர்களின் நிதி உங்களைத் தேடி வரும் என்று, Chiratae Ventures இணை நிறுவனர் டி.சி.மீனாட்சி சுந்தரம் இளம் நிறுவனர்களுக்கு கூறினார். எந்த வகையான முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி பெறுகிறோம் என்பதை நிறுவனர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று தி சென்னை ஏஞ்சல்ஸ் செயல்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் கூறினார்.
சென்னையில் யுவர்ஸ்டோரி நடத்திய தமிழ்நாடு ஸ்டோரியின் ஒரு பகுதியாக, முதலீட்டுத் துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுனர்களோடு யுவர்ஸ்டோரி தலைமை ஆசிரியர் ஜர்ஷத் என்.கே உடன் நடத்திய கலந்துரையாடல், தொழில்முனைவில் ஆர்வம் கொண்டவர்களுக்கும், இளம் நிறுவனர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்தது.
![TN Story - Funding](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/TNStory-Funding-1721629029951.png?fm=png&auto=format&w=800)
இந்த கலந்துரையாடலில், Chiratae Ventures இணை நிறுவனர் டி.சி.மீனாட்சி சுந்தரம் மற்றும் தி சென்னை ஏஞ்சல்ஸ் செயல்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் பங்கேற்றனர்.
கலந்துரையாடலை துவக்கி வைக்கும் வகையில், தலைமை ஆசிரியர் ஜர்ஷத், தொழில்முனைவோருக்கு இருக்க வேண்டிய முக்கிய குணாதிசயங்கள் என்ன எனும் கேள்வியை முன்வைத்தார். இதற்கு மீனாட்சி சுந்தரம் மாற்றத்திற்கு ஏற்ப வளைந்து கொடுக்க வேண்டும் என்றார்.
"கோவிட்டிற்கு பிறகு நிலைமை மாறியுள்ளது. ஏஐ, ஆக்கத்திறன் நுட்பம் போன்றவை மாற்றத்தை கொண்டு வந்துள்ளன. மாற்றத்திற்கு ஈடுகொடுக்கா விட்டால் 50 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிறுவனம் நிலைக்க முடியாது எனும் நிலை இருந்தது. தற்போது மாற்றத்திற்கு ஈடு கொடுக்காவிட்டால் 20 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்க முடியாது. மாற்றத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும். மாற்றத்திற்கு ஏற்ப மாறுங்கள்," என்றார்.
![TCM](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/TNStoryTCM-1721629253819.png?fm=png&auto=format&w=800)
சிராத்தே வென்ச்சர்ஸ் டிசி மீனாட்சி சுந்தரம்
தனது கருத்தை வெளிப்படுத்திய ஏஞ்சல் முதலீட்டாளர் லட்சுமி நாராயணன்,
"வாய்ப்புகளை கவனிக்க வேண்டும். தொழில்நுட்பம் நமக்கு இருக்கிறது. வர்த்தக மாதிரி பற்றி கவனியுங்கள். அதிக வளர்ச்சி வாய்ப்புகள் துறைகள் இருக்கின்றன. அதே நேரத்தில், டீ (சாய்) போன்ற மற்ற துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. டீ துறையில் பலவிதமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எல்லா காலத்திற்குமான வர்த்தகங்கள் உள்ளன," என்றார்.
வென்சர் முதலீட்டாளர்களை நாடுவது தொடர்பான ஆலோசனை
மீனாட்சி சுந்தரம்: தொழில்முனைவு என்பது குறுகிய ஓட்டம் அல்ல, மராத்தான் ஓட்டம் போன்றது, நீண்ட காலத்திற்கு தயாராக இருங்கள். சவால்கள் பல இருக்கும், ஏற்ற இறக்கம் உண்டாகும். இவற்றை எதிர்கொள்ளும் விடாமுயற்சி வேண்டும். நிறுவனம் துவக்கும் போது மட்டும் உற்சாகம் இருந்தால் போதாது. நீடித்த தன்மை கொண்ட நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.
லட்சுமி நாராயணன்: மாறாத விஷயங்களும் இருக்கின்றன. அவற்றை கண்டுபிடியுங்கள். தொடர்ச்சி, மாற்றம் இரண்டும் சேர்ந்தே இருக்கின்றன. சில துறைகள் பல காலமாக தொடர்கின்றன. ஐடி துறை ஐம்பது ஆண்டுகளாக இருக்கிறது. இந்தத் துறை சேவை, சாஸ், ஏஐ என பல்வேறு பிரிவுகளில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
![TN Story - Lakshmi Narayanan](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/TNStory-LakshmiNarayanan-1721629467590.png?fm=png&auto=format&w=800)
ஏஞ்சல் முதலீட்டாளர் லட்சுமி நாராயணன்
நுண் நுகர்வு எனக் கூறப்படுவது இப்போது கல்வித்துறையிலும் வந்திருக்கிறது. மூன்று ஆண்டு படித்து பட்டம் வாங்குவதற்கு பதிலாக, தேவையான சான்றிதழ் படிப்பு மூலம் மேம்படுத்திக்கொள்கின்றனர், என்றார்.
நிதி திரட்டுவதில் உள்ள சவால்கள்:
"நல்ல வர்த்தகத்திற்கு நிதி கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் இருந்து முதல் டாலரை பெறுங்கள், முதலீட்டாளர்கள் டாலர் அதன் பிறகு தேடி வரும். நிறுவனங்களில் உடனே லாபம் ஈட்டக்கூடிய நிறுவனம், இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனம் என்று இருக்கின்றன. லாபம் ஈட்ட வாய்ப்பில்லாத நிறுவனங்கள் மாதிரியும் உள்ளன," என்றார் டிசிஎம்.
"உங்கள் ஐடியாவை உறுதி செய்து கொள்ளுங்கள், யாரேனும் தனிநபர்களிடம் ஐடியாவை விளக்கிக் கூறி கருத்து கேட்கலாம். அடுத்ததாக குழுவிடம் கேட்கலாம். ஏஞ்சல் முதலீட்டாளர்களை அணுகலாம். தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எந்த வகை முதலீட்டாளர்களிடம் நிதி பெறுவது என தீர்மானிப்பது முக்கியம். நீண்ட காலம் உடன் நிற்கும் முதலீட்டாளர்களை தேர்வு செய்ய வேண்டும்," என்றார் லட்சுமி நாராயணன்.
மத்திய அரசு பின்பற்றும் மாதிரியை மாநில அரசும் பின்பற்றி மானியம் அளிக்கலாம்.
நிதிகளின் நிதியில் அரசு முதலீடு செய்து ஊக்கிவிக்கலாம், என்றார்.
Edited by Induja Raghunathan