ஆப்பிள் ஐபேடில் கேம்; 11 லட்சம் காலி: சிறுவனின் செயலால் அதிர்ந்த தாய்!
வீட்டுக்குத் தெரியாமல் 11 லட்சம் ரூபாயை வீணாக்கிய சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சி
அமெரிக்காவில் 6 வயதான சிறுவன் ஒருவன் கேம் விளையாடி, வீட்டுக்குத் தெரியாமல் 11 லட்சம் ரூபாயை வீணாக்கிய சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்தவர்கள் ஜெஸிகா ஜான்சன். இவருக்கு 6 வயதில் ஜார்ஜ் ஜான்சன் என்ற மகன் இருக்கிறான். ஜெஸிகா வீட்டிலிருந்து வேலைபார்ப்பதால், அவரது குறும்ப்புக்கார மகன், செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருப்பான். இந்நிலையில், வங்கியில் தனது ஸ்டேட்மெண்டை பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட முறை பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, பணம் எதுவும் தான் அப்படி எடுக்கவில்லையே என காரணத்தை தேட ஆரம்பித்தார். மொத்தம் 2500 டாலர்கள் அவரது அக்கௌன்டிலிருந்து மாயமாகியுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், தனது வங்கிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி வங்கியில் புகார் அளித்தார்.
ஜூலை மாத தொடக்கத்தில் 2ஆயிரம் டாலர் பறிபோன நிலையில், அந்த மாத இறுதியில் 16,263 டாலர்கள் வங்கிக் கணக்கிலிருந்து யாரோ எடுத்துள்ளனர். தொடர்ந்து பணம் தனது வங்கியிலிருந்து குறைவதைக் கண்டவர், கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.
வங்கியில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, வங்கிக் கணக்கிலிருந்து ஆப்பிள் நிறுவனம் சார்பில் பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஜெஸிகாவின் ஆப்பிள் போனில் மகன் கேம் விளையாடிக் கொண்டிருந்ததால் கட்டணமாக ஆப்பிள் நிறுவனம் சார்பில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
மேலும், ஆப்பிள் நிறுவனத்தை தொடர்புகொண்டு முழுமையாக தகவல் பெற முயற்சித்துள்ளார் ஜெஸிகா. அதற்கு ஆப்பிள் நிர்வாகம் தரப்பிலிருந்து பதிலளிக்கப் பட்டுள்ளது. அதில்,
“ஐபேடில் உள்ள சோனிக் போர்ஸ் என்ற கேம் விளையாடப்பட்டுள்ளது. அதில் வழங்கப்படும், கோல்டு காயினை பெறுவதற்கு நாள் ஒன்றுக்கு 1லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை செலவிடபட்டுள்ளது,” என்று ஆப்பிள் விளக்கமளித்துள்ளது.
அப்படியாக சிறிது, சிறிதாக பணம் எடுக்கப்பட்டு, இந்திய மதிப்பில் மொத்தமாக 11லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார் ஜெஸிகா. இது தொடர்பாக, தன் மகன் அறியாமல் விளையாடி பணத்தை செலவிட்டுள்ளதாகவும், பணத்தை திருப்பி தருமாறும் ஆப்பிள் நிறுவனத்தை நாடிய ஜெஸிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சம்பவம் நடந்து 2மாதங்கள் மேலாகிவிட்டதால் பணத்தை திருப்பி தரமுடியாது என்று கைவிரித்துவிட்டது ஆப்பிள். இது தொடர்பாக பேசிய அவர்,
“விளையாட்டில் வரும் பணம், உண்மையான பணம் என்பது சிறுவனுக்கு தெரியவில்லை. அவன் விளையாட்டுப்பையன்,” என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விளக்கமளித்துள்ள ஆப்பிள் நிறுவனம்,
“வங்கிக் கணக்குகளை சரியான லாக் செய்யும் ஆப்ஷன்கள் எங்கள் நிறுவன தயாரிப்புகளில் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் பயன்படுத்துவதாக இருந்தால், பெற்றோர்கள் வங்கிக் கணக்குகளை முறையாக லாக் செய்தபின் அவர்களிடம் கொடுக்கலாம்,” என்று ஆப்பிள் நிறுவனம் சார்பில் அறிவுறுத்தபட்டுள்ளது.