உலகப் பிரபலமான தமிழகச் சிறுமி ஸ்கேட்போர்டர்!
மகாபலிபுரம் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த கமலி, 4 வயதில் இருந்து ஸ்கேட்டிங்குக்கு அறிமுகமாகி இன்ரு உலக பிரபலம் ஆன ஊக்கமிகு கதை!
தமிழகத்தின் கடற்கரை நகரமான மகாபலிபுரத்தில் ஒரு சிறுமி ஸ்கேட்டிங்போர்டில் வலம் வருகிறார். அவரது தலைமுடி காற்றில் சிறகடித்துப் பறக்கிறது. அவரது கண்கள் பிரகாசிக்கின்றன.
அந்தச் சிறுமியின் பெயர் கமலி மூர்த்தி. அவரது அம்மா சுகந்திக்கு 17 வயதிருக்கையில் அவருக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. அடைபட்டு ஒரு கூண்டுக்குள் வாழ்ந்து வந்த இவர், ஒரு கட்டத்தில் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு விடுபட்டார். ஆனால் கமலி தன் அம்மாவைப் போலல்லாமல் சுதந்திரமாக சிறகடித்துப் பறக்கத் துடித்தார். கமலி தனக்குப் பிடித்த விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு பிரபலமானார்.
போராட்டங்களும் நம்பிக்கையும்
கமலியின் உந்துதலளிக்கும் தோற்றத்தையும் அவரது அம்மாவின் போராட்டம் நிறைந்த வாழ்க்கையையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது ‘கமலி’ என்கிற குறும்படம். சஷா ரெயின்போ இயக்கிய இந்தக் குறும்படம் பாஃப்தா விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியலிலும் இடம்பெற்றது. கடந்த ஆண்டு இந்தக் குறும்படம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.
சுகந்திக்கு 17 வயதிருக்கையில் அவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது. அவரது கணவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர். மனைவியை துன்புறுத்தி வந்தார். சுகந்தி தன் கணவரை திருத்துவதற்கு பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும் வீணானது. சுகந்தி தன் குழந்தைகளான கமலி, ஹரீஷ் இருவருக்காகவும் தன் கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டிற்கே திரும்பச் சென்றதாக அந்தத் திரைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எய்ன் எட்வர்ட்ஸ் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் கமலியின் வழிகாட்டி. கமலி உடனான உரையாடலை அவர் எனக்கு அனுப்பியிருந்தார். அவரது குரல் மழலை மாறாமல் இருந்தது.
கமலிக்கு நான்கு வயதிருக்கையில் அவரது உறவினர் ஒருவரின் நண்பர் மூலம் அவருக்கு ஸ்கேட்போர்டு அறிமுகமானது. அப்போதிருந்து அவருக்கு அந்த விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
எய்ன் வார இறுதி நாட்களில் மகாபலிபுரம் செல்வது வழக்கம். 2012-ம் ஆண்டு மகாபலிபுரம் சென்றபோது கமலி ஸ்கேட்போர்டில் விளையாடுவதைப் பார்த்தார். விரைவில் குடும்ப நண்பர் ஆனார். அவர் ‘ஜீரோ ஸ்கேட்போர்ட்ஸ்’ நிறுவனர் ஜேமி தாமஸை சந்திக்க நேர்ந்தபோது கமலியை அறிமுகப்படுத்தி வைத்தார்.
தாமஸ் வெள்ளை நிற உடை அணிந்து ஸ்கேட்போர்டில் இருக்கும் கமலியின் புகைப்படத்தை பதிவிட்டார். அந்தப் புகைப்படம் வைரலாகியது. தொழில்முறை ஸ்கேட்போர்டரான டோனி ஹாக் கண்ணில் அந்தப் புகைப்படம் பட்டது. கமலியின் திறனைக் கண்டு வியந்த டோனி அவருக்கு ஸ்கேட்போர்டை பரிசளித்தார். அத்துடன் கமலி குறும்படமும் வெளியானது. இந்நிகழ்வுகளுக்குப் பின்னர் கமலியின் வாழ்க்கை மாறிப்போனது.
கமலியின் அன்றாட வாழ்க்கை இந்தக் குறும்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுகந்தி ‘செல்லக்குட்டி’ என கொஞ்சியவாறே தன் மகளை எழுப்புகிறார். அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. சகோதர சகோதரிகள் ஒருவரை ஒருவர் ‘முட்டாள்’ என கேலி செய்துகொள்கின்றனர். குழந்தைகளின் உறவினர் அவர்களை பள்ளியில் விட்டுச் செல்கிறார். அதன் பிறகு சுகந்தி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக எலுமிச்சை ஜூஸ், மசாலா மீன் ஆகியவற்றை விற்பனை செய்ய கடையை அமைக்கிறார்.
அந்தத் திரைப்படத்தில் சுகந்தி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்கிறார். 250 கி.மீட்டர் நடைப்பயணத்தை தொடங்கும்போது கலங்கிய கண்களுடன் விடைபெற்றுக்கொண்டாலும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் துணிச்சலான அம்மாவாக மிளிர்கிறார்.
“தனியாக இரண்டு குழந்தைகளை வளர்த்தெடுக்கும் அம்மாவாக பல்வேறு சவால்களை சந்திக்கிறேன். பெண் குழந்தைக்கு ஸ்கேடிங் கற்றுக் கொடுத்து நேரத்தை வீணாக்குவதாகவும் அவளது வருங்காலத்திற்கு இது உதவாது எனவும் கை, கால்களை உடைத்துக் கொண்டால் யாரும் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள் என்றும் பலர் பலவிதமான விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைக்கின்றனர். மகாபலிபுரத்தில் ஸ்கேட்டிங் செய்யும் ஒரே சிறுமி கமலி மட்டுமே. பல சிறுவர்கள் அவளை விளையாட அனுமதிப்பதில்லை,” என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
இருப்பினும் சுகந்தி இதுபோன்ற கட்டுப்பாடுகளுக்கு செவிசாய்க்கவில்லை. “எப்படிப்பட்ட சவால்களை சந்திக்க நேர்ந்தாலும் என் இரண்டு குழந்தைகளின் கனவுகளையும் நிச்சயம் பூர்த்தி செய்வேன்,” என்கிறார்.
மனதிற்கு பிடித்தவற்றில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுகிறார்
ஸ்கேட்டிங் செய்வது கமலிக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயல். அதன் மூலம் தனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி குறித்து கடல் அலைகளின் ஓசைகளுக்கிடையே பகிர்ந்துகொண்டார். அதேசமயம் சிறுவர்களின் குறுக்கீடு குறித்து புகாரளிக்கும்போது அவரது குரலில் கவலையை உணரமுடிகிறது.
“நான் மட்டுமே ஸ்கேட்போர்டிங் செய்கிறேன். அவர்கள் என்னை கிண்டல் செய்கின்றனர். இது மிகவும் கடினமான சவாலாக உள்ளது,” என்றார்.
தனது அன்றாட வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்துகொண்டபோது, காணாமல் போன மகிழ்ச்சி மீண்டும் தென்பட்டது. “நான் காலையில் எழுந்த உடன் பல் துலக்கிவிட்டு காலை உணவாக பிரெட்டும் நியூடெல்லாவும் எடுத்துக்கொள்வேன்,” என்றார் புன்னகைத்தவாறே.
பள்ளியில் ஆங்கிலம் மிகவும் பிடித்த பாடம் என்றும் அதைத் தொடர்ந்து கணிதமும் அறிவியலும் பிடிக்கும் என்றார். கமலி குறும்படம் அவரது குடும்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கமலி தற்போது பலருக்கும் பரிச்சயமானவர்.
இந்தத் திரைப்படத்திற்கு முன்பு சுகந்தி மகாபலிபுரம் தவிர மற்ற இடங்களுக்குச் சென்றதில்லை. “இந்தத் திரைப்படம் காரணமாக நான் மற்ற இடங்களுக்குப் பயணித்துள்ளேன். பல நல்ல உள்ளங்களை சந்தித்தேன். ஒரு புதிய உலகில் பயணிப்பதற்கு கமலிக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. 19 ஆண்டுகளில் இது என்னுடைய முதல் வெற்றி,” என்றார்.
கமலியின் திறமை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் அவர் ஸ்கேட்போர்டிங் பிரிவில் சிறந்து விளங்கத் தேவையான உதவி கிடைக்கும் என்று அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். ஒன்பது வயதான கமலி Jugaad தேசிய ஸ்கேட்போர்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
“மற்ற பெண் குழந்தைகள் ஸ்கேட்டிங் செய்ய கமலி உந்துதலளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நான் வருங்காலம் குறித்து கனவு காண்பதில்லை. நடப்பது நன்றாக நடக்கும் என்பதே என் நம்பிக்கை. என் குழந்தைகளின் கனவுகள் நிறைவேறுவதற்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன். என்னுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்கமாட்டேன்,” என்றார் சுகந்தி.
இந்தச் சிறுமியின் கனவு நிச்சயம் நிறைவேறும் என்பதே இவரது குடும்பத்தினரின் நம்பிக்கை. கமலி தன் நோக்கத்தில் உறுதியாக இருக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா