கதர் ஆடை, காந்திக்கு அஞ்சலி, பட்டம்: இந்தியர்களின் கவனத்தை ஈர்த்த ஜெஃப் பெஸோஸ்!
3 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்து சென்ற அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பெஸோஸ் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்க என்னவெல்லாம் செய்திருக்கிறார் தெரியுமா?
அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர், வியாபார காந்தம், முதலீட்டாளர், அமேசான் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைவர் என இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆன்லைன் வர்த்தகத்தில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனத்தின் அடிநாதமே ஜெஃப் பெஸோஸ் தான்.
இந்தியாவில் மட்டும் அமேசான் 61 சதவிகித ஆன்லைன் வர்த்தகத்தை செய்கிறது. பிளிப்ஃகார்ட், அலிபாபா என சில்லறை வணிகம் செய்யும் இதர ஆன்லைன் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளிக் கொடுத்து தொடர் சந்தாதாரர்களாக்கி அவர்களை தங்கள் வசமே வைத்துக் கொண்டிருக்கிறது அமேசான்.
அமேசான் இந்தியா பிரிவு இங்கு உள்ள சிறு, நடுத்தர தொழில்களை வளர்க்கும் முயற்சியில் 1 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யும் விதமாக முக்கிய நிகழ்வாக அமேசான் ’சம்பவ்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பங்கேற்பதற்காக ஜெஃப் பெசோஸ் கடந்த 14ம் தேதி இந்தியா வந்தார்.
டெல்லி வந்திறங்கியவர் ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார். கோட் சூட்டுடனே இருக்கும் பெஸோஸ் காந்தி நினைவிடம் வரும் போது வெள்ளை நிற குர்தா மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கோட் அணிந்திருந்தார்.
இந்திய வருகை குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த ஜெஃப் பெஸோஸ்,
“இப்போது தான் இந்தியா வந்தேன், உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மாபெரும் மனிதருக்கு என்னுடைய மரியாதையை செலுத்தினேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அமேசான் ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு தொழில்கள் நசுங்குவதாக குற்றம்சாட்டி நாடு முழுவதும் வியாபாரிகள் சங்கத்தினர் ஜெஃப் பெஸோஸ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் சங்கராந்தியை முன்னிட்டு சிறுவர்கள் பட்டம் விட்டு மகிழ்ந்து கொண்டிருந்ததில் ஜெஃப் பெஸோசும் இணைந்தார். அப்போதும் கதர் ஆடை அணிந்து வந்திருந்தவர், சிறுவர்களிடம் தானும் பட்டம் விட விரும்புவதாகக் கூறினார்.
சிறுவர்களே பட்டம் விட கற்றுக்கொடுக்கும் பயிற்றுநர்களாக மாறி எப்படி பட்டத்திற்கு நூல் விட்டு பறக்க விட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தனர். சிறுவர்கள் கூறுவதைக் கேட்டு அப்படியே செயல்படுத்தியவர் என்னுடைய பட்டம் நன்றாக பறக்கிறது என்று மகிழ்ந்தார். தொடர்ந்து நீங்கள் எல்லாம் சிறந்த பயிற்றுநர்கள் என்று கூறி அவர்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றார்.
பொதுஇடங்களுக்கு வரும்போதெல்லாம் ஜெஃப் பெஸோஸ் கதர் ஆடைகளையே உடுத்தி வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமேசான் சம்பவ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்,
“இந்தியாவில் தயாரிக்கப்பட்டப் பொருட்களை அதிகமாக ஏற்றுமதி செய்வதில் அமேசான் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி மதிப்பை 10 பில்லியன் டாலர் வரையில் அமேசான் உயர்த்தும். 2023ம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய ஏற்கெனவே இலக்கு நிர்ணயித்துள்ளோம்,” என்றார்.
ஏற்றுமதியை மேம்படுத்தும் திட்டத்தில் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் கிராமங்களிலும் டிஜிட்டல் மையங்கள் அமைக்கப்படும். அதன் மூலம் மின்னணு வர்த்தகம், பொருட்களை டெலிவரி செய்வது, லாஜிஸ்டிக், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட சேவைகள் எளிதாக்கப்படும்.
இந்தியாவில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை வளர்க்க 1 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யப்படும் என்றும் ஜெஃப் பெசோஸ் உறுதியளித்தார்.
இந்தியா வந்து அமெரிக்கா திரும்பியுள்ள ஜெஃப் பெஸோஸ் தனது பயணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் புத்துணர்ச்சியோடும் எல்லையில்லா மகிழ்ச்சியுடனும் திரும்புகிறனே். தற்போதும் அதனை நான் பெற்றுள்ளேன்.
என்னை ஈர்த்துள்ள இந்திய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். வரும் 2025-ம் ஆணடுக்குள் இந்தியாவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை அமேசான் இலக்காக கொண்டு செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஜெஃப் பெஸோஸ் தனது வருகை குறித்து மகிழ்ந்தாலும் சிறு, குறு வர்த்தகர்களும், மத்திய அரசும் அவர் மீது அதிருப்தியாகவும் இருந்ததாகவே தெரிகிறது. ஜெஃப் பெஸோஸின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தை இதற்குக் காரணமாக எடுத்துக் கொள்ள முடியும். இந்தியர்களை ஈர்க்க ஜெஃப் பெஸோஸ் எடுத்த முயற்சிகள் கைகொடுத்திருக்கிறதா என்ற கேள்வி தொடங்கி இருக்கிறது.
கட்டுரை தொகுப்பு : கஜலெட்சுமி