பீகார் குக்கிராமத்தில் உருவெடுத்த அரசியல்வாதி - துணை முதல்வர் ஆகும் இந்த ரேணு தேவி யார்?
தொடர்ந்து 4வது முறையாக பீகாரை ஆளப்போகிறார் நிதீஷ்குமார். பாஜகவின் ஒப்பந்ததின்படி முதல்வராக நிதீஷ் பொறுப்பேற்றிருக்கிறார். துணை முதல்வர் பதவி பாஜக தரப்பில் ஒருவருக்கு கொடுக்கவேண்டும். அதன்படி, 'சுஷில் மோடி’ துணை முதல்வர் பொறுப்பேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கு மாறாக பெண் ஒருவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
அவர் தான் ரேணு தேவி!
அவருடன் தர்கிஷோர் பிரசாத்தும் துணை முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சரி! ரேணு தேவியின் வரலாற்றை சற்று ரீவைண்ட் செய்து பார்ப்போம்.
அது ஒரு குக்கிராமம். பீகாரின் குக்கிராமம் எப்படியிருக்கும் என்பது நமக்குத் தெரியும். அப்படியான குக்கிராமத்தில் 1959ம் தேதி நவம்பர் மாதம் பிறந்தவர் தான் ரேணுதேவி. அவர் பிறந்த கிராமம் மட்டும் பின்தங்கியதில்லை, சாதியும் கூட.
ஆம்! (ஈபிசி) பிரிவின் நோனியா சாதியைச்சேர்ந்தவர் ரேணு. தன்னார்வத் தொண்டு பணிகளில் ஆர்வம் மிக்கவராக இருந்த ரேணு, வாக்கு அரசியலுக்கு தன்னை பரிணமித்துக் கொண்டார்.
அதன்படி, 1988ல் பாஜகவின் தன்னை இணைத்துக்கொண்டார். அவரின் உழைப்பே, பொறுப்பை நோக்கி தள்ளியது பா.ஜ.கவில் சேர்ந்த அடுத்த ஆண்டே ‘சம்பரன்’ மகளிர் அணித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய வளர்ச்சி என்பது சாதரணமாக இருக்கவில்லை.
கடும் உழைப்பு, தலைமைப்பண்பு இவற்றைக்கண்ட கட்சி மேலிடம் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி கௌரவித்தது. 1993 பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ பெண்கள் பிரிவான ‘மஹிலா மோர்ச்சா’வின் மாநிலத் தலைவர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார்.
சொல்லப்போனால் இந்த பதவிகளையெல்லாம் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பார்ப்பு, பதவி ஆசை இல்லாததே தொடர்ந்து 1996ம் ஆண்டிலும் இதே பதவியை தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.
இதனிடையே 1995ல் பாஜகவுக்கான தனது முதல் தேர்தலில் நவுடான் தொகுதியில் போட்டியிட்டு அதில் தோல்விகண்டார். ஆனால் 2000, 2005 மற்றும் 2010 தேர்தல்களில் மூன்று முறை பீகாரின் பெட்டியா தொகுதியில் இருந்து தேர்வாகி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் ரேணு.
இதில் 2005 மற்றும் 2009ல் அமைச்சர் பதவி கிடைத்தது. விளையாட்டு மற்றும் கலாச்சார அமைச்சராக ரேணு தேவி இருந்தார். பட்டியலின மக்களின் பிரதிநிதி என்று அங்கீரிகப்பட்ட ரேணு, பெட்டியா சட்டமன்ற தொகுயில் 2000 ஆண்டிலிருந்து 5 முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதன்பின் 2014ல் கட்சியின் துணைத் தலைவராக புரோமோஷன் பெற்றார் ரேணு.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் துர்கா வாகினி அடுத்து பிஜேபி-ன் மகிளா மோர்ச்சா என்று பாராட்டப்பட்ட ரேணு தேவி அரசியலில் நீண்ட காலமாக இருக்கிறார்.
பீகாரின் மிகவும் பின்தங்கிய சாதியின் ஒரு பெண் தலைவர்!
தேசிய அளவில் பனியா சமூகம் பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் உயர்ந்த சாதியாக இருந்தாலும் அதன் உள்பிரிவான நோனியா சாதி பீகாரில் மிகவும் பின்தங்கிய வர்க்க (ஈபிசி) சமூகத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
தனது நம்பிக்கையான செயல்பாடுகளால் கடந்த 15 ஆண்டுகளில் ஈபிசி பிரிவை தனது விசுவாசமான வாக்கு வங்கியாக உருவாக்கியுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார். இந்த சமூகத்தின் மிக முக்கியத் தலைவராக தனது அமைச்சரவையில் கோலோச்சிய ரேணுவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கும் பட்சத்தில், அவர் சார்ந்த சமூகத்துக்கு முக்கியவத்துவம் கொடுக்கும் வகையில் வகையில் அமையும் என்று நிதீஷ் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
பாருங்கள் காரை விட்டு இறங்காமல் அரசியல் செய்து பதவிக்கு வர நினைக்கும் மனிதர்களுக்கு மத்தியில் ரோடுகளே இல்லாத மலைப்பகுதியில் அரசியலில் அங்கீகாரம் கிடைத்த பிறகும் கட்சியை வளர்க்கும் ரேணு தேவியின் அர்ப்பணிப்புக்காக கடவுள் அளித்த பரிசு தான் பீகாரின் துணை முதல்வர்!
கட்டுரையாளர்: மலையரசு