நடுவானில் மதுரை ஜோடியின் வைரல் திருமணம்: ஸ்பைஸ்ஜெட் குழு மீது நடவடிக்கை!
ஊரடகை மீறியதற்காக விசாரணை!
தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கு மேலும் ஒரு வாரம் எந்தவித தளர்வுகளும் இல்லாமல் இன்று முதல் இந்த மாதம் 30ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் நோய் தொற்று ஏற்படுவதை குறைக்கும் வகையில் திருமண மண்டபங்களில் மணவிழா நடத்துவதற்கும், இறப்பு நிகழ்ச்சிகளில் கூட உறவினர்கள் பங்கேற்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, திருமணம் செய்யத் தயாராக இருந்த நூறாயிரக்கணக்கான தம்பதிகள் தங்களது விருந்தினர்களின் பட்டியலையும் பல நிகழ்வுகளையும் கூட குறைக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது அன்புக்குரியவர்கள் அனைவரின் முன்னிலையிலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தனித்துவமான யோசனைக்காக தலைப்புச் செய்திகளிலும், சர்ச்சையிலும் இடம் பெற்றுள்ளனர்.
ராகேஷ்-தக்ஷினா என்ற அந்த ஜோடி மதுரை-பெங்களூரூ செல்லும் ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானத்தின் டிக்கெட்டுகள் அனைத்தையும் முன்பதிவு செய்து, 161 உறவினர்களை அழைத்துக் கொண்டு செல்லும் போது நடுவானில் பறந்தபோது திருமணம் செய்துகொண்டுள்ளனர். நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா காலத்தில் யாரும் மறக்க முடியாத அளவுக்கு தங்களது திருமணம் அமைய வேண்டும் என்ற ஆசையில், இப்படி நடுவானில் பறந்தபடி திருமணம் செய்து கொண்டுள்ளனர் அந்த ஜோடியினர்.
இந்த திருமணத்தின் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்போது, இந்தத் திருமணம் குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கேள்வி எழுப்பியதோடு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் மீது கொரோனா விதிகளைப் பின்பற்றாதது குறித்தும் வானில் கோவிட் நடைமுறை பின்பற்றாதது பற்றியும் உரிய வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று விமான இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், விசாரணை நடத்தி திருமணம் நடந்த விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்தது.
ஆனால், இந்த விசாரணைக்கு பதில் கொடுத்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், கட்டுப்பாடுகளின்படி கொரோனா விதிகளை மீறக்கூடாது என விமானத்தை வாடகைக்கு எடுத்த ஜோடி தரப்பிடம் தெரிவித்திருந்தோம்.
ஆனால் நடுவானில் திருமணம் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது பற்றி எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஒருபுறம் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மறுபுறம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.