7,500 ரூபாயில் செயற்கை சுவாசக் கருவி - மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய முன்வடிவம்!
கொரோனா பாதிப்புக்கு உதவிட மஹிந்திரா நிறுவனம் பல அறிவிப்புகளை தொடர்ந்து செய்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராடும் முயற்சியில் பங்களிக்கும் விதமாக மஹிந்திரா & மஹிந்திரா முதல்கட்டமாக 'பேக் வால்வ் மாஸ்க் வெண்டிலேட்டரின்' ஆட்டோமேடட் பதிப்பின் முன்வடிவத்தை உருவாக்கியுள்ளது.
வடிவமைப்பை எளிதாக்கவும் தயாரிப்புத் திறனை அதிகரிக்கச் செய்யவும் உதவும் வகையில் தற்போதுள்ள தயாரிப்பாளருடன் மேலும் இரண்டு பெரிய பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்கை சுவாசக் கருவிகளின் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணும் நிறுவனத்தின் முயற்சி குறித்து மஹிந்திரா & மஹிந்திரா நிர்வாக இயக்குநர் பவன் கோயன்கா கூறும்போது,
“ஒருபுறம் வடிவமைப்பை எளிதாக்கவும் தயாரிப்புத் திறனை அதிகரிக்கவும் தற்போதுள்ள தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாது கூடுதலாக இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். எங்களது பொறியியல் குழுவினர் தற்போது இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்,” என்றார்.
அடுத்தடுத்த ட்வீட்களில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “மற்றொருபுறம் பேக் வால்வ் மாஸ்க் வெண்டிலேட்டர் தொடர்பாகவும் பணியாற்றி வருகிறோம். இதற்கான முன்வடிவம் தயாராகி அனுமதி கிடைத்த பிறகு தயாரிப்புப்பணி தொடங்கும்,” என்றார்.
அத்துடன் மஹிந்திரா & மஹிந்திரா உருவாக்க உள்ள நவீன செயற்கை சுவாசக் கருவியின் விலை 7,500 ஆகும். இதுபோன்ற கருவிகளின் விலை 10 லட்ச ரூபாய் மதிப்புடையது.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கண்டிவல்லி மற்றும் இகாத்புரி பகுதிகளில் தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட குழுவின் முயற்சியை பாராட்டினார். இவர்கள் உறக்கமின்றி 48 மணி நேரம் செலவிட்டு இந்த முன்வடிவத்தை உருவாக்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு தீர்வுகாண்பதில் உதவும் வகையில் அதன் தொழிற்சாலைகளில் செயற்கை சுவாசக் கருவிகளை தயாரிக்கும் பணியில் உடனடியாக ஈடுபட உள்ளதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஏற்கெனவே அறிவித்திருந்தார். கோயன்கா கூறும்போது,
“செயற்கை சுவாசக் கருவிகளை உருவாக்கும் எங்களது முயற்சியில் நிறுவனங்களும் தனிநபர்களும் அதிகளவில் ஆதரவளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.
தகவல்: பிடிஐ