ஹெச்டிஎப்சி-ன் வளர்ச்சிக்கு வித்திட்டவர்; மல்லையாவை தள்ளி வைத்தவர்: யார் இந்த ஆதித்யா பூரி?!
ஹெச்டிஎப்சி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஆதித்யா பூரியின் வாழ்க்கை பயணம்!
அப்போது அந்த ஹெச்டிஎஃப்சி வங்கி ஒரு ஸ்டார் அப் நிறுவனம் மட்டும் தான். அதில் தலைமைச் செயல் அதிகாரியாக இணைந்தவர் ஆதித்யா பூரி. இன்று தவிர்க்க முடியாத ஆளாக மாறியிருக்கிறார்.
சர்வதேச அளவில் சிறந்த வங்கியாளர் ஆதித்யா பூரி என எக்கனாமிஸ்ட் பத்திரிகை சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது. 70வயதைக் கடந்த ஆதித்யா பூரி மார்ச் 26ம் தேதி ஓய்வு பெற்றார்.
ஆதித்யா பூரியின் பயணம்:
ஹெச்டிஎஃப்சி-ன் நிறுவனர் தீபக் பரேக் அழைத்ததன் பேரில், தான் பணியாற்றிக் கொண்டிருந்த சிட்டி வங்கி வேலையை உதறித்தள்ளிவிட்டு, புதிதாக தொடங்கப்பட்ட ஹெச்டிஎஃப்சி வங்கியில் இணைந்தார். 1994ம் ஆண்டு முதல் ஓய்வு பெறுவதற்கு முன்புவரை 26 ஆண்டுகள் வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார் ஆதித்யா.
சர்வதேச அளவில் 10வது பெரிய வங்கியாக ஹெச்டிஎஃப்சி உருவெடுத்ததற்கு ஆதித்ய பூரி முக்கியக் காரணம். வங்கியில் மொத்தம் 1.23 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். வங்கியின் சந்தை மதிப்பு ரூ.7லட்சம் கோடி.
புதுமையான சேவைகள், தொழில்நுட்ப ரீதியில் பல முன்னெடுப்புகள் என பல வகைகளிலும் ஹெச்டிஎப்சி வங்கி தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. இதில் ஆதித்யா பூரியின் பங்கு அளப்பரியது.
ஹெச்டிஎப்சி தொடங்கியதிலிருந்து இன்று வரை 16 ஆயிரம் சதவீதம் அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. ஆண்டுக் கணக்கில் பார்த்தால் 22சதவீத வளர்ச்சியை (CAGR) முதலீட்டாளர்களுக்கு இந்த வங்கி கொடுத்திருக்கிறது.
26 ஆண்டுகள் 22% வளர்ச்சி என்பது மிகப்பெரிய சாதனை. இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வது, தெளிவான இலக்கு, திறமையானவர்களைக் கண்டறிவது. பூரியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
வாராக்கடன் தொல்லை தான் வங்கிகளில் பெரிய தலைவலி. பொதுத்துறை மட்டுமல்ல, தனியார் வங்கிகளின் வாராக்கடனும் அதிகரித்து வரும் சூழலில், ஹெச்டிஎப்சியின் வாராக்கடன் மார்ச் மாதம் முடிவில் 1.3 சதவீதம் என்ற குறைந்த அளவிலே இருக்கிறது.
ஆதித்யா பூரியின் சமயோஜித புத்தி, அவருடைய கொள்கைகள் வங்கிக்கு பெரிய அளவில் உதவியிருக்கின்றன. உதாரணமாக, கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா ஆதித்யா பூரிக்கு நன்கு பழக்கம். நினைத்திருந்தால் ஆதித்யா அவருக்கு கடன் வழங்கியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. நட்பு வேறு, தொழில் வேறு என்று நகர்ந்து கொண்டார்.
வங்கித் துறையினருக்கு முன்மாதிரியாக விளங்கும் ஆதித்யா பூரி
“இது என்னுடைய வங்கி அல்ல, ஒருலட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் உழைப்பால் செயல்படும் வங்கி,” என கூறிவந்தார்.
கட்டுரை தொகுப்பு: மலையரசு