Man vs Wild நிகழ்ச்சியில் ரஜினி: அரசியல் ரீதியாக கைக்கொடுக்குமா?
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் பியர் கிரில்ஸ்-ன் Man vs Wild நிகழ்ச்சியில் தன் வயதையும் பொருட்படுத்தாது ரஜினி கலந்து கொள்வதன் பின்னணியில் மாபெரும் அரசியல் காரணம் இருக்கிறதா?
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிரபலமானது ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ ’Man vs Wild.’ இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் சாராம்சமே சாகசங்கள் நிறைந்த வாழ்க்கை முறை தான்.
அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது, கையில் கிடைக்கும் பொருட்களை எப்படி உணவாக்கிக் கொள்வது என்பது குறித்து சுவாரஸ்யமாக பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குவார் எனக் கூறுவதை விட வாழ்ந்து காட்டுவார் என்று தான் கூற வேண்டும்.
மக்களிடம் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுவதற்காக அடிக்கடி சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வதுண்டு. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி போன்றோர் அவர்களில் முக்கியமானவர்கள். இந்த நிகழ்ச்சி அவர்களது அரசியல் வாழ்க்கைக்கும் உதவிகரமாக இருந்தது மறுக்க இயலாதது.
அந்த வரிசையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மோடிக்குப் பிறகு கலந்து கொள்ளும் இரண்டாவது இந்திய பிரபலம் ரஜினி தான்.
கர்நாடகா மாநிலம் பந்திபூர் புலிகள் காப்பகத்தில் அதற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்காக இரண்டு நாட்கள் காட்டுப்பகுதியில் ரஜினி தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தங்களது இளமைக்கால வாழ்க்கை, கடந்து வந்த கஷ்டங்கள் என பலவற்றை மக்களோடு பகிர்ந்து கொண்டனர். எனவே, ரஜினி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் அதே போன்று சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேச வேண்டிய கருத்துக்களை ஒபாமாவும், மோடியும் சரியாக கொண்டு போய் சேர்த்தனர்.
‘நானும் உங்களைப் போன்ற சாதாரண, எளிமையான, பகட்டில்லாத ஆள் தான்’ என்பதை வெளிப்படுத்த இந்த நிகழ்ச்சியை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, பியர் சாப்பிட்ட பாம்பு, தவளைகளைக் கூட தயக்கமில்லாமல் ஒபாமா சாப்பிட்டார். ஆனால் மோடி அவ்வாறு செய்யவில்லை. அவர் மாமிசம் சாப்பிட மறுத்து விட்டார். மோடிக்காக நிகழ்ச்சியின் போது உணவு சமைத்துத் தரவும் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
‘நான் விலங்குகள் வந்தால் கொலை செய்ய மாட்டேன். எனக்கு கொலை மீது நம்பிக்கை இல்லை. கடவுள் எனக்கு உதவி செய்வார்,’ என அதற்கான விளக்கத்தையும் மோடி தெளிவாக வெளிப்படுத்தினார்.
பியர் ஆங்கிலத்தில் பேசினாலும், வட இந்திய மக்களிடம் தனது கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தியில் மட்டுமே பேசினார் மோடி. இதனாலேயே இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது.
அமெரிக்காவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியாக ஒபாமா கலந்து கொண்ட எபிசோட் சிறப்புப் பெற்றது. இதேபோல், மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் உலகம் முழுக்க அதிக நபர்களால் பார்க்கப்பட்ட எபிசோட் ஆக மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி சாதனை படைத்தது. இப்போதும் மோடியின் அந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. மேலும் அப்போது நடந்த லோக்சபா தேர்தலிலும் இந்த நிகழ்ச்சியின் தாக்கம் பெரிதாக பாஜகவிற்கு உதவியது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்றுள்ளார். மைசூருக்கு விமானத்தில் சென்றடைந்த ரஜினியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. வழக்கம் போலவே ரஜினியுடன் அவரது மூத்தமகள் ஐஸ்வர்யாவும் சென்றுள்ளார். விரைவில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரஜினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒபாமா, மோடியை போன்றே தன்னுடைய இமேஜை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ரஜினி இந்த நிகழ்ச்சியைக் கையில் எடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தீவிர அரசியலில் இறங்கி வரும் நடிகர் கமல், ரஜினி போன்றோர் வெள்ளித்திரையை விட சின்னத்திரை மூலமே அதிக மக்களைச் சென்றடைய முடியும் என நம்புகின்றனர். எனவே தான், பிக் பாஸ் மேடையை தனக்கானதாக கமல் சரியாகப் பயன்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், ரஜினியும் பெரியார் சர்ச்சைப் பேச்சு, எதிர்பார்த்த வெற்றியைத் தராத தர்பார் போன்ற சறுக்கல்களை இந்த நிகழ்ச்சி மூலம் மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே ஆன்மீகம் பற்றி அதிகம் பேசும் ரஜினி, இந்த நிகழ்ச்சியிலும் தனது ஆன்மீக அரசியல் பற்றி பேசுவார் எனத் தெரிகிறது. அதோடு, தன்னுடைய வறுமையான இளமை காலம், தொடக்கத்தில் சினிமாவில் கஷ்டங்கள், அவமானங்கள், அரசியலில் குதித்ததன் காரணம் பற்றியும் பேசுவார் எனத் தெரிகிறது.
எப்படியும் சினிமாவில் செய்வது போல், ரஜினி இந்த நிகழ்ச்சியிலும் சாகசம் எதையும் மேற்கொள்வார் என எதிர்பார்க்க முடியாது. எனவே நிகழ்ச்சி உணர்ச்சிகரமானதாக இருக்கும் எனத் தெரிகிறது.
ஆனாலும் பியருடன் காட்டில் மேற்கொண்ட பயணத்தில் ரஜினிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. தற்போது சென்னை திரும்பிய ரஜினி விமான நிலையத்தில் பேட்டி கொடுத்தபோது,
”தனக்கு லேசான காயம் தான் என்றும், ஷூட்டிங்கில் போது காட்டுப்பகுதியில் முட்புதர்கள் குத்தியதால் ஏற்பட்ட சிறிய சிராய்ப்புகள் தான் என்றார். அதோடு இன்றைய நாள் ஷூட்டிங் நல்லபடியாக முடிந்ததாகவும்,” தெரிவித்தார்.
இரவு நேரங்களில் அங்கு படப்பிடிப்பு நடத்தப்படுவதில்லை. காலை முதல் மாலை வரை மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக ரஜினி சென்னையில் இருந்து புறப்பட்டது முதலே பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார். முதலில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், பயணம் தாமதமானது. தற்போது அவருக்கு தோளில் காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் மூலமாக இப்போதே ரஜினி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி மக்களிடையே எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கி விட்டது.
எனவே, அதிக நபர்களால் பார்க்கப்பட்ட மேன் வெர்சஸ் வைல்ட் என்ற மோடியின் சாதனையை ரஜினி முறியடிப்பாரா? ஒபாமா, மோடி போன்றோருக்கு கைக் கொடுத்தது போல மேன் வெர்ஸ்ட் வைல்ட் நிகழ்ச்சி ரஜினிக்கும் அரசியல் ரீதியாக கைகொடுக்குமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
கர்நாடகா ஏன்?
மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்டது. ரஜினி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபூர் புலிகள் காப்பகத்தில் நடத்தப்படுகிறது. பந்திபூர் காட்டுப்பகுதி கர்நாடக - கேரள மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இது புலிகள் பாதுகாப்புச் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பகுதி. இந்தப் பகுதியில் இன்றும், வரும் 30ம் தேதியும் என இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
படப்பிடிப்பு முடிந்த பிறகு படப்பிடிப்பு காட்சிகளை வனத்துறை அதிகாரிகள் பார்த்த பிறகே அதற்கான அனுமதி வழங்குப்படும். முதலில் வடமாநில காட்டுப் பகுதிகளில் தான் இந்த நிகழ்ச்சியைப் படமாக்க திட்டமிட்டதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மைசூருக்கு மாற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘வனத்துறை இதுபோன்ற படப்பிடிப்புக்கு அனுமதி தருவதை நிறுத்த வேண்டும். வன விலங்குகளுக்கு இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. சினிமா மட்டும் அல்ல ஆவணப் படங்களுக்கும் வனப்பகுதியில் அனுமதி கொடுக்க கூடாது,’ என்பதே இயற்கை ஆர்வலர்களின் வாதம்.
சுல்தான் பட்டேரி மலைப்பகுதி, முல்லிகோள், மதூர் மற்றும் கல்கேரி மலைப்பகுதி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாவுக்கோ, வனத்துறைப் பணிகளுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது.
ரஜினியுடன் இந்த நிகழ்ச்சியில் வரும் 30ம் தேதி பாலிவுட் நட்சத்திரமான அக்ஷய் குமாரும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார், ரஜினியுடன் 2.0 படத்தில் சேர்ந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.