கொரோனா காலத்தில் இந்தியர்கள் ஆன்லைனில் அதிகம் தேடுவதை எதை?
ஊரடங்கு சமயத்தில் ஆன்லைனில் மக்கள் அதிகம் தேடிய அல்லது அதிகம் தொடர்பில் இருந்த வார்த்தைகள் குறித்து இங்கு பார்ப்போம்:
டிஜிட்டல் உலகில் ஆன்லைன் தேடல் என்பது நுகர்வோரின் இடம், மொழி, சூழல், விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு தனிநபரின் விருப்பத்திற்கேற்ப அரசியல், சினிமா, பாடல்கள், விளையாட்டு, கல்வி, பொழுதுபோக்கு என வெவ்வேறு பிரிவுகளின்கீழ் இந்தத் தேடல் (search) அமைந்திருக்கும்.
ஆனால் கிட்டத்தட்ட பிப்ரவரி மாதம் வரை பல்வேறு பகுதிகளில் இப்படிப் பரந்து விரிந்திருந்த தேடல்கள் திடீரென்று ஒரே பகுதியில் சுருங்கிவிட்டது. கொள்ளை நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கிய காலகட்டம் முதல் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சொல்லப்போனால் கி.மு, கி.பி என்பது போல கொரோனாவிற்கு முன், கொரோனாவிற்கு பின் (கொ.மு, கொ.பி) என்று வரலாற்றில் பொறிக்கப்படும் அளவிற்கு இந்த வைரஸ் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைனில் மக்கள் அதிகம் தேடிய அல்லது அதிகம் தொடர்பில் இருந்த வார்த்தைகள் குறித்து இங்கு பார்ப்போம்:
கொரோனா வைரஸ் தொடர்புடைய தேடல்கள்
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய இந்த வைரஸ் மெல்ல பல நாடுகளுக்குப் பரவி வருகிறது. இந்தப் பரவல் அதிகரித்தது போலவே இந்தத் தொற்று குறித்த அச்சமும் மக்கள் மனதில் அதிகரித்தது.
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் ‘கொரோனா வைரஸ்’ என்கிற வார்த்தை 1.6 கோடி முறை தேடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்த வார்த்தை 2,400 முறை மட்டுமே தேடப்பட்டது. அதேபோல் டிசம்பர் மாதத்தில் வெறும் 40 முறை மட்டுமே தேடப்பட்ட ‘கொரோனா வைரஸ் அறிகுறி’ என்கிற வார்த்தை பிப்ரவரி மாதத்தில் 12.2 லட்சம் முறை தேடப்பட்டுள்ளது.
இதுதவிர கொரோனா வைரஸ் நோய், கொரோனா வைரஸ் சிகிச்சை, கொரோனா வைரஸ் வருதற்கான காரணங்கள், கொரோனா வைரஸ் தொற்று, கொரோனா வைரஸ் தடுப்பூசி, கொரோனா வைரஸ் நோய் கண்டறிதல் போன்ற வார்த்தைகளும் அதிகளவில் தேடப்பட்டுள்ளது.
ஹைட்ராக்சி குளோரோகுயின்
மலேரியா தடுப்பு மருந்தான ஹெச்.சி.க்யூ எனப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என்கிற செய்தி பரவத் தொடங்கியதும் இதற்கான தேடல் அதிகரித்தது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த மாத்தியைப் பரிந்துரை செய்த பிறகு இதற்கான தேடல் மேலும் அதிகரித்தது.
அத்தியாவசியப் பொருட்கள்
மக்கள் அனைவரும் நோய்தொற்று பரவலைத் தடுக்க வீடுகளில் முடங்கியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களான பால், மளிகை, மருந்து, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக கடைகளுக்குச் சென்று வாங்க முடியாமல் போன சூழலில் பெருமபாலானோர் ஆன்லைனில் வாங்குகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் வரக்கூடும் என்கிற அச்சத்தில் மக்கள் அதிகளவில் பொருட்களை வாங்குகின்றனர். இதற்கான பிரத்யேகத் தளங்களிலும் ஆர்டர்களை பூர்த்திசெய்யமுடியாத நிலை காணப்படுகிறது. இதன் விளைவாக ஆன்லைனில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் தளங்களுக்கான தேடலும் கணிசமாக அதிகரித்துள்ளது.
மருத்துவப் பொருட்கள்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும் என்றும் சானிடைசர் பயன்படுத்தவேண்டும் எனறும் முகக்கவசம் அணியவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதில் குறிப்பாக முகக்கவசம் தொடர்பான தேடல்கள் அதிகம்.
N95 மாஸ்க், மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தக்கூடிய மாஸ்க் போன்றவை அதிகளவில் தேடப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு
வார இறுதி என்றாலே கொண்டாட்டம் என்று இருந்த காலம் மறைந்துவிட்டது. அனைவரும் பல நாட்களாக வீட்டிலேயே முடங்கி மன அழுத்ததிற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பொழுதுபோக்கு தொடர்பாக மக்கள் அதிகம் தேடுகின்றனர். பல ஆன்லைன் விளையாட்டுகள் இணையத்தில் ஆராயப்பட்டு பலரைக் கவர்ந்துள்ளது.
அதேபோல் அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அசுர வளர்ச்சியடைந்துள்ளது எனலாம். அமேசான் சப்ஸ்கிரிப்ஷன், நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் போன்றவை அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளாகும்.
தூர்தர்ஷனில் 80-களில் திரையிடப்பட்ட 'ராமாயணம்’ இத்தனை ஆண்டுகள் கழித்து திடீரென்று பலரது கவனத்தை ஈர்த்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.
மெய்நிகர் சந்திப்பு செயலிகள்
Zoom செயலி, கூகுள் ஹேங்அவுட்ஸ், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போன்ற சேவைகள் மக்களை ஒன்றிணைக்கிறது. ஜூம் செயலி பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிநபர்கள் என பலரைச் சென்றடைந்துள்ளது. இன்றைய லாக்டவுன் சூழலில் அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரிந்தும் படித்தும் வருவதால் பலர் இதுபோன்ற சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
உடலளவில் விலகி இருக்கும் பலரை மெய்நிகர் வடிவில் செயலிகள் ஒன்று சேர்க்கிறது. எனவே வெளியில் சென்று நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்க முடியாதவர்கள் இதுபோன்ற செயலிகளை அதிகம் நாடுகின்றனர்.
மன நலம் சார்ந்த தேடல்
வைரஸ் தொற்று, பெருந்தொற்று, கொள்ளைநோய், தனிமைப்படுத்திக்கொள்ளுதல், விலகியிருத்தல் போன்றவற்றை கடந்த பல ஆண்டுகளாகவே உலக மக்களுக்கு பரிச்சயமில்லாதவை. இந்த வைரஸ் தொற்றிக்கொள்வது உடலாக இருப்பினும் பாதிப்பு உடலைக் காட்டிலும் மனதிற்கே அதிகம். நமக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ தொற்று ஏற்பட்டுவிடக்கூடும் என்கிற பயம் மேலோங்கும் தருணத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இதனால் தனிமை, சிகிச்சை, குடும்ப வன்முறை, ஆன்லைன் தெரபி போன்றவை தொடர்பான தேடல்கள் அதிகரித்துள்ளது.
தமிழில்: ஸ்ரீவித்யா.