சென்னையில் ‘ஹேன்ட் வாஷ்’ மும்பையில் ‘கான்டம்ஸ்’- டன்சோ ஹிட் ஆர்டர்ஸ்!
கொரோனா வைரஸ் சவாலை சந்திக்க சென்னை மக்கள் கவலையுற்ற சமயத்தில், மும்பை மக்கள் லாக்டவுனிலும் தங்கள் பொழுதை ஜாலியாகக் கழிப்பது தெரியவந்துள்ளது.
நாடே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வீட்டினுள் முடங்கிக் கிடக்கிறது. எப்போதும் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பிரபல மெட்ரோ நகரங்களான மும்பை, டெல்லி, சென்னை; மக்கள் கடந்த ஒரு மாதமாக வீட்டிற்குள் அடைந்துள்ளனர்.
ஊரடங்கின் காரணமாக பலரும் வீட்டில் இருந்து பணி செய்கின்றனர். வார இறுதி நாட்களில் வெளியே சென்று பொழுதை போக்கிய நகர மக்கள் நான்கு சுவற்றுக்குள் இருக்கும் கட்டாயத்தில் உள்ளனர். சமூக விலகல் பின்பற்ற வேண்டிய நிலையில் குடும்பத்துடன் நேரம் செலவிடும் பழக்கம் அதிகரித்துள்ளது இந்த கொரோனாவினால் நிகழ்ந்த ஒரு நன்மை.
குழந்தைகளுடன் விளையாடுவது, துணையுடன் நேரம் செலவிடுவது, சினிமா பார்ப்பது என்றே தற்போதைய நாட்கள் கழிகின்றது. இதில் ஒரே ஒரு நல்ல செய்தியாக, ஆன்லைன் டெலிவரி ஆப்’கள் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடமுடியும் என்பதே. ஆனால் அதையும் பலர் கொரோனா பரவல் அச்சம் காரணமாக செய்வதில்லை.
டன்சோ, ஸ்விக்கி, போன்ற ஆப்கள் உணவு, வீட்டு அத்தியாவசியப் பொருட்கள், மருந்து, மாத்திரைகள் என்று ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி செய்து விடுவதால் வீட்டைவிட்டு வெளியே செல்லவேண்டிய நிலை இல்லை.
இந்தப் பொருட்கள் தவிர இந்திய மக்கள் வேறு சில பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்வது பற்றி சுவாரசியத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களுரு, ஹைதராபாத், பூனே உள்ளிட்ட நகரங்களில் ஹோம் டெலிவரி செய்யும் ‘Dunzo’ தனது வாடிக்கையாளர்கள் என்னென்ன பொருட்களை அதிகம் ஆர்டர் செய்கின்றனர் என்ற தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதில், சானிடைசர், ஹேன்ட் வாஷ், கான்டம் (ஆணுறை), ஐ-பில் (குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகள்), மற்றும் ப்ரெக்னன்சி கிட் (கர்பம் உறுதி செய்யும் ஹோம் டெஸ்ட்) ஆகும். இதில் எந்தெந்த நகர மக்கள் எந்தப் பொருட்களை அதிகம் ஆர்டர் செய்கின்றனர் என டன்சோ குறிப்பிட்டுள்ளது.
ஜெய்பூர் மற்றும் சென்னை மக்கள் அதிகமாக ‘ஹேன்ட் வாஷ்’ ஆர்டர் செய்ய, மும்பைவாசிகளோ ‘கான்டம்ஸ்’ (ஆணுறை) அதிகம் ஆர்டர் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் சவாலை சந்திக்க சென்னை மக்கள் கவலையுற்ற சமயத்தில், மும்பை மக்கள் லாக்டவுனிலும் தங்கள் பொழுதை ஜாலியாகக் கழிப்பது இதில் இருந்து தெரிகிறது.
கொரோனா மற்றும் ஊரடங்கால் மக்கள் மன அழுத்தத்துக்கு ஆளான போதிலும், மும்பை மக்கள் தங்கள் துணையுடன் நேரம் செலவிடுவது தெரியவந்துள்ளது. வீட்டிற்கு வர நேரமில்லாத கார்ப்பரேட் வாழ்க்கை, வேலை பளுவால் அசதி என்று இருந்த பலருக்கு இது ஒரு பொற்காலம். அதிலும் புதுமணத் தம்பதிகள் பலர் இதைப் பயன்படுத்தி உற்சாகமாக இருப்பதும் அதிகரித்துள்ளது.
மும்பை இப்படி இருக்க, பெங்களுரு, பூனே மற்றும் ஹைதராபாத் மக்களும் அதிக செக்ஸில் ஈடுபட்டுள்ளது புலப்பட்டுள்ளது.
பெங்களுரு மற்றும் பூனே அதிகமாக ‘வீட்டு ப்ரெக்னென்சி கிட்’ ஆர்டர் செய்ய நம்ம ஹைதராபாத் ‘ஐ-பில்’ மாத்திரைகளை ஆர்டர் செய்துள்ளது. தற்போதைய நிலையில் கர்ப்பம் தரிப்பது, குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுப்பது சற்று கடினமே அதனால்தான் என்னவோ இவர்கள் இதை அதிகமாக ஆர்டர் செய்துள்ளனர்.
டன்சோ மட்டுமல்லாமல் இதர ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலம் மக்கள் இவற்றை ஆர்டர் செய்வது தெரிய வந்துள்ளது. லாக்டவுன் காலத்தில் இப்பொருட்களின் விற்பனை 25%-50% உயர்ந்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.