மறைந்தார் இந்தியாவின் ‘மசாலா கிங்’ - குதிரை வண்டி ஓட்டுனர் டூ வெற்றித் தொழிலதிபர்!
இந்தியாவின் ‘மசாலா கிங்' என்று அழைக்கப்படும் மகாஷே தாரம்பால் குலாட்டி மறைவு
குலாட்டியின் மனதில் தனது நிறுவனத்தை சாம்ராஜ்யமாக மாற்ற வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறவில்லை. அதற்கு அப்போது இருந்த காலகட்டமும் காரணம். குதிரை வண்டி (டோங்காவாலா) தொழிலில் கிடைத்த சொற்ப வருமானம், கைக்கும் வாய்க்கும் சரியாகவே இருந்தது.
இந்தியாவின் இன்ஸ்பிரேஷன் தனது இறுதிமூச்சை விட்டுள்ளது. ஆம், இந்தியாவின் ‘மசாலா கிங்' என்று அழைக்கப்படும் மகாஷே தரம்பால் குலாட்டி இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். இந்திய அரசு சார்பில் பத்ம விபூஷண் வென்ற இவருக்கு வயது 98.
இந்தியாவில் இருக்கும் தொழிலதிபர்கள் பலருக்கும் முன்னோடி, இன்ஸ்பிரேஷன் என்றால் தாரம்பால் குலாட்டியை குறிப்பிடலாம்.
1923ல் பிரிக்கப்படாத இந்தியாவின் சியால்கோட்டில் (தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது) மகாஷே மற்றும் மாதா சனன் தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார் தாரம்பால் குலாட்டி. இவரின் சிறுவயது நாட்கள் எல்லோரையும் போல தான் இருந்தது. விளையாட்டு, நண்பர்களுடன் நேரங்களை செலவிடுவது என இருந்த குலாட்டிக்கு படிப்பின் மீது அவ்வளவு ஆர்வம் இல்லை. 4ம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டார். படிப்பு இல்லையென்றாலும், அவரின் தந்தை குலாட்டியை தன்னுடன் சேர்த்துக்கொண்டார். தந்தையுடன் கண்ணாடி, சோப்புகள் விற்கும் சிறு வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார்.
தந்தைக்கு உதவியாக இருந்தால், அவர்களால் இன்னும் சில தொழில்களில் கவனம் செலுத்த முடிந்தது. துணி மற்றும் அரிசி வர்த்தகத்திலும் கால் பதித்தார்கள். அப்போதுதான் மகாஷியன் டி ஹட்டி (MDH)' என்ற பெயரில் ஒரு மசாலா கடையை திறந்தார் குலாட்டி.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1919 ஆம் ஆண்டில் பிரிக்கப்படாத இந்தியாவின் சியால்கோட் பிராந்தியத்தில் இந்தக் கடை திறக்கப்பட்டது. குடும்பத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்ட இதை பின்னாளில் பல கோடி நிறுவனமாக கட்டியெழுப்ப அயராது உழைத்தார். இவர்களின் மசாலா சுவையால் அந்தக் காலகட்டத்திலேயே, ‘டெகி மிர்ச் வேல்’ என்று பிரபலமாக அறியப்பட்டது இவர்களது குடும்பம்.
நன்றாக சென்றுகொண்டிருந்த அவர்களின் தொழில் வாழ்க்கையில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை சிக்கலை ஏற்படுத்தியது. ஒரே இரவில் அனைத்தையும் விட்டுவிட்டு டெல்லிக்கு குடிபெயர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது அவரது குடும்பம். அப்போது குலாட்டியின் வயது 23.
அந்தக் கடினமான காலகட்டத்தில் அவரின் கையில் இருந்தது ரூ.1500. இதில் ரூ.650க்கு ஒரு குதிரை வண்டியை வாங்கி டெல்லி ரயில் நிலையத்தில் மக்களை அழைத்து வரும் வேலையை செய்தார். ஆனால் குலாட்டியின் மனதில் தனது நிறுவனத்தை சாம்ராஜ்யமாக மாற்ற வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறவில்லை. அதற்கு அப்போது இருந்த காலகட்டமும் காரணம். குதிரை வண்டி (டோங்காவாலா) தொழிலில் கிடைத்த சொற்ப வருமானம், கைக்கும் வாய்க்கும் சரியாகவே இருந்தது.
இதன்பின் துணிந்து அந்த முடிவை எடுத்தார். சியால்கோட்டின் ‘மகாஷியன் டி ஹட்டி' மசாலா தொழிலை தனது குதிரை வண்டியை விற்று மீண்டும் ஆரம்பித்தார். மசாலா தொழிலில் அவர் கற்றுத் தேர்ந்த நிபுணத்துவம் வியாபாரத்தில் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்க இந்த முடிவை தனது குடும்பத்தின் ஆதரவுடன் எடுத்தார்.
அஜ்மல் நகரில் ஒரு சிறிய கடையை நிறுவினார். ‘டெகி மிர்ச் வேல்’ குடும்பம் மீண்டு வந்தது. நேர்த்தியான கலவை கொண்ட இவர்களது மசாலா வாசனை சில காலங்களில் டெல்லி எங்கும் பரவியது.
1953ல் டெல்லியில் முதல் நவீன மசாலா கடையை திறந்தது MDH. டெல்லியை தாண்டி வட மாநிலங்களிலும் மசாலா வாசனை புகழ் பரவ அங்கும் கால்பதித்து MDH கிளைகள். ஒரு இளைஞனாக குலாட்டி பெற்ற அனுபவம் இந்தக் காலத்தில் நுகர்வோர் மையப்படுத்தப்பட்ட பார்வையை வடிவமைத்தது. வேகமான நுகர்வோர் இன்னும் அன்னியமாக இருந்த நேரத்தில் வீட்டிலேயே செய்தால் மட்டுமே மசாலாக்கள் தூய்மையாக இருக்க முடியும் என்ற பழைய விதிமுறையை மீறுவது நிச்சயமாக சவாலானது.
வணிகம் வளர்ச்சியடைந்த நிலையில், குலாட்டி தனது மசாலாக்களை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார் மற்றும் விளம்பர பிரச்சாரத்தை வளர்ப்பதில் தனது அனைத்து ஆற்றல்களையும் செலுத்தினார்.
மசாலாவின் அட்டை பேக்கேஜிங்கில் ‘சுகாதாரமான, சுவை நிறைந்த & சுவையான’ சொற்களுடன் பயன்படுத்தினார். நம்ம ஊர் லலிதா ஜூவல்லர்ஸ் ஓனர் செய்த அதே யுக்திதான். விளம்பரங்களில் தங்கள் முகத்தை காட்டுவது. இதை அப்போதே செய்தார் குலாட்டி.
சரியான கல்வியறிவு, மார்க்கெட்டிங் டீம் என ஏதும் இல்லாமல் மக்களை கவர மசாலா பாக்கெட்டில் தன் புகைப்படத்தை பதிய செய்தார். சுவாரஸ்யமாக, இன்றும் கூட, பேக்கேஜிங் ஒரு சில மாற்றங்களுடன் அப்படியே உள்ளது. மீசையுடன் கூடிய ‘தாதாஜி’ விளம்பரம் அவருக்கு பெரிதும் கைகொடுத்தது.
விளம்பரங்களில் தன்னைக் காண்பிப்பதன் பின்னணியில் உள்ள ஆன்மா என்னவென்றால், வாடிக்கையாளர்கள் அவர்கள் யாரிடமிருந்து வாங்குகிறார்கள் என்பதைப் பார்க்கவும், அவர்களுடன் ஒரு சிறப்பு தொடர்பை உருவாக்கவும். அது வேலை செய்தது.
பலரும் ‘தாதாஜி வாலா மசாலா’ கொடுங்கள் என்று கேட்கத் தொடங்கினார்கள். இறக்கும் முன்புவரை இந்த யுக்தியை பயன்படுத்தினார் குலாட்டி. இதனால், வியாபாரம் செழித்தது.
இந்தியா முழுவதும் குலாட்டி தொழிலை விரிவுபடுத்தினார். இப்போது, இந்தியா தாண்டி 100க்கு மேற்பட்ட நாடுகளில் இவரின் மசாலா கிடைக்கிறது. மீட் மசாலா, கசூரி மெதி, கரம் மசாலா, ராஜ்மா மசாலா, ஷாஹி பன்னீர் மசாலா, தால் மக்கானி மசாலா, சப்ஸி மசாலா உள்ளிட்ட 64 தயாரிப்புகளை வழங்குகிறது இவரின் நிறுவனம்.
ஒரு சிறிய கடையை, தங்களது குடும்பத் தொழிலை, பல கோடி நிறுவனமாக கட்டியெழுப்ப குலாட்டி கொட்டிய உழைப்பு கைகொடுத்தது. 2017ல் ரூ.924 கோடி வருவாயை MDH நிறுவனம் ஈட்டியதே குலாட்டி உழைப்புக்கு சான்று. ஒற்றை ஆளாய் நின்று பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய குலாட்டி டெல்லியில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
RIP குலாட்டி!