'ஊக்கம் அளிக்கும் தமிழக ஸ்டார்ட் அப் சூழல்': தமிழ்நாடு ஸ்டோரி மேடையில் வல்லுனர்கள் நம்பிக்கை!
தமிழக ஸ்டார்ட் அப் சூழல் நம்பிக்கை அளிப்பதாக விளங்குகிறது என யுவர் ஸ்டோரி நடத்திய தமிழ்நாடு ஸ்டோரி மாநாட்டின் விவாத அரங்கில் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தமிழக ஸ்டார்ட் அப் சூழல் எப்படி இருக்கிறது? அதன் நம்பிக்கை அளிக்கும் அம்சங்கள் எவை? தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எவை? அவற்றின் வளர்ச்சிக்கான திசை எது? இத்தகைய கேள்விகளை எழுப்பி, இவற்றுக்கு விடை அளிக்கும் வகையில் அமைந்தது, யுவர்ஸ்டோரி நடத்திய ’தமிழ்நாடு ஸ்டோரி’ மாநாட்டின் வல்லுனர்கள் பங்கேற்ற விவாத அரங்கு.
தமிழகம் தன்னை பிராண்ட் செய்து கொள்ளும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடம்பெயறும் உத்தி மாற வேண்டும், வளர்ந்த தொழிலதிபர்களை இளம் தொழில்முனைவோர்கள் அணுகக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட யோசனைகள் இந்த விவாதத்தின் போது வல்லுனர்களிடம் இருந்து வெளிப்பட்டது.
தமிழக ஸ்டார்ட் அப் சூழலில் நம்பிக்கை தரும் அம்சங்களையும் அடையாளம் காட்டிய இந்த விவாத அரங்கை, வாஸப் லாண்ட்ரி இணை நிறுவனர் பாலசந்திரன் வழிநடத்தினார். அமேசான் கிண்டில் சென்னை பிரிவின் இயக்குனர் மணிகண்டன், ஜோஹோ ஸ்டார்ட் அப்ஸ் குளோபல் தலைவர் குப்புலட்சுமி, நேட்டிவ் லீட் நிறுவனர் சிவராஜா ராமநாதன், பேங்க்பஜார் இணை நிறுவனர் ரத்தி ஷெட்டி, கிரேட் லேக்ஸ் ஸ்ரீதர் நாராயனன் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனர் வெங்கட்நாதன் உள்ளிட்டோர் இந்த விவாதத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொணடனர்.
ஸ்டார்ட் அப் என்றால் என்ன?
ஸ்டார்ட் அப்பிற்கும், சிறு தொழில் நிறுவனத்திற்கும் என்ன வேறுபாடு எனும் கேள்வியுடன் பாலசந்திரன் விவாதத்தை துவக்கி வைக்க, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வழிகாட்டி அமைப்பை நடத்தி வரும் நேட்டிவ் லீட் நிறுவனர், சிவராஜா ராமநாதன் இதற்கு பதில் அளித்தார்.
“சிறு தொழில் நிறுவனங்கள் இயற்கையான வளர்ச்சி அடையக்கூடியவை. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஸ்கேல் அப் என சொல்லக்கூடிய வகையில், பெரிய அளவிலான வளர்ச்சி வாய்ப்பை கொண்டவை. நிறுவனங்களின் வர்த்தக மாதிரியே இதை தீர்மானிக்கிறது,” என்று சிவராஜா பதில் அளித்தார்.
ஸ்டார்ட் அப் என்பது புதுமையாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழக சூழலில் ஸ்டார்ட் அப்களுக்கான ஊக்கம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பப் பரப்பில் தமிழகம் எப்படி இருக்கிறது எனும் கேள்விக்கு அமேசான் கிண்டில் சென்னை இயக்குனர் மணிகண்டன்,
தமிழகம் மிசச்சிறந்த பொறியாளர்களை உருவாக்குகிறது எனும் கருத்துடன் உற்சாகமாக பதில் அளித்தார்.
சென்னையில் வளர்ச்சி
தமிழகத்தில் நிறைய ஸ்டார்ட் அப்கள் துவக்கப்பட்டாலும், நிறுவனங்கள் ஒரு நிலையை அடைந்ததும் வளர்ச்சிக்காக பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விடுவதாக குறிப்பிட்டவர், இதன் காரணமாக, திறமைகளும் இடம்பெயர்வதாக குறிப்பிட்டு, இந்த நிலை மாற வேண்டும் என்றார்.
”தமிழக ஸ்டார்ட் அப்’கள் வளர்ச்சி வாய்ப்புக்காக இடம்பெயர்வது மாறினால், இங்கு மேலும் அதிக திறமைகள் உருவாகும் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் நம்மை நாடி வரும்,” என்றும் மணிகண்டன் நம்பிக்கை தெரிவித்தார்.
அமேசான் நிறுவனம் இதைத் தான் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து தொழில்முனைவோருக்கான சவால்கள் குறித்து ஸ்டார்ட் அப் நிறுவனரான வெங்கட் நாதன் பேசினார். தமிழகம் தன்னை பிராண்டிங் செய்து கொள்ளும் விதம் மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அடுத்ததாக பேசிய கிரேட் லேக்ஸ் நிர்வாக கழகத்தின் பேராசிரியர் ஸ்ரீதர் நாராயணன்,
எந்த நிறுவனமும் ஸ்டார்ட் அப்பாக விளங்க முடியும் என்று தெரிவித்தார். லாப நோக்கம் மட்டும் அல்லாமல், சமூகத்தை ஆதரிக்கும் நோக்கம் கொண்டவை ஸ்டார்ட் அப்களாக விளங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய, பேங்க்பஜார் இணை நிறுவனர் ரத்தி ஷெட்டி, தனிப்பட்ட முறையில் வங்கி கடன் பெறுவதற்கான தங்களது வலி மிகுந்த அனுபவமே, வங்கிச்சேவைகள் தொடர்பாக தகவல்களை இணையத்தில் எளிதாக பெற உதவும் பேங்க்பஜாராக உருவெடுத்தது என்று தெரிவித்தார்.
வளர்ச்சிக்கான வாய்ப்பு, தமிழகம், இந்தியாவில் இருக்கிறது என்றும் ரத்தி நம்பிக்கை தெரிவித்தார்.
”இன்று வீட்டு வேலை பார்ப்பவர்கள் உள்பட எல்லோரும் வாட்ஸ் அப்பில் இருக்கின்றனர். இந்தச் சூழல் அதிக தொழில் வாய்ப்புகளை உருவாக்குகிறது,” என்றும் தெரிவித்தார்.
தொழில்முனைவோர்கள், சவால்களையும், தடைகளையும் எதிர்கொள்ள விடாமுயற்சி கொண்டவர்களாக, உறுதி மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய ஸ்டார்ட் அப்கள்
இதனிடையே, சென்னை அல்லாத நிறுவனங்களில் இருந்து துவங்கப்படும் ஸ்டார்ட் அப்கள் குறித்து சிவராஜா தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். தமிழகத்தின் சிறிய நகரங்களில் ஸ்டார்ட் அப்கள், குறிப்பாக தொழில்நுட்பம் சாராத ஸ்டார்ட் அப்கள் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்தியா வேறுபட்ட நாடு. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை மதிப்பிடும் விதமும் இங்கு மாறுபட வேண்டும். அமெரிக்கா போல, வளர்ச்சி வாய்ப்பு, மதிப்பீடு ஆகிய அம்சங்களில் மட்டும் ஸ்டார்ட் அப்களை அணுகும் நிலை மாற வேண்டும்,” என அவர் குறிப்பிட்டார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பயிலறங்குகள், வழிகாட்டி மேடைகள் ஆகியவை மூலம் ஜோஹோ உதவி வருவதை ஜோஹோ ஸ்டார்ட் அப் பிரிவுத் தலைவர் குப்புலட்சுமி பகிர்ந்து கொண்டார். பொருத்தமான ஸ்டார்ட் அப் சூழலை நிறுவனம் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.
இறுதியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தோல்விக்கான காரணங்களை அலசிய மணிகண்டன் அவற்றின் வளர்ச்சிக்கான திசை பற்றி குறிப்பிட்டார்.
ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தோல்வி அடைவதற்கு தொழில்நுட்பம் காரணமாக அமைவதில்லை என்றும், வர்த்தக எண்ணம் போன்றவற்றில் உள்ள குறைபாடு காரணமாகவே தோல்வி ஏற்படுகிறது என்று கூறிய மணிகண்டன், ஸ்டார்ட் அப்கள் மதிப்பு அளிக்கக் கூடிய சேவைகளை உருவாக்கினால் இந்திய வாடிக்கையாளர்கள் அதற்கு பணம் கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
-