‘நான் இந்த நொடிக்காக வாழ்பவன்’ - தோனி சொன்ன பொன்மொழிகள்!
“நான் இந்த நொடிக்காக வாழ்பவன்; கடந்த காலம், அல்லது வருங்காலத்துக்காக இல்லை...” - எம் எஸ் தோனி
ஆகஸ்ட் 15; இந்தியா 74வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியர்களின் மனம் கவர்ந்த நாயகன், கிரிக்கெட் காதலன் மகேந்திர சிங் தோனி தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் செய்தியை அறிவித்தார்.
கடந்த 2014ம் ஆண்டு இறுதியிலேயே தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுள்ளார்.
ராஞ்சி புயல் என அழைக்கப்படும் தோனி, கிரிக்கெட் பிரியர்களைத் தாண்டி பலரின் மனதை கவர்ந்தவர். கூல் கேப்டன் தோனி, இதுவரை 3 ஐசிசி- உலகக்கோப்பை, ட்வெண்டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி வென்று சாதனைப் படைத்த ஒரே கேப்டன் என்ற சிறப்பைப் பெற்றவர்.
விக்கெட் கீப்பரான தோனி, ஒரு நாள் போட்டிகளில் 300 கேட்சுகள் பிடித்த முதல் இந்திய வீரர் மற்றும் உலகில் 4ம் இடத்தில் அந்த சாதனையுடன் இருப்பவர்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 27 வெற்றிகளுடன் 2வது சிறந்த கேப்டன் என்ற பெருமைக்கும் உரியவர்.
2008 ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட எம் எஸ் தோனி, சிஎஸ்கே அணியால் 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி-யின் கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கிய மைல்கல் மற்றும் அவரின் சில பொன்மொழிகள் இதோ:
2004-2005
23 வயதில் எம் எஸ் தோனி தனது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விளையாட்டைத் தொடங்கினார். 2005ல் அவர் தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் டெபு-வை செய்தார்.
“நீங்கள் உண்மையான கனவு ஒன்றை வைத்திருக்காவிட்டால், உங்களுக்கு உந்துதல் என்ற ஒன்று இருக்காது; உங்களுக்கான இலக்கு என்ன என்பதும் தெரியாமல் போய்விடும்.”
2006-2007
மகேந்திர சிங் தோனி, தனது 25வது வயதில் டி20-யில் விளையாடத் தொடங்கினார். 2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உலக டி-20 கோப்பையை வென்று கொடுத்தார்.
“நாம் கற்றுக்கொள்ளவேண்டியது மிக அவசியம், அப்போதுதான் மீண்டும் அதே தவறை செய்யாமல் இருப்போம்; ஏனெனில் நடந்தது நடந்தவைதான்.”
2008-2009
2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாடினார் தோனி. 2009ல் டெஸ்ட் போட்டி பட்டியலில் இந்திய அணியை நம்பர் 1 இடத்துக்கு எடுத்துச் சென்றார். அதே ஆண்டு அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.
2010-2011
சென்னை சூப்பர் சிங்க்ஸ் அணியின் கேப்டனாக 2010ல் முதல் ஐபிஎஸ் வெற்றியை கைப்பற்றினார்.
2011-ல் 30 வயதான தோனி, இந்திய அணியின் கேப்டனாக உலகக் கோப்பையை வென்றார். அதே ஆண்டு ஐபிஎல் கோப்பையை இரண்டாவது முறையாக வென்று கொடுத்தார்.
“சதம் அடிப்பதைவிட, ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவதே எனக்கு முக்கியம். அப்படியான கூட்டணி உருவாகிவிட்டாலே சதங்கள் தானாய் அமையும்.”
2013-2018
2013ம் ஆண்டு Champions Trophy-யை இந்திய கேப்டனாக வென்றார். 2018ல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் மூன்றாவது ஐபிஎல் வெற்றியை பெற்றுத்தந்தார். இந்தியாவின் மிக உயரிய ‘பத்மபூஷன்’ விருதையும் இந்தாண்டு பெற்றார்.
“நம் நாட்டில் நிலையாக இருக்கும் ஒரே விஷயம் ‘கிரிக்கெட்’ மட்டுமே...”
2019-2020
தோனி தனது கடைசி ஒரு நாள் போட்டியை 2019ம் ஆண்டு விளையாடி, உலகக் கோப்பை போட்டியில் அரை இறுதிவரை வெற்றி கண்டார்.
“கூட்டத்துக்காக நீங்கள் விளையாடக்கூடாது, நாட்டுக்காக விளையாடவேண்டும்.”
கிரிக்கெட் பிரியர்கள் மட்டுமல்லாமல் இந்திய மக்களின் வாழ்க்கை நாயகனாகவே திகழ்ந்த எம் எஸ் தோனி, தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெரும் செய்தியை 2020ல் அறிவித்தார்.
“அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து என் மீது நீங்கள் வைத்த அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினத்தன்று மாலை 07.29 முதல் தான் கிரிக்கெட்டில் இருந்து முழு ஓய்வு பெறுகிறேன்,” என அறிவித்தார்.