MSME 45 நாட்கள் கடன் கெடு - மத்திய அரசிடம் ஓராண்டு விலக்கு கோரும் அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு!
45 நாட்கள் என்ற கெடுவுக்குள் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென CAIT கோரிக்கை விடுத்துள்ளது.
45 நாட்கள் என்ற கெடுவுக்குள் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென CAIT கோரிக்கை விடுத்துள்ளது.
வணிகர்களுக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கும் வகையில், ஏப்ரல் 1, 2024 முதல் ஏப்ரல் 1, 2025 வரை விதியை அமல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு CAIT மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது.
ஓராண்டு காலஅவகாசம்:
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், உலக அளவிலான டெண்டர்களுக்கு அனுமதி மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வைத்துள்ள நிலுவை தொகைகளை 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிடப்பட்டது.
அதாவது, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு சட்டத்தின் படி, உதயம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டு, MSME தொழில்துறையில் இருந்து ஏதேனும் பொருட்களை வாங்கும், ஏதேனும் சேவையைப் பெறும் எந்தவொரு வாங்குபவரும், ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் அல்லது அதற்கு முன்பு பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்ட தேதி, ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் அல்லது நாளிலிருந்து 45 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த 45 நாட்கள் கட்டண விதியை அமல்படுத்துவதை ஒத்திவைக்கும்படி, அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளது. மேலும், வருமான வரிச் சட்டம் 43(B) H தொடர்பான சிக்கல்களை நிவர்த்தி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
CAIT-iன் பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறுகையில்,
“வருமான வரிச் சட்டத்தில் இந்த விதியை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறோம். இது தடையற்ற பணப்புழக்கத்தை பராமரிக்க 45 நாட்களுக்குள் குறு மற்றும் சிறு நிறுவன வர்த்தகர்களிடையே தாமதமாக பணம் செலுத்தும் சிக்கலைச் சமாளிக்கிறது. எவ்வாறாயினும், இந்த விதிமுறை குறித்து வர்த்தகர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். எனவே அதனைச் செயல்படுத்த ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க வைக்க வேண்டும்,” என்றார்.
வணிகர்களுக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்குவதற்காக, இந்த விதியை ஏப்ரல் 1, 2024 முதல் ஏப்ரல் 1, 2025 வரை ஒத்திவைக்குமாறு CAIT மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது.
CAIT தேசியத் தலைவர் B C பார்தியா மற்றும் கண்டேல்வால் இருவரும், வருமான வரித் துறை, MSME களின் அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சிகள் மூலம் MSME வர்த்தகர்களிடையே தெளிவற்ற விதிகளை தெளிவுபடுத்துதல் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.