நூற்றாண்டு கொண்டாட்டம் - 123 அடி தோசை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை படைத்த MTR ஃபுட்ஸ்!
உலகின் மிக நீளமான தோசையை உருவாக்கி, தனது நூற்றாண்டு விழாவை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளது MTR ஃபுட்ஸ் நிறுவனம். இந்த தோசையை உருவாக்க எத்தனை சமையல் கலைஞர்கள் உழைத்தனர், எத்தனை நாட்கள் ஆனது என்பது பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
புதிது புதிதாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உருவாகி வரும் சூழலில், மக்களின் நன்மதிப்பைப் பெற்று, பத்தாண்டுகளுக்கு மேல் ஒரு பிராண்ட் சந்தையில் நீடித்தாலே சாதனைதான். அப்படி இருக்கையில், ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்து, தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல பெயரோடு நீடிக்கிறது என்றால், அது மிகப்பெரிய சாதனைதான். அப்படிப்பட்ட சாதனையைத்தான் MTR ஃபுட்ஸ் செய்துள்ளது.
தங்கள் சாதனையை வித்தியாசமாகக் கொண்டாட நினைத்த இந்நிறுவனம், உலகிலேயே மிகப்பெரிய தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
123 அடி தோசை
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ளது MTR ஃபுட்ஸ் என்ற தனியார் உணவு நிறுவனம். கடந்த 1924ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்தாண்டு தனது நூற்றாண்டை நிறைவு செய்கிறது. எனவே, தனது நூற்றாண்டு விழாவை வித்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்த இந்நிறுவனம், கடும் சவால்களுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய தோசையை உருவாக்கி, புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது.
முன்னதாக 54 அடி நீளமான தோசைதான், உலகின் மிகப்பெரிய தோசையாக இருந்தது. இந்த உலகச் சாதனையையும் எம்டிஆர்தான் படைத்திருந்தது. தற்போது தனது சாதனையை தானே முறியடித்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது MTR ஃபுட்ஸ்.
காலை உணவுகளான தோசை, இட்லி மற்றும் பல உடனடி உணவுகள் மூலம் சிற்றுண்டி பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் நிறுவனம் பிரபலமானது. அதனால், இப்படியொரு சாப்பாடு சாதனையைப் படைத்துள்ளது அந்நிறுவனம்.
111வது முயற்சியில் வெற்றி
‘லோர்மன் கிச்சன் இக்குவிப்மண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து அதன் பொம்மசாண்ட்ரா தொழிற்சாலையில், இந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த தோசையை எம்டிஆர் ஊழியர்கள் தயாரித்தனர்.
சுமார் 75 சமையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து இந்த தோசையை உருவாக்கியுள்ளனர். இந்த வெற்றி முதல் முறையில் அவர்களுக்கு கிடைத்துவிடவில்லை. ஏற்கனவே 110 முறை முயற்சித்து, 111வது முறையாக இதனை சாதித்துக் காட்டியுள்ளனர். இந்த உலகின் மிகப்பெரிய தோசையை சுடுவதற்கு, ஆறு மாத காலமாக சமையல் கலைஞர்கள் முயற்சித்து, தற்போது அதில் வெற்றி அடைந்துள்ளனர்.
“முதலில் நாங்கள் 100 அடி நீளமுடைய தோசையைத்தான் உருவாக்க நினைத்தோம். பின்னர் எங்களுக்கு நாங்களே சவால் விடுத்து, இந்த 123 அடி நீள தோசையை உருவாக்கி எங்களையே நாங்கள் விஞ்சிவிட்டோம்,” என தங்களது சாதனை குறித்து எம்டிஆர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனே பாசின் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும், அந்நிறுவனத்தின் முதன்மை சமையல் கலைஞர் ரெஜி மேத்யூஸ் இது குறித்து கூறுகையில்,
“எம்டிஆர் நிறுவனம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது. எங்களின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, கடந்த 15-ம் தேதி எம்டிஆர் நிறுவனத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் 75 பேர், லோர்மன் நிறுவனத்துடன் இணைந்து, 123 அடி நீளமுள்ள தோசையை தயாரித்தோம். உலகின் நீளமான தோசை என்ற கின்னஸ் சாதனை படைத்தோம்."
எம்டிஆரின் பொம்மசந்திரா தொழிற்சாலையில் இதற்காகக் கடந்த 6 மாதங்களாக பல்வேறு பயிற்சிகள், திட்ட மிடல்கள், நிறையப் பேரின் ஒருங்கிணைப்பு ஆகியவை சேர்ந்து இந்த சாதனையை சாத்தியப்படுத்தியுள்ளது” என்றார்.
சாதனை தோசையை வெறும் வேடிக்கை பொருளாக மட்டும் வைத்து விடாமல், சமூக உணர்வுடன் மற்றவர்களுடன் பகிர்ந்தும் உண்டனர், எம்டிஆர் ஊழியர்கள். தற்போது இந்த பிரமாண்ட தோசையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.