Tiktok-ல் நடித்த நவீன் ரிக்கி இப்போது வெள்ளித் திரையில்...
டிக்டாக் செயலியை சரியான முறையில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார் மதுரையைச் சேர்ந்த நவீன்.
ஸ்மார்ட் போன் உலகில் செயலிகள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். அறியாப் பிள்ளைகளும் கூட அறிவு தெரிந்த உடன் கற்றுக் கொள்ளும் இரு விஷயங்கள் கூகுள் தேடல், யூடியூப் வீடியோஸ்.
வீடியோக்களாக பார்த்து அலுத்துப் போனவர்களுக்காக புதிது புதிதாக ஆப்களும் பொழுதுபோக்கிற்காக அறிமுகமானது. அப்படி அறிமுகமான செயலிகளில் ஒன்று தான் Tiktok.
‘டிக் டாக்’ செயலி பயன்படுத்துகிறார்கள் என்றாலே பலர் அவர்களை நினைத்து பக்கு பக்கென்று தான் இருப்பார்கள். ஆடல், பாடல், விமர்சனம், குழாயடிச் சண்டையென டிக் டாக் மீது பல விமர்சனங்கள் இருக்கின்றன. நீதிமன்றம் வரைச் சென்று இந்த செயலிக்கு தடை வாங்கும் அளவிற்கு டிக்டாக் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் டெக்னாலஜியை சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு அது ஏற்றத்தை மட்டுமே தரும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் சார்ம் பாய் நவீன் ரிக்கி. டிக்டாக்கை இளைஞர்கள் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்த நவீன் இதனை தனது திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக பார்த்திருக்கிறார்.
இதன் பலன் அவருக்குக் கிடைக்க வெகு நாட்கள் ஆகவில்லை, முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நவீன் தேர்வாகி இருக்கிறார்.
சிலம்பரசன் ஆட்டத்தில் வெளியான பெரியார் குத்து பாடல் இடம்பெற்றிருக்கும் திரைப்படத்தில் தான் நவீன் ரிக்கி நடிக்கிறார். திரைப்பட படப்பிடிப்பிற்கு முன்னர் நடைபெறும் ஒத்திகை படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த நவீன் ரிக்கியை நேர்காணல் கண்டது யுவர் ஸ்டோரி தமிழ்.
நவீன ரிக்கி வடமாநிலத்தவர் போல பார்ப்பதற்கு தோன்றினாலும் இவரது பூர்வீகம் மதுரை. அப்பாவுக்கு சொந்த ஊர் மதுரை, அணுசக்தித் துறையில் பணியாற்றுவதால் பெரும்பாலும் வடமாநிலத்திலேயே அடிக்கடி இடமாறிக் கொண்டிருப்பார்.
“நான் பிறந்தது வளர்ந்ததெல்லாம் மும்பை, ஒடிசா, கேரளா மாநிலங்களில். பள்ளிப் படிப்புக்குப் பிறகு கோவையில் பி.டெக் படித்தேன், அதனைத் தொடர்ந்து பைலட் ஆவதற்கான படிப்பை முடித்து விட்டு சிறிது காலம் ஐடி துறையில் பணியாற்றினேன். தற்போது பணியை விட்டுவிட்டு எம்பிஏ படிப்பதற்கான பணிகளில் இறங்கி இருக்கிறேன்,” என்கிறார் நவீன்.
அப்பா மத்திய அரசுப் பணியாளர், தம்பி ஒடிசா எய்ம்ஸ் கல்லூரி மருத்துவர், நவீனுக்கு பைலட் ஆசை என கல்விக்கு மரியாதை தரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர், கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் நவீனின் பொழுதுபோக்கே ஃபிட்நெஸ் மட்டும் தான். கல்லூரி 2ம் ஆண்டு முதல் ஃபிட்நெஸ் பாடி பில்டிங்கில் அதிக நேரத்தை செலவிட்டவருக்கு திடீரென ஏற்பட்ட பைக் விபத்தில் கணுக்கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
ஃபிட்நெஸ் என்றால் எனக்கு உயிர். கல்லூரி, கல்லூரியை விட்டால் ஜிம் என்றே நகர்ந்தது கல்லூரி நாட்கள். அப்படி இருக்கையில் திடீரென கணுக்கால் முறிவால் உடற்பயிற்சி செய்யவேக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். உடம்பின் மொத்த எடையையும் உடற்பயிற்சியின் போது கணுக்கால் மட்டுமே தாங்கும் என்பதால் மேலும் விபரீதம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக ஜிம் பக்கம் தலை வைக்கவேக் கூடாது என்று கூறி விட்டார்கள்.
அந்த சமயத்தில் வெறுமை, மனஅழுத்தம் என்னை ஒட்டிக் கொண்டது, பொழுதுபோக்கிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது தான் மியூசிக்கலி என்று ஒரு செயலி இருப்பதாகச் சொன்னார்கள் அப்படி அந்த செயலியில் என்ன தான் இருக்கிறது என்று பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கினேன் என்கிறார் நவீன்.
முதலில் பாடல் அல்லது வசனத்திற்கு ஏற்ப உதட்டசைவு செய்வது போன்ற 2-3 வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டேன். பி.டெக் முடித்திருந்த சமயம் என்பதால் நண்பர்கள் என்னுடைய வீடியோக்களைப் பார்த்து ஏன் இந்த தேவை இல்லாத வேலை என்று கேலி செய்தார்கள். ஆனாலும் நான் துவண்டு போகவில்லை, தவறுகளைத் திருத்திக் கொண்டு புதிது புதிதாக வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டேன்.
“நடிப்பு என்பதும் ஒரு கலையே, மற்ற கலைகளுக்கு எப்படி நாம் முறையான பயிற்சிகளை மேற்கொள்கிறோமோ அதே போல நடிப்பிற்கும் தனிப் பயிற்சி தேவை. நானும் டிக்டாக் வீடியோக்கள் பதிவு செய்வதற்கு முன்னர் நிறைய ஹோம்வொர்க் செய்வேன்,” என்று கூறுகிறார் நவீன்.
லிப் சிங்க், டப்ஸ்மாஷ்களை விட முதன்முதலில் சொந்தமான கருத்துகளை வைத்து என்னுடைய குரலில் கடந்த மே மாதம் பதிவிட்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. அந்த ஒரு வீடியோ மட்டுமே 3.5 முதல் 4 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.
அன்று முதல் தினந்தோறும் என்னுடைய சொந்த கருத்துகளை வைத்து வீடியோக்களை பதிவு செய்து டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யத் தொடங்கினேன். படிப்பு படிப்பென்று ஓடிக்கொண்டிருந்த நான் வீடியோ, பாட்டு என்று செயல்படத் தொடங்கியது முதலில் என்னுடைய பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. மனஅழுத்தத்தில் இருந்து விடுபட ஏதோ செய்கிறேன் என்று அவர்கள் என்னை தடுக்கவில்லை என்று தெரிவிக்கிறார் நவீன்.
“என்னுடைய வீடியோக்கள் பாசிட்டிவ்வான வரவேற்பைப் பெற்றதில் அப்பா, அம்மாவிற்கு மகிழ்ச்சியே. அதிலும் குறிப்பாக என்னுடைய டிக்டாக் வீடியோக்கள் தமிழ்நாட்டில் மிகப்பிரபலமாகியது, பலர் என்னைத் தேடி வந்து பேசுவதும் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தந்தது.”
சுமார் ஒன்றரை ஆண்டுகள் டிக்டாக் வீடியோக்கள் வெளியிட்டு வந்த நிலையில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் டீமில் இருந்த ஹேமந்த் என்னைத் தொடர்பு கொண்டு தமிழ் திரைப்படத்தில் இளம் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார். முதலில் அந்த போன் கால் உண்மை தானா என்பதை உறுதிசெய்து கொண்டேன். ஏனெனில் என்னால் அந்த வாய்ப்பை நம்பவே முடியவில்லை.
முதல்படமே இவ்வளவு பெரிய இயக்குனர் இயக்கத்திலா என்று ஷாக்காக இருந்தது. அன்றைய இரவுக்குள் இந்த போன் கால் உண்மை தானா என்னைத் தொடர்பு கொண்டவர்கள் ஜிவிஎம் குழுவைச் சேர்ந்தவர்கள் தானா என்பதையெல்லாம் தேடி ஆராய்ந்து உறுதி செய்தேன். அதன் பிறகு அந்தப் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டேன்.
“ஜிவிஎம் இயக்கம் என்றதுமே எனக்கு நடிக்க விருப்பம் இருந்தது, அதிலும் இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் கேட்ட பிறகு ரொம்பவே பிடித்து போய்விட்டது.
என்னைப் போலவே என் பெற்றோரும் முதலில் நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்பதைக் கேட்டதும் அதிர்ச்சியானார்கள். நான் சென்னைக்கு வந்த பிறகு அவர்களை அழைத்து வந்து திரைப்படக் குழுவினருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தேன், இப்போது அவர்களும் எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை சந்தோஷமாகவே பார்க்கின்றனர்.
டிக்டாக் வீடியோக்கள் பதிவு செய்யும் போது நான் மட்டுமே இருப்பேன் திரைப்படத்திற்காக ஒத்திகை படப்பிடிப்பின் போது பலர் முன்னிலையில் நடிக்க வேண்டும். முதல் நாள் பல பேர் முன்னிலையில் நடிக்கும் போது சிறிது பதற்றமாக இருந்தது, இப்போது பழகிவிட்டது. நான் டிக்டாக் வீடியோக்களே தற்போது 6-7பேருடன் செய்வதால் கேமிரா பயம் போய்விட்டது என்கிறார் நவீன்.
திரைப்பட வாய்ப்பு கிடைத்த பின்னர் அதை சாதாரணமாக நினைக்காமல் தினந்தோறும் 1 மணி நேரம் நடிப்பிற்காக ஒதுக்கி பயிற்சி எடுக்கிறார் நவீன். நடிப்பிற்கும் பயிற்சி தேவை பயிற்சி விட்டுப் போனால் நடிப்பு இயல்பாக இருக்காது, ஒரு காட்சியை விவரிக்கும் போது அதனை உள்வாங்கி அதற்கேற்ப நடிக்க வேண்டும். நடிப்பை அப்டேட் செய்து கொண்டே இருப்பதுடன் கடினஉழைப்பையும், நேரத்தையும் செலவிட்டு அதற்கான மரியாதையை கொடுக்க வேண்டும்.
“டிக் டாக் எனக்கென தனியொரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. பொது இடங்களில் செல்லும் போது நான் யார் என்று நான் கூறாமலே பலரும் வந்து நவீன் ரிக்கியா என்று கேட்கிறார்கள். இதை விட வேறு ஒருவருக்கு என்ன அடையாளம் வேண்டும். கையில் இருக்கும் ஒரு செல்போன் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்று நான் வியந்த தருணங்களும் உண்டு. நெகட்டிவ் பப்ளிசிட்டி உடனடியாக பிரபலமாக்கும் என்று பலரும் அந்த வழியை தேர்வு செய்கின்றனர். ஆனால் உண்மையில் நெகட்டிவ் பப்ளிசிட்டி நீடித்த புகழைத் தராது,” என்கிறார்.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும் அதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய திறமையை தெரிந்து கொண்டு அதைச் சரியாக வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம். இளைஞர்கள் டிக்டாக்கை ஒரு பொழுதுபோக்கு ஆப்பாக பார்க்காமல் கிடைத்த வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்கிறார் நவீன் ரிக்கி.
தொழிலுக்காக பைலட் பணி, ஆத்ம திருப்திக்காக நடிப்பு என்று வாழ்க்கைப் பாதை அமைத்துக் கொண்டு பயணிக்கத் தொடங்கி இருக்கிறார் நவீன்.
டிக் டாக் ரிக்கியின் வாழ்வில் ஒரு கிக்கை கொடுத்திருக்கிறது...
இதோ நவீன் ரிக்கியின் டிக்டாக் லின்க்: https://www.tiktok.com/@naveenricky