Tiktok பயன்படுத்தும் குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு....
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் இணைய பயன்பாட்டை கண்காணித்து அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்ய சில வழிகாட்டல் குறிப்புகள்...
சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வு காண தொழில்நுட்பம் உதவி வருகிறது. இது நம்மை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
நாம் செய்யும் ஒரு செயலை எளிதாக்கும் நோக்கத்துடனேயே செயலிகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அதுவே நமது மூளையை ’செயலி’ழக்கச் செய்துவிட அனுமதிக்கக்கூடாது.
சமூக வலைதளங்களை முறையாகப் பயன்படுத்தி அதன் மூலம் உச்சத்தை எட்டிய பலரது வெற்றிப்பயணங்களையும் நாம் அன்றாடம் படிக்கிறோம். அதேசமயம் செயலிகளுக்கு அடிமையாகி அழிவைத் தேடிக்கொண்டவர்களும் உண்டு.
பெண்களுக்கு ஆபத்து காலத்தில் உதவ ’காவலன்’ என்கிற செயலி காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற முன்னெடுப்புகள் ஒருபுறம் இருக்க செயலிகள் பயனர்களின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையும் நிலவுகிறது.
பொழுதுபோக்கு அம்சத்துடன் மக்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவும் நோக்கத்துடன் அறிமுகமானதுதான் ’டிக்டாக்’ செயலி. மக்கள் ஆடல், பாடல் உள்ளிட்ட தங்களது தனித்திறனை வெளிப்படுத்த இந்தத் தளம் உதவுகிறது. இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
வெறும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தத் தொடங்கிய பலர் இதற்கு அடிமையாகிவிட்டனர். ஆடல், பாடல் வீடியோக்கள், சினிமா வசனங்கள் பேசுவது என்று தொடங்கி அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து எல்லை மீறப்பட்டது. இது கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் என்பதால் இந்தச் செயலி தடைசெய்யப்படவேண்டும் என்கிற வலுவான எதிர்ப்புக்குரலும் எழுந்தவண்ணம் இருந்தன.
எனவே பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிக்டாக் பல பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பொருளையும் நாம் பயன்படுத்தும் விதமே அதன் சாதக பாதகங்களைத் தீர்மானிக்கிறது. ஆகவே பெற்றோர்கள் தங்களது வளரிளம் பருவ பிள்ளைகளின் செயலி அனுபவத்தைக் கட்டுப்படுத்தி பாதுகாப்பாகப் பயன்படுத்த சில வழிகாட்டும் குறிப்புகளை டிக்டாக் வழங்கியுள்ளது.
வயது வரம்பு
டிக்டாக் படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவும் ஒரு பொழுதுபோக்குத் தளம். இருப்பினும் இது 13 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான செயலி மட்டுமே. 13 வயதிற்குட்பட்ட உங்களது குழந்தை டிக்டாக் கணக்கை பதிவு செய்திருந்தால் நீங்கள் டிக்டாக் நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பெற்றோர் கட்டுப்பாடு
உங்களது மொபைல் சாதனத்திலேயே சில குறிப்பிட்ட செயலிகள், அம்சங்கள், திரைப்படங்கள், இசை போன்றவற்றை முடக்கிவிடும் வசதி உள்ளது. பெற்றோர் ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளேஸ்டோரில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பார்த்து இவற்றை கட்டுப்படுத்தலாம்.
தனிப்பட்ட தகவல்கள்
உங்கள் பிள்ளைகள் செயலியில் பதிவேற்றம் செய்யும் தகவல்களைப் பார்க்க சிலருக்கு மட்டும் நீங்கள் அனுமதியளிக்கலாம். இதற்கு பல டூல்கள் டிக்டாக்கில் உள்ளன. இதன் மூலம் உங்கள் வளரிளம் பருவ பிள்ளை பதிவேற்றம் செய்த வீடியோக்களை பார்ப்பவர்கள், பின் தொடர்பவர்கள், மெசேஜ் அனுப்புபவர்கள் போன்றோரை அவர்களே கட்டுப்படுத்தலாம். இதற்கு அவர்களது கணக்கை ‘பிரைவேட்’ ஆக்கவேண்டும்.
இந்த பாதுகாப்பு அம்சமானது மற்றவர்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பார்ப்பதை தடைசெய்துவிடும். அதுவே ’பப்ளிக்’ ப்ரொஃபைலாக இருந்தால் டிக்டாக் செயலியில் சைன் அப் செய்யும் எந்த ஒரு பயனரும் உங்கள் பிள்ளைகள் பதிவேற்றம் செய்த வீடியோக்களைப் பார்க்கலாம்.
அத்துமீறல் குறித்து புகாரளிக்கலாம்
உங்கள் பிள்ளைகள் அத்துமீறிய உள்ளடக்கம் இருப்பதைப் பார்க்க நேர்ந்தால் உதனடியாக அதுகுறித்து புகாரளிக்கலாம். விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கமெண்ட் பிரிவையும் கட்டுப்படுத்தலாம்
உங்கள் பிள்ளைகள் தாங்கள் பதிவிடும் வீடியோக்களுக்கு மற்ற பயனர்கள் அனைவரும் கமெண்ட் செய்ய அனுமதிக்கலாமா, பின் தொடர்பவர்களை மட்டும் அனுமதிக்கலாமா அல்லது கமெண்ட் செய்யப்படுவதையே முற்றிலும் முடக்கிவிடலாமா என்பதை அவர்களே தீர்மானிக்கலாம்.
இதர பாதுகாப்பு அம்சங்கள்
இவை மட்டுமின்றி உங்கள் பிள்ளைகளை மற்ற பயனர்கள் தொடர்பு கொள்வதை முடக்கிவிடலாம். அவர்கள் பதிவிடும் வீடியோவை மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி தனிப்பட்ட முறையில் சேமித்துக்கொள்ளலாம். பதிவிற்கு வரும் கருத்துக்களை ஃபில்டர் செய்யலாம்.
மற்றொரு பயனருடன் இணைந்து வீடியோக்களை வெளியிடும் ‘டூயட்’ பகுதியில் குறிப்பிட்ட பயனரை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். உங்கள் குழந்தையின் ’ஸ்கிரீன் டைம்’ உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கலாம். இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்களும் டிக்டாக் செயலியில் இடம்பெற்றுள்ளன.
அதேசமயம் ’பிரைவேட்’ கணக்காக இருப்பினும் ப்ரொஃபைல் ஃபோட்டோ உள்ளிட்ட பயனரின் ப்ரொஃபைல் தகவல்களை அனைத்து பயனர்களும் பார்க்கலாம். எனவே வயது, முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்துகொள்ளவேண்டாம் என்று உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவது சிறந்தது.
பாதுகாப்பான இணைய பயன்பாட்டை உறுதிசெய்ய இதுபோன்ற மேம்பாடுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தி பயனர்களிடம் அவற்றை முறையாகக் கொண்டு சேர்ப்பது அவசியமாகிறது.