உடல் பருமனைக் குறைக்க ஈட்டி எறியத் தொடங்கிய நீரஜ் சோப்ரா; இன்று இந்தியர்களின் கனவை மெய்பித்த தங்க மகன்!
நீரஜ் சோப்ரா யார்?!
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய தேசத்திற்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதல் போட்டியின் மூலம் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இந்தியாவின் தங்கக் கனவை நனவாக்கி இருக்கிறார். 23 வயதாகும் நீரஜ் முதல் ஆட்டத்திலேயே 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.
இந்தநிலையில், இன்றைய இறுதிப்போட்டியில் முதல் சுற்றில் 87.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தவர், இரண்டாவது சுற்றில் அதிகபட்சமாக 87.58 மீட்டர் தூரம் எறிந்து வரலாற்று சாதனை நிகழ்த்தினார். பின்னர் மூன்றாவது சுற்றில் 76.79 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தாலும் அவரே பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தன்வசமாக்கினார்.
இந்தியர்களின் பெருங்கனவான தங்கம் வெல்ல வேண்டும் என்பதை நனவாக்கி காட்டியுள்ள இந்த இளம்புயல் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஹரியானாவின் புகழ்பெற்ற பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா கிராமம் இவரின் சொந்த ஊர்.
1997ல் பிறந்த நீரஜ் ஈட்டி எறிதல் விளையாட்டில் ஈடுபடத் துவங்கியது ஒரு சுவாரஸ்ய சம்பவத்தின் பின்னணியில் தான். தனது பள்ளிப் பருவத்தில் பருமனாக இருந்திருக்கிறார் நீரஜ். எந்த அளவுக்கு என்றால் தனது 12ம் வயதிலேயே 90 கிலோ உடல் எடையுடன் இருந்துள்ளார்.
இதனால் கேலி கிண்டலுக்கு ஆளான நீரஜ், உடல் எடையை குறைக்கும் பொருட்டே ஈட்டி எறிதல் விளையாட்டில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். அப்படி தொடங்கியவர் தான் தற்போது 130 கோடி இந்தியர்களின் தங்க கனவை நனவாக்கி இருக்கிறார். ஆரம்பத்தில் உடல் எடையை குறைக்க ஈட்டி எறிதல் விளையாடத் தொடங்கினாலும், பின்னர் தன்னை இந்த விளையாட்டில் தொழில்முறை வீரராக மாற்றிக்கொண்டார்.
ஆரம்பித்தில் உள்ளூர் மற்றும் பள்ளிகள் மட்டத்தில் ஈட்டி எறிதல் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் நீரஜ். இது அவருக்கு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றுத் தர அதிலும் தனது சிறப்பான திறைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
2016 தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்று தனது பதக்க வேட்டையை ஆரம்பித்தார் நீரஜ். இதே காலகட்டத்தில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். ஜூனியர் அளவில் அதிக தூரம் (86.48 மீட்டர்) ஈட்டி எறிந்தது அன்று மிகப்பெரிய சாதனையாக இருக்க அப்போதே இந்திய அளவில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.
அன்றில் இருந்து இன்றுவரை ஈட்டி எறிதல் விளையாட்டில் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்த்துடன் வலம்வருகிறார். இதன் பின் நீரஜ், தான் பங்கேற்ற உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன் வெல்த், ஆசிய விளையாட்டுகள் போன்றவற்றில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று அசத்திவந்தார். இதற்கிடையேதான் சில மாதங்கள் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தவர், அதிலிருந்து மீண்டு வந்து ஒலிம்பிக் போட்டிகளுக்காக சிறப்புக் கவனம் செலுத்தி வந்தார். அது பயன்கொடுக்க, தற்போது தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில், வரலாற்றிலேயே இதுவரை இல்லாத தடகள போட்டிப் பிரிவான ஜாவ்லின் த்ரோவில், தேசத்திற்காக முதல் தங்கம் வென்ற தவப்புதல்வன் நீரஜ் சோப்ராவுக்கு யுவர்ஸ்டோரி சார்பில் வாழ்த்துக்கள்!