நீரஜ் சோப்ராவின் 'சுர்மா' பிணைப்பு: பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கத் தயாராகும் சொந்த ஊர்!
பிரதமர் மோடியின் 'சுர்மா' விருந்து!
பல வருடங்களுக்குப் பிறகு டோக்கியோ ஒலிம்பிக் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க ஏக்கத்தை தீர்த்தவர் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இந்த சாதனையால் இந்தியாவின் ஹீரோவாக மாறியிருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு ஒருபுறம் வாழ்த்து மழையும், பரிசு மழையும் குவிந்து கொண்டிருக்கிறது.
சில நாட்கள் முன் இந்தியா திரும்பிய அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சுதந்திர தின விழாவில் மற்ற வீரர்களுடன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் நீரஜ்.
இதற்கிடையே, நீரஜ் இன்று அவரின் சொந்த ஊரான ஹரியானா மாநிலம் வரலாற்று சிறப்புமிக்க பானிபட் மாவட்டத்தில் உள்ள சமல்காவுக்கு செல்கிறார். அவரை சிறப்பாக வரவேற்க விரும்பிய அவரின் பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர் அதற்காக தடபுடலாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
குறிப்பாக அவரின் வருகையையொட்டி சுமார் 30 ஆயிரம் பேருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். பிரமாண்ட முறையில் அவருக்கு வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக பேசியுள்ள நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி,
"நீரஜ்க்கு பெரும் வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நான் அவருக்கு 'சுர்மா' (ஹரியானாவில் புகழ்பெற்ற பண்டம்) தயார் செய்துள்ளேன். அவருடைய தங்கப் பதக்கத்தை 'கோவிலில் வைத்து வணங்க இருக்கிறோம்," என்றுள்ளார். இந்த ’சுர்மா' உணவு நீரஜ்க்கு மிகவும் பிடித்த ஒரு உணவாம். இதனால் தான் ஸ்பெஷலாக இந்த உணவை அவரது அம்மா அவருக்காக தயார் செய்துள்ளார்.
முன்னதாக, நேற்று பிரதமர் மோடியின் இல்லத்துக்கு பதக்கம் வென்ற ஒலிம்பிக் வீரர்கள் அழைக்கப்பட்டு விருந்தளிக்கப்பட்டது. இந்த விருந்திலும் பிரதமர் மோடி நீரஜ் சோப்ராவிற்கு ’சுர்மா' உணவை வழங்கினார். இந்தப் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு ‘சுர்மா' உடன் ஒரு பிணைப்பு’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதேபோல், ஒலிம்பிக்கிற்கு முன் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவிடம் பிரதமர் மோடி வாக்குறுதி ஒன்றை அளித்திருந்தார். அதாவது பதக்கம் வென்றால் ஐஸ்கிரீம் ட்ரீட் தருவதாக கூறியிருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, நேற்றைய விருந்தில் பிவி சிந்துவுக்கு ஐஸ் கிரீம் ட்ரீட் கொடுத்து அசத்தினார் பிரதமர் மோடி.