சீண்டுதலுக்கு எதிராகப் புகாரளிக்க உதவும் ஆப் உருவாக்கிய 4ம் வகுப்பு மாணவி!
சக மாணவர்களின் கடுமையான நடத்தையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி இதற்குத் தீர்வுகாணும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
மற்றவர்களுக்கு வேதனையளிக்கும் வகையில் கடுமையான நடத்தைகள் மூலம் ஒருவரை சீண்டுவதே ’புல்லியிங்’ (bullying). பொதுவாக மாணவர்கள் இத்தகைய நடத்தையால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட ஷிலாங் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். நான்காம் வகுப்பு மாணவியான அந்தச் சிறுமியின் பெயர் மெய்தைபாஹுன் மஜாவ்.
இவர் உருவாக்கியுள்ள செயலி சீண்டுதல் சம்பவங்கள் குறித்து ஒருவர் தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தாமல் புகாரளிக்க உதவுகிறது.
“நான் நர்சரி பள்ளியில் படித்த காலம் முதல் மற்றவர்களின் கடுமையான நடத்தையால் மோசமான சூழல்களைச் சந்தித்துள்ளேன். இந்தச் சம்பவங்கள் என்னை பெரிதும் பாதித்துள்ளது. இதை நான் முழுமையாக வெறுக்கிறேன். இதற்கு தீர்வுகாண்பது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வந்தேன். இதுபோன்ற பிரச்சனை எந்த ஒரு குழந்தைக்கும் நேரக்கூடாது,” என்று பிடிஐ உடனான உரையாடலில் மஜா தெரிவித்தார்.
இந்தச் செயலி விரைவில் கூகுள் ப்ளேவில் அறிமுகமாக உள்ளது. மற்றவர்கள் செய்யும் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்புவதில்லை. இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி ஆசிரியர்கள், பாதுகாவலர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு தெரியப்படுத்த இந்தச் செயலி உதவுகிறது.
“பயனர்கள் தங்களைத் துன்புறுத்தியவரின் பெயர் உட்பட சம்பவம் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட நபரிடம் வழங்கலாம். அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க இது உதவும்,” என்று மஜாவ் விவரித்தார்.
இவரது முயற்சியை மாநிலக் கல்வி அமைச்சர் லக்மென் ரிம்புய் பாராட்டியுள்ளார். இந்தச் சிறுமி பொறுப்புள்ள நபராக வளர்வார் என்று குறிப்பிட்டுள்ளார். இவரைப் பற்றி ரிம்புய் மேலும் கூறும்போது,
“சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக போராடும் இவரது முயற்சிக்கு எனது பாராட்டுகள். இவர் நிச்சயம் பொறுப்பான மனிதராக இருப்பார். இவரை முறையாக வழிநடத்திய இவரது பெற்றோரையும் பாராட்டுகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 42 சதவீத குழந்தைகள் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக விப்ரோ அப்ளையிங் தாட் இன் ஸ்கூல்ஸ் (WATIS) உடன் இணைந்து ’தி டீச்சர் ஃபவுண்டேஷன்’ நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒன்பது வயதான மஜாவ் தனது சொந்த அனுபவங்களை நினைவுகூர்ந்தார். மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று இவருக்கு எதிராக ஒன்றுகூடி இவரை தனிமைப்படுத்தி ஒதுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவரது நண்பர்களும் ஏதோ ஒரு தருணத்தில் இதுபோன்ற இக்கட்டான சூழலை சந்தித்துள்ளனர்.
மஜா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செயலி உருவாக்கும் வகுப்பில் சேர்ந்ததாகவும் சில மாதங்களிலேயே இந்தத் திறனை வளர்த்துக்கொண்டதாகவும் அவரது அம்மா தசுமார்லின் மஜாவ் தெரிவித்தார்.
“மெய்தைபாஹுன் தினமும் ஒரு மணி நேரம் வகுப்பிற்குச் செல்வார். 40 செயலிகளை உருவாக்கியுள்ளார்,” என்றார் கிழக்கு காசி மலையில் டிர்னா பகுதியில் ஒரு ரிசார்ட் நடத்தி வரும் தசுமார்லின் தெரிவித்ததாக பிடிஐ குறிப்பிட்டுள்ளது.
முதலீட்டாளர்களைச் சந்திக்க சிலிக்கான் வேலிக்கு இந்தியாவில் இருந்து பயணிக்க உதவித்தொகை பெற உள்ள இளம் கோடிங் நிபுணர்கள் பட்டியலில் மஜாவ் இடம்பெறுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“எங்களது ரிசார்டில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் மற்றொரு செயலியை உருவாக்கியுள்ளேன். இதைக் கொண்டு மனிதத் தலையீடின்றி அவர்கள் உணவு ஆர்டர் செய்யலாம். இதுதவிர மேலும் பல்வேறு செயலிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். என்னுடைய பணி நிபுணர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்புகிறேன்,” என்கிறார் இந்தச் சிறுமி.