ஆண்டுக்கு ரூ.1.6 கோடி சம்பளம்; ஐஐடி, ஐஐஎம் மாணவர்களையே மிரளவைத்த அதிதி திவாரி!
இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம்-இல் படித்து அதிக சம்பளத்தில் வேலை கிடைப்பது சகஜம். ஆனால், அவர்களையே மிஞ்சும் அளவிற்கு என்ஐடி பாட்னாவில் படிப்பை முடித்த மாணவி அதிதி திவாரிக்கு ஃபேஸ்புக்கில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம் போன்ற பல்கலைக்கழங்களில் பயிலும் மாணவர்கள் டிகிரியை கையில் வாங்கினார்களோ இல்லையோ முன்னணி நிறுவனங்களில் லட்சக்கணக்கான சம்பளத்திற்கு வேலைக்கான பணி ஆணையைப் பொறுகிறார்கள்.
ஆனால், 2022ம் ஆண்டு யாருமே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஃபேஸ்புக்கில் பேக்கேஜ் பெற்ற என்ஐடி பாட்னா மாணவி, தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது எப்படி என பார்க்கலாம்...
பாட்னா மாணவி படைத்த சாதனை:
என்ஐடி பாட்னா கல்லூரியில் வரலாறு காணாத வகையில் ஐஐடி கல்லூரிக்கு இணையாக 1.6 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
![Aditi](https://images.yourstory.com/cs/18/536edf40e52011e9bc420fad7003cf62/CollageMaker-08-May-2023-04-26-PM-3272-1683543425014.jpg?fm=png&auto=format&w=800)
பாட்னாவில் உள்ள என்ஐடி பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த மாணவியான அதிதி திவாரி தான், சுமார் 1.6 கோடி ரூபாயில் ஃபேஸ்புக்கில் வேலைவாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரிகிறார், அவரது தாயார் அரசுப் பள்ளி ஆசிரியை ஆவார்.
2022ம் ஆண்டு NIT பாட்னாவில் நடந்த பிளேஸ்மெண்டில் அதிதி திவாரி ஆண்டுக்கு 1.6 கோடி ரூபாய் சம்பளத்துடன் ஃபேஸ்புக்கில் பொறியாளராக பணி நியமனம் பெற்றுள்ளார். இதன் மூலமாக கடந்த 5 ஆண்டுகளில் என்ஐடி பாட்னா கேம்பஸ் பிளேஸ்மெண்டில் யாருமே படைக்காத சாதனையை அதிதி படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக என்ஐடி பாட்னாவில் தேர்வான மாணவர்கள் பெற்ற அதிகப்படியான சம்பளம் 50-60 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்னி மல்ஹோத்ரா:
சமீபத்தில் ஐஐஎம் மாணவியான அவ்னி மல்ஹோத்ரா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் ரூ.64.61 லட்சம் ஆண்டு சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்டது தலைப்புச் செய்தியாக இருந்தது. தற்போது அதனை முறியடிக்கும் விதமாக என்ஐடி பாட்னா மாணவி அதிதி திவாரி ஆண்டுக்கு 1.6 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
ஐஐஎம் சம்பல்பூர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“இந்த ஆண்டு பெறப்பட்ட மிக உயர்ந்த சம்பளம்," என அவ்னி மல்ஹோத்ராவை குறிப்பிட்டிருந்தது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த மல்ஹோத்ரா, ஆறு சுற்று நேர்காணல்களுக்குப் பிறகு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டார். ஐஐடி-யில் இணைவதற்கு முன்பாக அவ்னி மல்ஹோத்ரா இன்ஃபோசிஸில் பணியாற்றி மூன்று வருட பணி அனுபவம் மற்றும் அவரது திறனுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வேலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தகவல் உதவி - டிஎன்ஏ இந்தியா | தமிழில் - கனிமொழி
![](https://images.yourstory.com/assets/images/alsoReadGroupIcon.png?fm=png&auto=format)
'ஆண்டுக்கு ரூ.64 லட்சம் சம்பள வேலை' - பெற்றோருக்கு பெருமை சேர்த்த சேலம் விவசாயி மகள்!