‘கல்வி தான் எல்லாம்’ - ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு உதவும் ஒடிசா தம்பதி!
"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்றார் ஒளவையார். அதாவது அழியா கல்விச் செல்வத்தை பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டும் என்பதே அதன் பொருளாகும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த ஒடிசா தம்பதி ஏழை குழந்தைகள் கற்பதற்காக தங்களால் முடிந்த முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர்.
'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்றார் ஒளவையார். அதாவது, அழியா கல்விச் செல்வத்தை பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டும் என்பதே அதன் பொருளாகும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த ஒடிசா தம்பதி ஏழைக் குழந்தைகள் கற்பதற்காக தங்களால் முடிந்த முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று வாட்டி வதைத்த போது ஸ்மார்ட் போனும், ஆன்லைன் வசதியும் இருந்த பிள்ளைகளுக்கு மட்டுமே முறையான கல்வி கிடைத்தது. ஏழை எளிய மற்றும் மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஸ்மார்ட் போன் வாங்க முடியாமலும், இணையதள வசதி இல்லாமலும் பாடங்களை கற்க முடியாமல் தவித்தனர்.
அப்போது தான் பொருளாதார சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் போன ஒடிசா தம்பதி, தன்னைப் போல் ஏழை எளியக் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இலவச கல்வி வழங்கி வருகின்றனர்.
ஓடிசா தம்பதியின் கல்வி சேவை:
ஒடிசா மாநிலம் ஜுனாகரைச் சேர்ந்த 48 வயதான தொழிலதிபர் தீபக் சாஹு மற்றும் அவரது 45 வயது மனைவி சீதாராணி ஆகியோர் நவம்பர் 1, 2021 ஏழை எளிய மக்களுக்கான பயிற்சி மையத்தை திறந்தனர். அங்கு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அனைத்து பாடங்களிலும் இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு கற்பிக்க மூன்று பகுதி நேர ஆசிரியர்களை தம்பதியினர் நியமித்துள்ளனர்.
தற்போது, ஆரம்பநிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான 105 மாணவர்கள் பயிற்சி மையத்தில் படித்து வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
கலஹண்டியில் மூன்று உணவகங்கள் மற்றும் கேட்டரிங் சேவைகளை நடத்தி வரும் தீபக், பயிற்சி மையத்திற்குத் தேவையான நிதியை வழங்கி வருகிறார். அவரது மனைவி சீதாராணி பயிற்சி மையத்தை நிர்வகித்து வருகிறார்.
வறுமையால் எட்டா கனியான கல்வி:
தற்போது வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வரும் தீபக், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததுள்ளார். வீட்டில் போதுமான வசதி இல்லாததால் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைக்க முடியவில்லை. மற்றொருபுறம் அவரது மனைவியான சீதாராணி வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்றால் தீபக் தான், சீதாராணியை திருமணத்திற்கு பிறகு படிப்பை தொடரவும், முதுகலை பட்டம் பெறவும் கட்டாயப்படுத்தியதோடு, அதற்கு உதவியாகவும் இருந்துள்ளார்.
"அதிர்ஷ்டவசமாக, எனது வணிகம் லாபகரமாக அமைந்தது. நாங்கள் நிலையான வருமானத்தைப் பெறத் தொடங்கியபோது, போட்டித் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் இளைஞர்களுக்காக ஒரு பொது நூலகத்தைத் திறக்க முடிவு செய்தோம்.”
ஒடிசா திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து டாடா டிரஸ்ட்களின் கீழ் செயல்படும் திறன் மேம்பாட்டு முயற்சியான டாடா ஸ்டிரைவ் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் கீழ், ஒடிசாவில் உள்ள குறுந்தொழில் முனைவோர் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கலாம் அல்லது வளர்க்கலாம். அவர் 2019ல் நூலகத்தைத் திறந்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு உதவும் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளைத் தொடர்ந்து வாங்குகிறார்.
ஏழை குழந்தைகளுக்கு உதவிக்கரம்:
ஒரு வருடம் கழித்து கோவிட் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டபோது, தீபக், சீதாராணி தம்பதியின் பார்வை ஆன்லைன் கல்வி கற்க முடியாமல் தவித்து வந்த ஏழை குழந்தைகள் மீது திரும்பியது.
“ஸ்மார்ட் ஃபோன்களை வாங்க முடியாத குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள அல்லது துணை வகுப்பு சார்ந்த படிப்புப் பொருட்களைப் பெறுவதற்கு பயிற்சியளிக்க கோவிட் காலத்தில் புதிய முயற்சியை தொடங்கினோம். இன்று, அருகிலுள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் குழந்தைகள் இலவச பயிற்சிக்காக எங்கள் மையத்திற்கு வருகிறார்கள்”
ஒவ்வொரு மாதமும், தம்பதிகள் தங்கள் தொழிலில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக சேமித்து வைக்கின்றனர். இதுகுறித்து சீதாராணி கூறுகையில்,
“பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் இங்கு எதையும் கொண்டு வரத் தேவையில்லை. அவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுப் பிரதிகள் மற்றும் எழுதுபொருள்களை இலவசமாக வழங்குகிறோம்.''
பணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக விலைமதிப்பற்ற கல்வியை ஏழை குழந்தைகள் கைவிட்டு விடக்கூடாது என்பதே தீபக் - சீதாராணி தம்பதியின் பிரதான நோக்கமாகும். வகுப்புகளில் எப்போதும் பாடம் மட்டுமே நடத்தாமல், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ஓவியம் வரைதல், விவாதங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் போன்ற கூடுதல் பாடத்திட்டங்களை நடத்துகின்றனர்.
தற்போது, பயிற்சி வகுப்புகள் நூலகத்தில் இருந்து செயல்படுகின்றன. ஆனால், தம்பதியினர் ஜுனாகரில் 2021ல் வாங்கிய நிலத்தில் நிரந்தர பயிற்சி மையத்தை உருவாக்கி வருகிறார். அங்குல் 500 குழந்தைகள் தங்கி கல்வி கற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி
வீதிகளில் சுற்றித் திரியும் 300க்கும் மேற்பட்ட மனநலம் பாதித்தவர்களை ஆதரிக்கும் விழுப்புரம் தம்பதியினர்!