150 நகரங்களில் செயல்படும் ’ஓலா பைக்’ - மும்மடங்கு வளர்ச்சிக்கு இலக்கு!
2016ல் அறிமுகமான ஓலா பைக் சேவை, கடந்த ஆண்டு 3,00,000 குறும் தொழில் முனைவோரை உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய கால்டாக்சி செயலி நிறுவனமான ஓலா, தனது ’ஓலா பைக்’ சேவையை இந்தியா முழுவதும் 150 நகரங்களில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அடுத்த 12 மாதங்களில் 3 மடங்கு வளர்ச்சி அடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓலா பைக் மூலம், கடந்த ஆண்டு 3,00,000 குறும் தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரிவு 2016ல் குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் ஜெய்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, ஐதரபாத், சண்டிகர், கொல்கத்தா, கயா, பிகானர் மற்றும் முகல்சராய் உள்ளிட்ட நகரங்களில் செயல்படுகிறது.
“ ஓலா பைக் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்டான, புதுமையான, குறைந்த செலவிலான போக்குவரத்துத் தீர்வை அளிக்கிறது. கோடிக்கணக்கான மக்களுக்கான போக்குவரத்து வசதியை அளிக்கும் எங்கள் லட்சியத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளது. பீகாரின் சப்ரா போன்ற சிறிய நகரங்கள் துவங்கி, குருகுராம் போன்ற பெரிய நகரங்கள் வரை மக்கள் விரைவான, நம்பகமான, செலவு குறைந்த போக்குவரத்து தீர்வை நாட ஓலா பைக் வழி செய்துள்ளது,” என்று விற்பனை, மார்க்கெட்டிங் அதிகாரி அருண் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் மேலும் பல நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் விரிவாக்கம் செய்திருப்பதன் மூலம், ஓலா பைக், தனது 20 லட்சம் பங்குதாரர் ஓட்டுனர்களுக்கான வாழ்வாதார வாய்ப்பையும் வழங்கியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இந்த நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் அமைந்துள்ள சூழலில், எங்களுடைய வேகமான வளரும் வலைப்பின்னலில் உள்ள 3,00,000 பங்குதாரர்கள் வாழ்வாதாரத்திற்கும் ஓலா பைக் உதவி வருகிறது. நாட்டின் இளைஞர்களுக்கு முன்பில்லாத வாய்ப்புகளை உருவாக்குகிறது. வரும் ஆண்டில் பத்து லட்சம் பைக் பங்குதாரர்களை பெற இருக்கிறோம்,” என்றும் அருண் தெரிவித்துள்ளார்.
ஒலா பெரிய அளவிலான விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. ஒரு பக்கம் அது, மெட்ரோ நகரங்களை தாண்டி, இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களுக்குச் செல்கிறது. மற்றொரு பக்கம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் யுகேவில் விரிவாக்கம் செய்துள்ளது.
மின்வாகன பிரிவிலும் விரிவாக்கம் செய்து வருகிறது. ஓலாவின் மின்வாகன பிரிவான, ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி, சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் இருந்து ரூ.1,725 கோடி நிதி பெற்றுள்ளது.
இருப்பினும் இந்திய அளவிலான விரிவாக்கத்திற்கு, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஓலா கட்டுப்பாடு அமைப்புடனான மோதலில் ஈடுபட்டிருக்கிறது.
மெட்ரோ நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மட்டும், இந்திய பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், இந்த வாகனங்கள் போக்குவரத்து சிக்கலுக்கான எளிய தீர்வாக இருக்கின்றன.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்