கடனாளி விவசாயியை ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆக்கிய ’வெங்காயம்’
வெங்காயம் விலை அப்பப்போ ஏறுவதும், குறைவதுமாக இருப்பதால், அதைப் பயிரிடும் விவசாயிகளின் நிலைமை மோசமாகிவிடுகிறது. ஆனால், கர்நாடக விவசாயி ஒருவர் மட்டும் வெங்காய விவசாயம் சிரிக்க வைத்திருக்கிறது. இவர் ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆனார் தெரியுமா?
வெங்காயம்... கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் எல்லோரையும் பேச வைத்த பெருமை இந்த வார்த்தைக்குத் தான் உண்டு. எல்லா உணவுக்கும் வெங்காயம் சேர்த்தே பழகிப் போன நம்மவர்களுக்கு வெங்காய விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஒருசில சூழலில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.200-யை தாண்டியும் விற்கப்படுகிறதுது. இதனால் வெங்காய விலையை கேட்டே பொதுமக்கள் கண்ணீர் வடித்த காலமும் உண்டு. வேறு வழியே இல்லாமல் அதிக விலை கொடுத்தாவது வெங்காயத்தை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வெங்காயம் வாங்கியே ஏழையாகிப் போனதாக பலர் மீம்ஸ் போட்டுக் கூட கிண்டல் செய்தனர்.
இப்படியாக பலரது வாழ்வில் பிரச்சினையை ஏற்படுத்திய வெங்காய விலை உயர்வு, ஒரு விவசாயியை கோடீஸ்வரர் ஆக்கி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதுபோன்று திடீர் வெங்காய விலை உயர்வால் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி, கடனாளியாக இருந்து ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகி இருக்கிறார்.
சித்ரதுர்கா மாவட்டம் தொட்டசித்தவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மல்லிகார்ஜூன் (42). இவருக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் வெங்காயம் பயிரிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ரூ.5 லட்சம் அவருக்கு லாபம் கிடைத்தது.
இதனால் நடப்பு ஆண்டில் மல்லிகார்ஜூன் தனது 10 ஏக்கர் நிலத்தோடு, மேலும், 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கி வெங்காயம் பயிரிட்டார். இதற்காக அவர் ரூ.15 லட்சம் செலவு செய்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் வெங்காய விலை குறைவாக இருந்ததால், அகலக் கால் வைத்து விட்டோமோ என கவலையடைந்துள்ளார் மல்லிகார்ஜூன்.
ஆனால் திடீரென நிலைமை தலைகீழாக மாறியது. திடீரென வெங்காய விலை உயர ஒரே மாதத்தில் இன்ப அதிர்ச்சி அடைந்தார் அவர்.
தான் பயிரிட்ட வெங்காயத்தை அறுவடை செய்து விற்று வரும் அவர், ஒரு மாதத்தில் மட்டும் 240 டன் அளவுக்கு வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனை செய்துள்ளார். இதன்மூலம் அவர் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.4.80 கோடி சம்பாதித்திருக்கிறார்.
இந்த 240 டன் வெங்காயத்தை மொத்த சந்தையில் அவர் விற்றிருந்தால்கூட ரூ.4 கோடி தான் கிடைத்திருக்கும். ஆனால், வெங்காய விலை உயர்வால் அவருக்கு இத்தனை பணம் கிடைத்திருக்கிறது என்கின்றனர் அப்பகுதி வியாபாரிகள்.
“கடன் வாங்கி தான் இம்முறை வெங்காயம் பயிரிட்டிருந்தேன். கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் நிச்சயம் ரூ.5 லட்சம் லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். இம்முறை கூடுதல் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்ததால் எப்படியும் ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கலாம் என நினைத்தேன். அக்டோபரில் விலை குறைந்ததால் மனம் உடைந்து போனது. கடனைக்கூட அடைக்க முடியாதோ என கவலைப் பட்டேன். ஆனால் நவம்பர் மாதம் எனக்கு கை கொடுத்து விட்டது,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் மல்லிகார்ஜூன்.
நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஒரு குவிண்டால் வெங்காயத்தை ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார் அவர். ஆனால் சில நாட்களிலேயே ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.12 ஆயிரத்தை தொட்டுவிட, அவருக்கு லாபமும் அதிகமாகி விட்டது. லட்சங்களில் லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு கோடிகளில் லாபம் கிடைத்து திக்குமுக்காட வைத்து விட்டது.
“அதிக லாபம் கிடைத்துள்ளதால் எனது கடனை எல்லாம் அடைத்துவிட்டேன். புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளேன். மேலும் நிலம் வாங்கி விவசாயத்தையும் விரிவுப்படுத்த உள்ளேன்,” என எதிர்காலம் குறித்து இப்போதே திட்டமிட ஆரம்பித்து விட்டார் இந்த விவசாயி.
மல்லிகார்ஜூனிடம் தினமும் 50 பேர் விவசாயப் பணியாற்றி வருகிறார்கள். வெங்காய விலை உயர்வால் ஆங்காங்கே நடக்கும் திருட்டை தடுக்கும் வகையில் தனது தோட்டத்திற்கும் காவல் போட்டுள்ளார் அவர். இந்தப் பணியில் காவலர்களோடு சேர்ந்து மல்லிகார்ஜூனும் தனது குடும்பத்தினருடன் ஈடுபட்டு வருகிறார்.
மல்லிகார்ஜூன் வசிக்கும் பகுதி நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ள பகுதியாகும். நிலத்தடி நீரும் வற்றிப்போய்விட்டதால் பலரும் விவசாயத்தை கைவிட்டு விட்டனர். ஆனால் மல்லிகார்ஜூனா மட்டும் 2004ம் ஆண்டு முதல் மழைக்காலத்தில் வெங்காயத்தை பயிரிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவரது நம்பிக்கை வீண் போகாமல், இத்தனை ஆண்டுகள் பட்ட கஷ்டத்திற்கு சேர்த்து வைத்து ஒரே மாதத்தில் பலனை அனுபவித்து வருகிறார்.