ஆக்சிஜன் வசதியுடன் பஸ்கள்: கொரோனா நோயாளிகளைக் காக்க புதிய முயற்சி!
தனியார் அமைப்பின் உதவிக்கரம்!
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்திலும் இதே நிலை தான். தமிழகம் முழுவதும் தினசரி பாதிப்பு 20000-ஐ தொட்டுவிட்டது. இதனால் நாளுக்கு நாள் அச்சம் கூடிக்கொண்டே செல்கிறது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது அமலுக்கு வந்துள்ள இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. வட மாநிலங்கள் பலவற்றில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தமிழகத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கொரோனா நோயாளிகளுக்காக,
சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாசல்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நோயாளிகளுக்கு உதவப்பட்டு வருகின்றது. இந்த ஏற்பாட்டை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு செய்துள்ளது. இதற்கான விழா நேற்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தது.
விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜெயின் அமைப்பின் தலைவர் அனில் ஜெயின்,
“கொரோனா காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசரச் சிகிச்சை வேண்டி வீடுகளில் இருந்து அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவச பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதுபோன்ற பஸ்கள் சென்னையில் உள்ள நான்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாசல்களில் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும். ‘Oxygen on Wheels' என்ற அந்த ஆக்சிஜன் வசதி தேவைப்படுபவர்கள் 094343 43430 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவோ, வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.
ஒரு பேருந்தில் ஒரே நேரத்தில் 6 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி அளிக்கும் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவைப்படும் வகையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதற்குத் தேவையான பேருந்துகளை கீதா வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் கொடுத்துள்ளது.
”தற்போது முதல்கட்ட நடவடிக்கையாக இது தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்குக் கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் முக்கியமான நகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இதேபோல் பேருந்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு சேவை அளிக்க திட்டமிட்டு இருக்கிறோம்," என்று பேசியிருக்கிறார்.
தொகுப்பு: மலையரசு