தமிழகம், கேரளாவில் 10 லட்சம் வணிகர்களை இணைக்க Paytm திட்டம்!
பேடிஎம் நிறுவனம் தனது 'ஆல் இன் ஒன் கியூஆர்' சேவை மூலம் வணிகர்களுக்கு மேலும் சிறந்த பரிவர்த்தனை அனுபவத்தை அளிக்க திட்டமிட்டுள்ளது.
இணைய பண பரிவர்த்தனை சேவை வழங்கி வரும் பேடிஎம் (தாய் நிறுவனம் ஒன்97 கம்புயூனிகேஷன்ஸ்), அடுத்த 12 மாதங்களில், தமிழகம் மற்றும் கேரள மாநிங்களை சேர்ந்த பத்து லட்சம் வணிகர்களை தனது மேடையில் இணைத்துக்கொள்ளும் என அறிவித்துள்ளது.
பேடிஎம் நிறுவனம் அண்மையில், பேடிஎம் வாலெட், ருபே கார்டு, அனைத்து யுபிஐ செயலிகள் மூலம், நேரடியாக வங்கிக் கணக்கிற்கு பரிவர்த்தனையை ஏற்க வழி செய்யும் ஆல் இன் ஒன் கியூஆர் கோடு வசதியை அறிமுகம் செய்தது. கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில், நிறுவனம் இரு மடங்கு வளர்ச்சியை பெறத் திட்டமிட்டுள்ளது.
பேடிஎம் தனது பேடிஎம் பார் பிஸ்னஸ் செயலி மூலம், அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் உகந்த ஒற்றை வழியை அளிக்கிறது.
மேலும், பேடிஎம் தனது ஆல் இன் ஒன் பேடிஎம் கியூஆர் வசதியை, கால்குலேட்டர், பவர் பாங்க், பென் ஸ்டாண்ட் உள்ளிட்டவற்றிலும் அறிமுகம் செய்துள்ளது. வணிகர்கள் பெயர், லோகோ தாங்கிய டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த கியூஆர் கோடை, பேடிஎம் பார் பிஸ்னஸ் செயலி மூலம் தருவித்துக் கொள்ளலாம். பரிவர்த்தனை தொகையை உறுதி செய்யும் ஒலி வசதியான சவுண்ட்பாக்ஸ் வசதி வணிகர்களால் மிகவும் விரும்பப் படும் ஒன்றாக இருப்பதாக நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
வணிகர்களுக்கான பேடிஎம் ஃபார் பிஸ்னஸ் செயலி, பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட பேடிஎம் பங்குதாரர்களால் பயன்படுத்தப்படுகிறது. பரிவர்த்தனைகளை நிர்வகிக்க வழி செய்வதோடு, பல்வேறு சேவைகளுடன் கியூஆர் கோடை தருவிக்கவும் இது வழி செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வணிகர்கள் இதன் வாயிலாக, கடன், காப்பீடு போன்ற வசதிகளையும் அணுகலாம். இந்த சேவை வணிகர்கள் பரிவர்த்தனைத் தொகை உடனடியாக வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட வழி செய்கிறது.
வணிகர்களை ஊக்குவிக்கும் வகையில், கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகளை நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் ஆல் இன் ஒன் கியூஆர் கோடு சேவையுடன் இணைந்து செயல்படும் பேடிஎம் பிஸ்னஸ் ’கட்டா’ வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகர்கள் வாடிக்கையாளர் பரிவர்த்தனை தொடர்பான டிஜிட்டல் லெட்ஜரை பராமரிக்க முடியும். வாடிக்கையாளர்கள் பில்லிங் வரலாறு உள்ளிட்ட தகவல்களை பெற முடியும்.
“தமிழகம் மற்றும் கேரளா, கடந்த ஆண்டு 50 சதவீத வர்த்தகவளர்ச்சியை கண்டதாகவும், இந்த ஆண்டும் இந்த பகுதியில் டிஜிட்டல் ஏற்பு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என பேடிஎம் மூத்த துணைத்தலைவர் சவுரப் சர்மா கூறியுள்ளார்.
”பேடிஎம் ஃபார் பிஸ்னஸ் செயலி, வணிகர்களுக்குத் தேவையான முழுமையான டிஜிட்டல் உள்கட்டமைப்பை அளிக்கிறது. எல்லா அளவிலான வணிகர்களும் இந்த வசதியை அணுகலாம். இதில் இணைவது சிக்கல் இல்லாதது. ஆல் இன் ஒன் கியூஆர் வசதி இணைப்பு மூலம் வணிகர்களின் பயணத்தில் ஒவ்வொரு படியிலும் உடன் இருப்போம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: சைபர்சிம்மன்