‘பொன்னியின் செல்வன்’ புதினத்திற்கு புதுவடிவம் கொடுத்துள்ள மென் பொறியாளர்!
சென்னையைச் சேர்ந்த இராகவிப்பிரியா தமிழ் மொழியின் மீதுள்ள ஆர்வத்தால் பொன்னியின் செல்வன் கதையை இளம் சமூகத்தினரிடையே கொண்டு சேர்க்க கதை கதையாய் கதைக்கலாம் (K2kadhaikalam) என்கிற ஒலி புத்தகத்தை நிறுவியுள்ளார்.
ஒரு குட்டி கதை… சாரி… ரெண்டு குட்டி கதைங்களோட ஆரம்பிக்கலாம்.
கதை - 1
ஒரு ஊர்ல வசந்தின்னு ஒரு பொண்ணு. ஒரு நாள் வசந்தி அவங்க அம்மாகூட ஸ்கூட்டியில வீட்டிலேர்ந்து கிளம்பினாங்க. பாதி தூரம் போயிட்டே இருக்கும்போது வண்டி திடீர்ன்னு நின்னுடுது.
“என்னம்மா ஆச்சு… பெட்ரோல் இல்லையா? நீ எப்பவுமே இப்படிதான். வெளிய கிளம்பறதுக்கு முன்னாடி இதெல்லாம் செக் பண்றதில்லையா? வெளிய போகணுன்னு நேத்தே தெரியும் இல்லை? இப்பவே லேட்டாயிடுச்சு, உன்னால நாம நேரத்துக்கு போக முடியாம போயிடுச்சு பார்த்தியா?....” இப்படி அடுக்கிக்கொண்டே போனார் வசந்தியின் அம்மா.
வசந்திக்கு வண்டி பாதியில் நின்றுபோன டென்ஷன் ஒருபுறம். இந்த வசைமொழிகள் மற்றொருபுறம். அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் சில நொடிகள் ஸ்தம்பித்து போகிறார் வசந்தி.
கதை – 2
மாலான்னு ஒரு பொண்ணு. அவங்களும் முதல் கதையில சொன்ன மாதிரியே அவங்கம்மாகூட ஸ்கூட்டியில வீட்டிலேர்ந்து கிளம்பினாங்க. அதே பிரச்சனை. பாதி வழியில் வண்டி திடீர்ன்னு நின்னுடுச்சு.
“என்னம்மா ஆச்சு… பெட்ரோல் இல்லையா இல்லை வேற ஏதாவது பிரச்சனையா? பக்கத்துல பெட்ரோல் பங்க் எங்க இருக்குன்னு பாரு.. இல்லை மெக்கானிக் நம்பர் இருந்தா போன் பண்ணி பக்கத்துல யாராவது இருக்காங்களான்னு கேட்டுப்பாரு… வண்டியை ரிப்பேர் பண்ண கொடுத்துட்டு நாம கேப் புக் பண்ணி போயிடலாமா...?" இப்படி அடுத்தடுத்த ஆப்ஷன்களை அடுக்குகிறார் மாலாவின் அம்மா.
மாலா இவற்றை மனதில் அசை போட்டவாறே ஹேண்ட்பேக்கில் போனைத் தேடித் துழாவுகிறார்.
நிற்க! இந்த இரண்டு கதைகளிலும் பிரச்சனை ஒன்றுதான். ஆனால் அதை அணுகும் விதம் மாறுபடுகிறது.
முதல் கதையின்படி பிரச்சனையில் மட்டுமே கவனம் செலுத்தும் அணுகுமுறை அதை மேலும் பூதாகரமாக்கி நம் சிந்திக்கும் திறனைத் தடுமாறச் செய்துவிடுகிறது.
அதேசமயம் இரண்டாவது கதையின் தீர்வு நோக்கிய அணுகுமுறையானது அடுத்தடுத்த ஆப்ஷன்களை சிந்திக்கத் தூண்டுகிறது.
அதெல்லாம் சரி, எதற்காக இந்தக் குட்டிக் கதை (கள்) என்கிறீர்களா? அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பாட்காஸ்ட் வடிவில் கதை சொல்லி பலரைக் கவர்ந்துள்ள இராகவப்பிரியாவைப் பற்றியது இந்தக் கட்டுரை என்பதால் கதையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்தது இரண்டாவது கதையில் வருவது போன்று கொரோனா லாக்டவுனைப் பிரச்சனையாகப் பார்க்காமல் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையுடன் தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் இராகவப்பிரியா.
சரி இனி இராகவிப்பிரியாவைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்...
இராகவிப்பிரியா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவருக்கு சிறு வயது முதலே தமிழ் மொழியின் மீது தீராத காதல். பொறியியல் பட்டப்படிப்பு முடித்து ஐடி துறையில் வேலையில் சேர்ந்துள்ளார். ஏழரை ஆண்டு பணி வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“கல்யாணம் முடிஞ்சு குழந்தை பிறந்ததுக்கப்புறம் ஒரு கட்டத்துல வேலையை விடவேண்டிய சூழல் வந்துது. அப்பதான் அடுத்து கேரியர்ல என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சேன். நல்லா பேசுவேன்றதால ஆர்ஜே ஆகலாம்ன்னு நினைச்சேன். ஜர்னலிசம் படிக்கக்கூட பிளான் பண்ணேன்,” என்று கதைக்கும் முயற்சிக்கு முன்பிருந்த மனநிலையை விவரித்தார் இராகவிப்பிரியா.
அந்த சமயத்தில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக வழிகாட்டும் பயிற்சி வகுப்பு ஒன்றைப் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்துகொண்டார். ஒரு வாரம் இங்கு பயிற்சிக்கும் சென்றுள்ளார். இதுவே இவரது முயற்சியின் ஆரம்பப்புள்ளியாக இருந்துள்ளது.
ஒருமுறை ‘பொன்னியின் செல்வன்’ கதையை ஒரு பாட்காஸ்டில் கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் ஆங்கிலம் கலந்த தமிழில் பொன்னியின் செல்வன் கதை சொல்லப்பட்டுள்ளது. தமிழ் பலருக்குப் புரியாது என்கிற வாதத்தை முன்வைத்தே இவ்வாறு ஆங்கிலம் கலந்த மொழி நடையில் கதை சொல்லப்பட்டிருந்தது.
தாய்மொழியான தமிழ் மொழியில் அதீத ஆர்வம் கொண்ட இராகப்பிரியாவால் இந்த வாதத்தை ஏற்கமுடியவில்லை.
தமிழ் புதினங்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்த புத்தகம் ‘பொன்னியின் செல்வன்’. இதற்கென ஒரு மிகப்பெரிய வாசகர் வட்டம் உண்டு.
2300 பக்கங்கள் கொண்ட இந்த அமர காவியம் எந்தவித கலப்படமும் இல்லாமல் கல்கியின் மொழி நடையிலேயே இன்றைய இளம் தலைமுறையினரிடமும் சென்றடையவேண்டும் என்பதே இராகவப்பிரியாவின் விருப்பம். அதற்காகவே கதை கதையாய் கதைக்கலாம் (K2kadhaikalam) என்கிற ஒலி புத்தகத்தை நிறுவியுள்ளார்.
எத்தனையோ பேர் இதே கதையை சொல்லிட்டாங்களே? ஏன் மறுபடியும் ‘பொன்னியின் செல்வன்’ என்று பலர் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். இதற்கு பதிலளிக்கும் வகையில்,
“ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி ஸ்டைல் உண்டு. நான் அமரர் கல்கியின் வார்த்தைகளை அட்சரம் மாறாமல் அப்படியே ஒலி வடிவில் வழங்கியிருக்கேன். ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் உயிரூட்டும் வகையில் முடிந்தவரை வெவ்வேறு குரல்களில் பதிவு செய்திருக்கிறேன்,” என்கிறார்.
இராகவப்பிரியா தனது தெளிவான உச்சரிப்புடன் ஆழ்வார்கடியான், சுந்தர சோழர், நந்தினி என வெவ்வேறு கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றார்போல் குரலை மாற்றி அழகாகக் கதைத்துள்ளார்.
இந்தப் புதினத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக இராகவிப்பிரியாவின் தோழி லாவண்யா ராமச்சந்திரன் இதிலுள்ள பாடல்களுக்கு மெட்டிசைத்து இனிய குரலில் பாடியுள்ளார்.
“ஒரு மாணவி. 16 வயசிருக்கும். என்கிட்ட பேசினாங்க. அவங்க சயின்ஸ் ஸ்டூடண்ட். இங்கிலீஷ் நாவல் மட்டும்தான் படிச்சிட்டிருந்தாங்களாம். பொன்னியின் செல்வன் கதைன்றதால கேட்க ஆரம்பிச்சிருக்காங்க. ‘படம் பார்க்கறது, யூட்யூப் பார்க்கறது எல்லாத்தையும் விட்டுட்டேன். தமிழ் இவ்வளவு அழகான மொழின்னு நீங்க வாசிச்சதுலேர்ந்து தெரிஞ்சுகிட்டேன்’ அப்படின்னு என்கிட்ட சொன்னாங்க.
”அமரர் கல்கியோட காவியத்தை இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கறதுல நானும் சிறியளவுல பங்களிச்சிருக்கேன்ற மன திருப்தி கிடைச்சுது,” என்று பூரிப்புடன் குறிப்பிடுகிறார் இராகவிப்பிரியா.
இந்த மாணவிக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒலி புத்தகங்கள் ஒரு வரப்பிரசாதமே.
இராகவப்பிரியாவின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் மின் அஞ்சல், குறுஞ்செய்தி போன்றவை மூலம் வாழ்த்தும் ஆதரவும் அளித்து வருகின்றனர். பதின்ம வயது சிறுவர், சிறுமிகள் முதல் 80 வயது முதியவர், மூதாட்டி வரை இவரது பாட்காஸ்டை ரசித்து மகிழ்கிறார்கள்.
பாட்காஸ்ட் தரவரிசை பட்டியலை உருவாக்கும் சார்டபில்ஸ் (Chartables) அமைப்பு இராகவப்பிரியாவின் K2kadhaikalam பாட்காஸ்டை இலங்கையில் முதல் தரத்திலும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், குவைத், பெஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளில் முதல் 50 இடங்களிலும் தர வரிசைப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இராகவிப்பிரியா நா.பார்த்தசாரதி எழுதிய புறநானூற்றுச் சிறுகதைகள் புத்தகத்தையும் தனது தோழி லாவண்யா உடன் இணைந்து வழங்கியுள்ளார். இந்த முயற்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றாலும் போதிய நேரம் ஒதுக்க முடியாத காரணத்தால் தற்காலிகமாக அதை நிறுத்திவிட்டு பொன்னியின் செல்வன் புதினத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் நாட்களில் கூட்டுநிதி பிரச்சாரம் மூலம் மானிடைஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் இராகவிப்பிரியா.
பொன்னியன் செல்வன் பாட்காஸ்ட் கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள்
வாழ்த்துக்கள் சகோதரி!