30 ஆண்டுகள் 15 கி.மீ காட்டுவழியில் நடந்து தபால்கள் கொடுத்த போஸ்ட்மேன்!
சமூக ஊடகங்கள் தவறான தகவல்கள் பகிரப்படுவதாக எதிர்மறை கருத்துக்கள் வந்தாலும் பல ‘ரியல் ஹீரோ’க்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதாக பல எதிர்மறை கருத்துக்கள் வந்தாலும் பல ரியல் ஹீரோக்களை பரவலாக மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும் இத்தகைய வலைதளங்களே. இஸ்ரோ சிவனின் சேவையை மட்டுமல்ல தபால்காரர் சிவனின் சேவையும் பலரை சென்றடைவதில் சமூக ஊடகம் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
ஆம். சிவன் என்ற போஸ்ட்மேன், 30 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தபால் நிலையத்தில் பணியாற்றுகிறார். இவர் தினமும் 15 கி.மீட்டர் நடந்தே சென்று கடிதங்களை உரியவர்களிடம் சேர்த்துள்ளார். சமீபத்தில் இவர் பணி ஓய்வு பெற்றதை அடுத்து ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு இவரது அர்ப்பணிப்புடன்கூடிய சேவையை தனது ட்விட்டர் பதிவில் பாராட்டியுள்ளார்.
“போஸ்ட்மேன் சிவன் தினமும் 15 கி.மீட்டர் அடர்ந்த காட்டுப்பாதையில் நடந்து சென்று குன்னூர் பகுதி மக்களுக்கு தபால்களைக் கொண்டு சேர்த்துள்ளார். இவரை காட்டு யானைகள், கரடிகள், காட்டெருமைகள் போன்ற எத்தனையோ வன விலங்குகள் துரத்தியுள்ளன. இவர் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றைக் கடந்தே சென்று வந்தார். இந்தப் பகுதிகள் வழுக்கும்தன்மையுடன் இருக்கும். மிகுந்த அர்ப்பணிப்புடன் 30 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வந்த சிவன் கடந்த வாரம் ஓய்வு பெற்றுள்ளார்,” என்று சுப்ரியா சாஹு ட்விட்டரில் சிவனின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவிற்கு ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்து மறுட்வீட் செய்துள்ளனர்.
இவர் உண்மையான சூப்பர் ஹீரோ என்றும் இவருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும் என்றும் டெட் பேச்சாளர் பட்டியலில் இடம்பெற்று தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் இவரது கடமையுணர்வை பலர் பாராட்டியுள்ளனர் மக்கள்.
கட்டுரை: Think Change India | தகவல் உதவி: இந்தியன் எக்ஸ்பிரஸ்