‘இந்தியாவை கொரோனா இல்லா நாடாக்குவோம்’ - கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்ட பிரதமர் மோடி!
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி முதல் டோசை போட்டுக் கொண்டார்.
பிரதமர் தான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டிருந்தார். அதில்,
”எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று செலுத்திக் கொண்டேன். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் நமது மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவாக பணியாற்றினார்கள். எல்லாரும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். நாம் எல்லாரும் இணைந்து இந்தியாவை ‘கோவிட்-19’ இல்லா நாடாக்குவோம்...” என்று பதிவிட்டார்.
மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தகுதியுள்ள அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா என்பவர் தடுப்பூசி செலுத்தினார். தடுப்பூசி பெற்றுக் கொண்ட பிரதமர் ஊசி தனக்கு வலியை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். மேலும் செவிலியர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும் கேட்டுள்ளார். பிரதமருக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. கொரோனா தடுப்பூசிகள் யார் யாருக்கு முதலில் செலுத்தவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு, அதன்படி, முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனிடையே,
மார்ச் 1ம் தேதியான இன்று முதல் 3ம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்துப் பணிகள் தொடங்கின.
இது குறித்து மத்திய அரசு தரப்பில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்திருந்தது.
அதேபோல, எந்தநெந்த இணை நோய்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த பட்டியலையும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. 3ம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அதற்கான பல்வேறு வழிமுறைகளை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. அதன்படி,
தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ‘பான் கார்டு’ உள்ளிட்டவைகள் கொண்டு ‘CoWin’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.