இணைய வசதி இல்லாத மாணவர்களை தத்தெடுத்து வகுப்பு எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!
ஜார்கண்ட் மாநிலத்தில் ஸ்மார்போன் மற்றும் இணைய வசதி இல்லாத மாணவர்களை சிறு குழுவாக அமைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பெடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
வருவாய் இல்லாமல் தவிக்கும் குடும்பங்களாக இருந்தாலும் குழந்தைகள் நன்றாகப் படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்பதே பெற்றோர்களின் கனவாக இருக்கும். எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இதற்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.
பள்ளிக் கட்டணத்தை சமாளிப்பதே பெற்றோர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. இந்தச் சூழலில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் ஆன்லைனில் பாடங்கள் எடுத்து வருகின்றனர்.
இதனால் ஸ்மார்ட்போன் வைத்துள்ள பெற்றோர்களின் குழந்தைகள் மட்டுமே பாடங்களைப் படிக்கமுடியும் என்கிற நிலைமை உருவாகியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் 42 லட்சம் பள்ளி மாணவர்கள் உள்ளனர். இதில் வெறும் 33 சதவீத மாணவர்களால் மட்டுமே வாட்ஸ் அப் மூலம் வகுப்புகளில் பங்கேற்க முடிகிறது.
ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி இல்லாத ஏழை மாணவர்களும் மற்ற மாணவர்களைப் போன்றே படிக்கவேண்டும் என்பதற்காக இந்த அரசாங்கம் புதுமையான தீர்வு ஒன்றை உருவாக்கியுள்ளது.
இதன்படி ஸ்மார்ட்போன் அல்லது இணைய வசதி இல்லாத மாணவர்களை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தத்தெடுத்துக்கொள்வார்கள். ஒவ்வொரு வாரமும் அவர்களை சந்தித்து பாடங்களை எடுப்பார்கள்.
இணையம் வாயிலாகப் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக இந்த மாணவர்களும் நன்றாகப் படிக்கவேண்டும் என்பதற்காக தனிப்பட்ட வகையில் அக்கறை செலுத்தி இந்த ஆசிரியர்கள் வழிகாட்டுவார்கள்.
“ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் சிறு குழுவாக பிரிக்கப்பட்டு 'மொஹல்லா’ வகுப்புகள் எடுக்கப்படுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,” என்று அதிகாரி ஒருவர் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது,
“வாட்ஸ் அப்பில் படிக்கும் மாணவர்களின் திறனை ஆசிரியர்களால் மதிப்பிட முடிவதில்லை. ஆனால் இந்த முயற்சியின்கீழ் ஆசிரியர்களால் மாணவர்களின் முன்னேற்றத்தையும் கண்காணிக்க முடியும்,” என்றார்.
இங்கு தும்கா, ஜம்தாரா ஆகிய கிராமங்களில் இந்த கற்றல் முறை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
“துக்மாவில் மட்டுமே வெவ்வேறு பகுதிகளில் சிறு குழுக்களாக 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த மாணவர்கள் முறையாக சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றனர்,” என்றார் பந்கதி உக்ரமித் மத்ய வித்யாலயா பள்ளி முதல்வர் ஷாம் கிஷோர் காந்தி.
கட்டுரை: THINK CHANGE INDIA