‘பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு’ - நிறுவனர்கள் வருத்தம்; நடந்தது என்ன?
பெங்களூரில் செயல்பட்டு வரும் பிரபல உணவு விடுதியான ராமேஸ்வரம் கஃபேயில் மார்ச் 1ம் தேதி நடந்த வெடிகுண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு விடுதிக்குள் வெடிகுண்டு பையை விட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ளது பிரபல உணவகம் 'ராமேஸ்வரம் கஃபே'. இந்த உணவகத்தின் கிளையானது ப்ரூக்பீல்டு பகுதியில் அமைந்திருக்கிறது. செலிப்ரிட்டிகள் வந்து செல்லும் இந்த பிரபல கஃபேயானது எப்போதும் பிசியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
மார்ச்1ம் தேதி மதிய வேளையில் கஃபேயில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உள்பட 10 பேர் படுகாயமடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு ராமேஸ்வரம் கஃபேயின் உரிமையாளர்கள் திவ்யா மற்றும் ராகவேந்திர ராவ் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு தொடர்பாக கஃபே விடுத்துள்ள அறிக்கையில்,
“எங்களது ப்ரூக்பீல்டு கிளையில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. வெடிகுண்டு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். வெடிகுண்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு எங்களுடைய அனுதாபங்கள், மேலும் அவர்கள் விரைவில் பூரண குணமடைவதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று ராமேஸ்வரம் கஃபேயின் இணை-உரிமையாளரான திவ்யா ராகவேந்திர ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உரிமையாளர்கள் யார்?
ராமேஸ்வரம் கஃபேயின் உரிமையாளர் ராகவேந்திர ராவ், IDC கிச்சன் ப்ரமோட்டர், மெக்கானிக்கல் என்ஜினியரான இவர் உணவுத் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ராமேஸ்வரம் கஃபேயின் கிளைகளை நிறுவுவது தொடர்பான செயல்பாடுகளை இவர் கவனித்து வருகிறார். இதன் இணை நிறுவனரான திவ்யா, ராகவேந்திரராவின் மனைவி ஆவார். தேர்ச்சி பெற்ற பட்டய கணக்காளரான இவர் ஐஐஎம் அகமதாபாத்தில் பட்ட மேற்படிப்பு படித்துள்ளார்.
ராகவேந்திர ராவின் உணவு விடுதியில் கணக்காளராக பணியாற்றிய பின்னர், இருவரும் சேர்ந்து இந்தியாவில் உணவு சங்கிலி கடைகளை திறக்கும் திட்டத்துடன் ராமேஸ்வரம் கஃபேவை தொடங்கினர். தென்இந்திய ஸ்பெஷல் என்பதை பிரதிபலிக்கும் விதமாகவே இதற்கு ராமேஸ்வரம் கஃபே என்று பெயர் வைத்துள்ளனர். இந்த உணவு விடுதியின் நிர்வாகம் மற்றும் நிதித்துறையை திவ்யா கவனித்துக் கொள்கிறார்.
12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், பெங்களூருவில் உள்ள ஐசிஏஐ நிர்வாகக் கமிட்டியின் உறுப்பினர் ஆவர். குடும்ப கஷ்டங்களைக் கடந்து விடாமுயற்சியுடன் படித்து, சொந்தமாக தொழில்தொடங்கி அதனை மாதத்திற்கு 4.5 கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றிக்காட்டியவர்கள் இந்த தம்பதி.
போலீஸ் விசாரணை
கஃபேயில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக முதலில் கருதப்பட்டது. ஆனால், இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. வெள்ளிக்கிழமை மதியம் சரியாக 1 மணியளவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் குறித்து பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையின் போது, கஃபேயின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்துள்ளனர்.
மர்ம நபர் ஒருவர் கைகழுவும் இடம் அருகே பை ஒன்றை விட்டுச் செல்வது அதில் பதிவாகியுள்ளது. அது வெடிகுண்டு இருந்த பையாக இருக்கலாம், ரிமோட் மூலம் இயக்கப்பட்டு அது வெடிக்கச் செய்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
அந்த மர்ம நபர் குறித்த வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள மற்ற கடைகளின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்தச் செயலில் ஈடுபட்டவர் விரைவில் பிடிபடுவார். சக்திவாய்ந்த வெடிகுண்டாக இல்லாததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் நடக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
உள்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கை
கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர ராவ் இந்தச் சம்பவம் குறித்த கூடுதலான தகவல்களை தெரிவித்துள்ளார். அந்த மர்ம நபர் கர்நாடக பொதுப் பேருந்து மூலம் உணவு விடுதிக்கு வந்துள்ளார். சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். சிசிடிவில் சில ஆதாரங்கள் சிக்கியுள்ளன, குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு அரசுப் பேருந்து சென்றுள்ளது, அது தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றது. டைமர் வைக்கப்பட்டு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
28 முதல் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் காலை உணவு சாப்பிடுவதற்காக கஃபே வந்திருக்கிறார். ரவாஇட்லி ஆர்டர் செய்தவர், அதனைச் சாப்பிடாமல் பில்லை மட்டும் கட்டிவிட்டு சென்றிருக்கிறார். அவர் சென்ற ஒரு மணி நேரம் கழித்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது, டைமர் மூலம் வெடிகுண்டு செயல்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து முதலமைச்சர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவரது மேற்பார்வையின் கீழ் அதிகாரிகள் குற்றவாளியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிஏ, ஐஐஎம் பட்டதாரி - ஓட்டல் தொழிலில் மாதம் 4.50 கோடி ஈட்டும் ‘ராமேஸ்வரம் கஃபே’ திவ்யா!