அருட்பணியாளர், ஆராய்ச்சியாளர், ஆசிரியர்: பன்முகம் காட்டி உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தமிழர்!
தனது வாழ்நாள் முழுவதும் மனித சமூகத்துக்குத் தேவையான சத்துள்ள உணவுப் பொருள்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு இன்று உலக அளவில் சிறந்த விஞ்ஞானிகளில் ஓருவராகவும், இந்திய அளவில் 10வது இடத்துக்குள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த இஞ்ஞாசிமுத்து என்ற அருள்பணியாளர் இடம்பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தனது வாழ்நாள் முழுவதும் மனித சமூகத்துக்குத் தேவையான சத்துள்ள உணவுப் பொருள்கள், இயற்கை உரங்கள், மூலிகைச் செடிகள் போன்றவை குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு இன்று உலக அளவில் சிறந்த சித்த மருத்துவ விஞ்ஞானிகளில் ஓருவராகவும், இந்திய அளவில் 10வது இடத்துக்குள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் அருள்பணியாளர் இடம் பிடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் பெருமைபட வேண்டிய விஷயமாகும்.
தேனி மாவட்டம், சிந்தலச்சேரி பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் சேசு சபையைச் சேர்ந்த சவரிமுத்து இஞ்ஞாசிமுத்து. 72 வயதான போதிலும் இளைஞரைப் போல செயல்படுகிறார். காலை, மாலை வேளைகளில் திருப்பலி நிகழ்த்தி, இடைப்பட்ட நேரங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்விப் போதனை வழங்கி, தனது ஓய்வு நேரத்திலும் ஓயாமல் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலக அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஆய்வுகள் மற்றும் அந்த ஆய்வுகள் மற்ற ஆய்வாளர்களால் எந்தளவுக்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு ஓர் பட்டியலைத் தயார் செய்தது. இதில்,
1 லட்சத்து 30 பேரின் ஆய்வுகள் பரிசீலிக்கப்பட்டன. அதில், இஞ்ஞாசிமுத்து 832வது இடம் வகித்து உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். மேலும், இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் சிறந்த ஆய்வாளராக மிளிர்ந்து வருகிறார்.
அவரது ஆய்வுப் பணிகள் குறித்து நாம் அவரிடம் பேசியபோது, "நான் கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே ஆய்வுப்பணிகளில் மிகுந்த ஆர்வமாக இருந்தேன். நான் சார்ந்திருந்த சேசு சபையும் எனது பணிகளுக்கு மிகுந்த ஊக்கமளித்தது. எனது ஆய்வுகளை சுருக்கமாக 3 பிரிவுகளில் கொண்டு வரலாம்," என்றார்.
முதலாவதாக சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் சத்து மிகுந்த உணவு தானிய உற்பத்தியை குறைவான தண்ணீர் மற்றும் குறைவான உரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்வது குறித்து நிறைய ஆய்வுகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளோம்.
இரண்டாவதாக சித்த மருத்துவர்கள் அளிக்கும் மூலிகைகள் எந்தளவுக்கு அறிவியல் பூர்வமாக சிறப்பாக செயல்புரிகின்றன என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மூன்றாவதாக விவசாயிகளின் நலனுக்காக நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீங்கு செய்யும் பூச்சிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என தனது வாழ்நாள் ஆய்வுப் பணிகளை ரத்தினச் சுருக்கமாய் தெரிவித்தார்.
இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தாவரவியலில் வெள்ளிப் பதக்கமும், முதுகலை தாவரவியலில் தங்கப் பதக்கமும் பெற்றவர். மேலும் எம்.பில்., பி.எச்டி., போன்றவற்றை தில்லி பல்கலைக்கழகத்திலும், சென்னை பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் டாக்டர் ஆப் சயின்ஸை முடித்துள்ளார்.
மேலும், மிக அரிதாக அனைவரும் மேற்கொள்ளும் போஸ்ட் டாக்டர் ஆப் ரிசர்ச்சையும் முடித்துள்ள இவர், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் தனது ஆய்வுப் பணிகளுக்காக சென்று வந்துள்ளார்.
அவர் தனது ஆய்வு குறித்து தெரிவிக்கையில்,
“தற்போதுகூட கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு மூலிகைகளைக் கொண்டு ஓர் நோய் எதிர்ப்பு சக்தி பானத்தை தயாரித்து குடிநீராக அனைவருக்கும் வழங்கினோம். மேலும், நானே ஓர் இயற்கை சானிடைசரைத் தயாரித்து மக்களுக்கு வழங்கினேன். அதோடு, விவசாயிகளின் மகசூலைப் பெருக்க இயற்கை பூச்சிக் கொல்லி மருந்தை தயாரித்து, அதற்கு பொன்னீம் எனப் பெயரிட்டு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.”
இவ்வாறு விவசாயிகள் நலன் மற்றும் மக்களின் நலனை பேணிக் காக்கும் வகையில் எனது ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், என்னிடம் ஆய்வுப் பணிக்காக வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் இதுபோன்ற ஆய்வுகளில் ஈடுபட்டு மக்கள் நலன் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுமாறு ஊக்குவித்து வருகிறேன் என்கிறார் சவரிமுத்து.
இதுவரை 800-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளை எழுதி பல்வேறு கருத்தரங்குகளில் வெளியிட்டிருக்கிறார். ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரின் புத்தகங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பாடப் புத்தகமாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் பணிபுரிந்து வரும் இவர், திருநெல்வேலியைச் சுற்றியுள்ள மலைப் பகுதியிகளில் பூக்கும் புளோரா வகை பூக்களை வகைப்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், தாவரங்களில் உள்ள பயோ கெமிக்கலை தனியாகப் பிரித்து அதனை விவசாயம் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்தும், இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைச்சலை மேம்படுத்தும் ஆர்கானிக் விவசாயம் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
சேசு சபை சார்ந்த நிர்வாகப் பணிகள் மற்றும் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், ஆய்வுப் பணிகளில் முழுக் கவனம் செலுத்தி வருகிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய வெற்றி மட்டும் அல்ல. நான் சார்ந்திருக்கும் சேசு சபை, ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் போன்றோரையே இந்த வெற்றிகளும் பெருமைகளும் சேரும். எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் கருணையினால்தான் இவை எல்லாம் சாத்தியம் என தன்னடக்கமாக கூறுகிறார் இஞ்ஞாசிமுத்து.
இவரைப் போன்று தன்னலமின்றி கடினமாக உழைக்கும் பல்வேறு ஆய்வாளர்களின் முயற்சி மற்றும் கண்டுபிடிப்புகளால்தான் கொரோனா போன்ற பெருந்தொற்றில் இருந்து நாடு மீண்டு வருகிறது.
எதிர்காலத்தில் ஏற்படும் இன்னல்களுக்கும் இவர்களைப் போன்றோர் இரவு, பகல் பாராது பாடுபட்டு கண்டறியும் தீர்வுகளே உதவி புரியும். எனவே நாட்டின் நலனுக்காக பாடுபடும் இவர்களைப் போன்ற ஆய்வாளர்களை நாமும் போற்றுவோம்.