இந்தியாவில் ’ஸ்கை பஸ்’ சேவை வருமா? - A டு Z விளக்கம்!
தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள போக்குவரத்து சேவைகளில் இருந்து ‘ஸ்கை பஸ்’ எப்படி மாறுபடுகிறது?
இந்தியாவில் Sky Bus சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆர்வம்காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2000-த்தின தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்ட இந்த திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் அதற்கான சாத்தியங்களை அவர் கண்டறிய சொல்லி உள்ளதாகவும் தெரிகிறது.
'ஸ்கை பஸ் சேவை என்றால் என்ன'? தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள போக்குவரத்து சேவைகளில் இருந்து இது எப்படி மாறுபடுகிறது?
ஸ்கை பஸ் சேவை
பயணங்கள் மனித வாழ்வில் இன்றியமையாத அங்கம். கல்வி, வேலை, தொழில் என ஏதேனும் ஒரு தேடல் சார்ந்து வாழ்வினை மேம்படுத்திக் கொள்ள பயணம் உதவுகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரம் இன்று அதன் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட காரணமே மக்கள் பலர் மேற்கொண்ட பயணங்கள் தான். அது வாழ்வாதாரம் சார்ந்து அமைந்தது.
ஆதிகாலத்தில் உலகின் மூத்த குடிமக்கள் நடை வழியாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம் பெயர்ந்தனர். நாகரிகம் வளர்ச்சி கண்ட பிறகு சாலை, நீர், ரயில், ஆகாய மார்க்கமாக பயணம் சார்ந்த போக்குவரத்து சேவையும் மேம்பட்டது. பெருநகரங்களில் மக்கள் எளிதாகவும், துரிதமாகவும் பயணம் மேற்கொள்ள மெட்ரோ ரயில் சேவை உதவுகிறது.
உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் முன்னணியில் உள்ள நம் நாட்டில் பொது போக்குவரத்து சேவைகள் மிகவும் முக்கியமானது. இருந்தாலும் மெட்ரோ போன்ற சேவைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதில் மிகப்பெரிய பொருட்செலவு அடங்கியுள்ளது. தவிர அதற்கு நேரமும், காலமும் எடுக்கும். இத்தகைய சூழலில் தான் ஸ்கை பஸ் குறித்த ஐடியா பிட்ச் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கை பஸ்: மலிவான பொருட்செலவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த நகர்ப்புற பொது போக்குவரத்து அமைப்பு என ஸ்கை பஸ் குறித்த விளக்கங்கள் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட மெட்ரோவை போலவே இது இருக்கும். உயரமான இடத்தில் இதன் இருப்பு பாதை அமைந்திருக்கும். எலிவேட்டட் கேபிள் துணை கொண்டு இயங்குகிறது. பார்க்க பேருந்து வானில் பறப்பது போலவே உள்ளது. எளிதாக சொல்வது என்றால் அந்தரத்தில் பறக்கும் வகை.
உலக அளவில் இது மாதிரியான போக்குவரத்து அமைப்புகள் இயக்கத்தில் உள்ளன. ஜெர்மனியில் H-BAHN (தொங்கு ரயில்வே) என்ற பெயரில் இந்த வகையான போக்குவரத்து அமைப்பு உள்ளது. அங்கு ஓட்டுநர் இல்லாமல் இந்த அமைப்பு இயங்குவதாக தெரிகிறது.
இந்தியாவில் ஸ்கை பஸ் பயன்பாட்டுக்கு வந்தால் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லும் என சொல்லப்படுகிறது. மின்சார சக்தியின் மூலம் இயங்கும். இந்த வகை போக்குவரத்து தடம்புரள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. மெட்ரோவுடன் ஒப்பிடும்போது இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான செலவு குறைவு. அதன் காரணமாக இதனை இயக்குவதற்கான செலவும் குறைகிறது.
ஸ்கை பஸ் + இந்தியா: இந்தியாவில் ஸ்கை பஸ் போக்குவரத்து அமைப்பு சேலையை கொண்டு வர வேண்டுமென விரும்பியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். கடந்த 2003ல் அதற்கான திட்டத்தை அவரது அரசு அறிவித்தது. கோவாவில் ஸ்கை பஸ் சேவையை கொண்டு வரும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில், முதற்கட்டமாக Mapusa - Panaji பகுதியை இணைக்கும் வகையில் முயற்சி செய்யப்பட்டது.
சுமார் 10.5 கி.மீ தூரம் வரையில் இதற்கான வசதியை ஏற்படுத்த அப்போது திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அது சார்ந்து வெள்ளோட்டம் (டெஸ்ட் ரன்) மேற்கொண்டதாகவும் தகவல். இருந்தாலும் 2013-ல் Konkan ரயில்வே கார்ப்பரேஷன் இதனை கைவிட்டது. இந்த திட்டம் சாத்தியமாகாமல் போனதற்கு காரணம் பொருளாதார சிக்கல் இருப்பதாக தெரிகிறது.
நகர பகுதியில் நிலவும் போக்குவரத்து சார்ந்த சிக்கலுக்கு ஸ்கை பஸ் தீர்வாக அமைகிறது. இருந்தாலும் இதனை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதில் சவால்கள் மற்றும் எதார்த்த தடைகள் உள்ளன. அதனை களைய வேண்டும். இத்தகைய சூழலில் தான் அமைச்சர் நிதின் கட்கரி இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆர்வம் காட்டி வருவதாக தகவல். டெல்லி - குருகிராம் இடையே ஸ்கை பஸ் போக்குவரத்து அமைப்பை நிறுவுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக தகவல்.
Romance Scam | அன்புக்கு பணம் வேண்டாம் மனம் போதும்; அதனால் ஈசியா ஏமாந்துடாதீங்க!
Edited by Induja Raghunathan