இன்னும் 2 ஆண்டுகளில் தலைக்கு மேல் குட்டி விமானங்கள் பறக்கும்: ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட்-அப் புதிய முயற்சி!
சென்னையைச் சேர்ந்த இபிளேன் நிறுவனம், பேட்டரி மூலம் செயல்படும் விமானங்களை தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் உள்ளது. இந்த விமானத்தில் இருவர் பயணிக்க முடியும். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 200 கிலோமீட்டர் செல்ல முடியும்.
தற்போது வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முக்கியமானது எலெக்ட்ரிக் வாகனங்கள். அந்தப் பிரிவில் பல புதுப்புது நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. தவிர இந்தத் துறையில் பல வென்ச்சர் கேபிடல் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களும் முதலீடு செய்துவருகின்றன.
அதே சமயத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை பெரிதாக உயராது. எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை அதிகமானவை, பேட்டரி உள்ளிட்ட சில சாதனங்களுக்கு இறக்குமதியை நம்பி இருக்கிறோம். தவிர இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைவு என்னும் கருத்துகளும் இருக்கிறது.
இந்த நிலையில், சிறிய ரக எலெக்ட்ரிக் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனம் இறங்கியுள்ளது. ஐஐடி பேராசிரியர் சத்யா சக்ரவர்த்தி மற்றும் அவரது மாணவர் பிரஞ்சல் மேத்தா இணைந்து ePlane எனும் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்.
இரு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனம் 5 மில்லியன் டாலர் நிதியையும் திரட்டியது. 3ஒன்4 கேபிடல், அனிகட் கேபிடல், இன்ஃபோஎட்ஜ், தாட் வென்ச்சர்ஸ், ஜாவா கேபிடல், பர்ஸ்ட் செக் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.
சமீபத்தில் ‘இபிளேன்’ நிறுவனர்களில் ஒருவரான பேராசிரியர் சத்யா சக்ரவர்த்தியுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஐடியா எப்படி உருவானது. எப்படி செயல்படும், இதற்கான வாய்ப்புகள் என்ன என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினேன்.
ஆரம்பகாலம்
சென்னையைச் சேர்ந்தவர் சத்யா சக்ரவர்த்தி. ஐஐடி மெட்ராசில் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் முடித்தார். அதனைத் தொடர்ந்து ஜார்ஜியா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் ஏரோஸ்பேஸ் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு இந்தியா வந்தவர் ஐஐடி சென்னையிலே பேராசிரியராக இணைந்தார்.
ஐஐடியில் பல முக்கியமான வகுப்புகளை எடுத்துவருகிறேன். ஐஐடி வளாகத்தில் National Centre for Combustion Research & Development என்னும் மையத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்கு இருக்கிறது. Combustion இன்ஜின்கள் மூன்று இடத்தில் பயன்படும். மின்சாரம் தயாரிப்பது. ஆட்டோமொபைல் துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை என இந்த மூன்று துறைகளில் இந்த வகை இன்ஜின்களுக்கு தேவைகள் உள்ளன. இதில் ஆராய்ச்சி செய்வதுதான் இந்த மையத்தின் முக்கியப் பணி. 2009ம் ஆண்டு இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளில் முடிவடைந்தது.
இந்த சூழலில் 2016ம் ஆண்டு Tony Seba என்னும் தொழில்முனைவோர் மற்றும் சிந்தனையாளரின் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்த உலகம் இன்னோவேஷன் காரணமாக ஒவ்வொரு 13 ஆண்டுகளில் எப்படி மாறி வருகிறது என்பதை குறித்து பேசி இருக்கிறார்.
1900-களில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் குதிரை வண்டிகள் மட்டும் இருந்தது. ஒரே ஒரு கார் மட்டுமே இருந்தது. ஆனால், 1913-ம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஒரு குதிரை வண்டி மட்டுமே இருக்கிறது. மீதி அனைத்தும் கார்கள்தான். இதேபோல செல்போன்களும் 13 ஆண்டுகளில் வேகமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
இதுபோல ஒவ்வொரு பெரிய மாற்றமும் சிறியதாகத் தொடங்கும். ஆனால் இறுதியில் மாற்றம் மிக வேகமாக நடக்கும். சுமார் 2030-ம் ஆண்டில் பெரும்பாலானவை எலெக்ட்ரிக் மயமாகும் என அவர் பேசி இருந்தார். இதுதவிர பல விஷயங்கள் பேசி இருந்தாலும் எலெக்ட்ரிக் குறித்து அவர் கூறியது குறித்து எனக்கு தூக்கம் வரவில்லை. காரணம் நாங்கள் Combustion இன்ஜின்களுக்கான ஆராய்ச்சியை செய்துவருகிறோம். ஆனால் அதற்குத் தேவையே இருக்காது என்பதுதான் டோனிசேபாவின் பேச்சின் சாரம்சம்.
ஏற்கெனவே கார்களில் எலெக்ட்ரிக் வந்துவிட்டது. வழக்கமான மின்நிலையங்களில் இருந்து சோலார், காற்றாலை என மாறிவிட்டது. இன்னும் மாறாமல் இருப்பது விமான இன்ஜின்கள்தான்.
”பேட்டரியில் செயல்படும் இன்ஜின்களை நாம் கண்டுபிடிக்காவிட்டால் வேறு யாராவது கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் பேட்டரி மூலம் இயங்கும் விமானங்களை தயாரிக்கத் திட்டமிட்டோம். ஐஐடியில் படித்த பிராஞ்சல் மேத்தா இந்த திட்டத்தில் ஆர்வமாக இருப்பதால் அவரையும் சேர்த்துக் கொண்டேன்,” என்றார் சத்யா.
ஏன் இ-டாக்ஸி?
ஒரு பொருளை கண்டுபிடிக்கும்போது அதன் தற்போதைய பயனை புதிதாகக் கண்டுபிடிக்கும் பொருளால் கொடுக்கவே முடியாது. உதாரணத்துக்கு தற்போது செயல்படும் விமானத்துக்கு ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 1,000 கிலோமீட்டருக்கு மேல் செல்லும். இதைவிட அதிகமாக செல்லும் விமானங்களும் இருக்கின்றன.
ஆனால், இதே அளவுக்கு தூரத்தை கடக்கக் கூடிய விமானத்தை கண்டறிய திட்டமிட்டால் காலம் அதிகமாகும். இதை நோக்கி செயல்பட்டால் நம்மால் விமானத்தைத் தயாரிக்கவே முடியாது. இதனை innovator's dilemma என்று சொல்லுவார்கள். பழைய விஷயத்தை புதிய விஷயத்துடன் இணைத்துக்கொடுக்கப் பார்ப்போம். அது முடியாது.
”அதனால் தற்போதைய திறனில் 200 கிலோமீட்டர் வரை மட்டுமே எலெக்ட்ரிக் விமானங்கள் செல்லும். இந்தத் திறனில் இந்த விமானங்களை வர்த்தக ரீதியில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் பட்சத்தில்தான் அடுத்தகட்ட ஆராய்ச்சி செய்ய முடியும். இதனை வர்த்தக ரீதியில் கொண்டுவர வேண்டும் என்றால் டாக்ஸி மாடலில் செய்ல்பட வேண்டும். இதில் வெற்றியடைந்தால்தான் படிப்படியாக அடுத்தக்கட்டத்துக்கு செல்ல முடியும்,” என சத்யா சக்ரவர்த்தி கூறினார்.
சேவை எப்படி இருக்கும்?
200 கிலோமீட்டர் என்றால் சென்னையில் இருந்து புதுச்சேரி, வேலூர், திருப்பதி என அருகில் இருக்கும் நகரங்களுக்கு அல்லது நகரின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல முடியும். இந்த விமானங்களை வாடிக்கையாளர்கள் இயக்க முடியாது. பயிற்சி பெற்ற எங்களுடைய விமானிகள் மட்டுமே இயக்க முடியும்.
இருவர் மட்டுமே இப்போதைக்கு இதில் செல்லலாம். அதேபோல சரக்கு போக்குவரத்துக்கு ஏற்ற விமானங்களையும் தயாரிக்க இருக்கிறோம். தற்போது இ-காமர்ஸ் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனால் அந்த நிறுவனங்களுக்கு நகரின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சில நிமிடங்களில் எங்கள் விமானத்தில் பொருட்களைக் கொண்டு செல்ல முடியும்.
2023-ம் ஆண்டு சரக்குப் போக்குவரத்துக்கான விமானம் தயாராகும். அதேபோல, 2024ம் ஆண்டு பயணிகள் போக்குவரத்துக்கான இ-விமானம் தயாராகும். இது விமானம் என்றாலும் ஹெலிகாப்டர் போல இருந்த இடத்தில் இருந்தே மேலே செல்லும். இதற்கு ரன்வே தேவையில்லை. மொட்டை மாடியில் கூட இறக்க முடியும்.
தரையில் இருந்து 400 அடிக்கு மேல் செல்வதற்கு அனுமதி (air traffic controller) தேவை. எங்களது விமானம் 1,500 அடிக்கு மேல் செல்லும். அதனால் முறையான அனுமதி இல்லாமல் பறக்க முடியாது. இருவர் மட்டுமே பயணிக்கும் இந்த விமானத்தை 1.5 கோடி ரூபாயில் தயாரிக்க முடியும். ஆரம்பத்தில் 10 விமானங்கள் வரை தயாரிக்க இருக்கிறோம். இது வர்த்தகரீதியில் வெற்றி அடைந்த பிறகு அடுத்தகட்ட விரிவாக்கம் குறித்து யோசிக்க வேண்டும்.
இபிளேனில் ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 200 கிலோமிட்டர் செல்ல முடியும். இந்த அளவில்தான் பேட்டரி இருக்கும். இதைவிட அதிகத் திறன் கொண்ட பேட்டரி இருக்கும் பட்சத்தில் விமானத்தின் எடை கூடிவிடும். அதனால் இந்த நிலையிலே வர்த்தக செயல்பாட்டினை கொண்டுவர இருக்கிறோம்.
விமானம் என்றவுடன் கட்டணம் அதிகமாக இருக்கும் என கருதத்தேவையில்லை. ஓலா, உபெரை விட இரு மடங்கு என்னும் அளவில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய இருக்கிறோம். ஆனால் 10 மடங்கு அளவுக்கு நேரம் மீதமாகும் என சத்யா சக்ரவர்த்தி கூறினார்.
இன்னும் சில ஆண்டுகளில் குட்டி குட்டி விமானங்கள் நம் தலைக்கு மேலே செல்லக்கூடும்.
பேராசிரியர் சத்யா சக்ரவர்த்தி இ-பிளேன் தவிர வேறு சில நிறுவனங்களையும் உருவாக்கி வருகிறார். சென்னையில் செயல்படும் முக்கியமான ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் நிறுவனத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். மேலும் கேலக்ஸ்ஐ (GalaxEye) Aerostrovilos எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனரும் கூட.