4 ஆண்டில் 10 கோடி டர்ன்ஓவர்: ஃபேஸ்புக்கில் தொடங்கி இன்று சக்கை போடு போடும் அம்மா-மகள் ஆடை பிராண்ட்!
மும்பையைச் சேர்ந்த The Indian Ethnic Co 1000 கைவினஞர்களுடன் இணைந்து பணியாற்றி 10 கோடி ரூபாய் வருவாயை எட்டியுள்ளது.
ஹேதல் மும்பையைச் சேர்ந்தவர். இவருக்கு 58 வயதாகிறது. 29 வயதான இவரது மகளின் பெயர் லெகினி தேசாய். 2016-ம் ஆண்டில் இவர்கள் இருவரும் கைத்தறி கண்காட்சி ஒன்றிற்கு சென்றார்கள்.
அந்தத் தருணத்தில் இவர்களுக்கு வணிக யோசனை பிறந்தது. 50 மீட்டர் அஜ்ரக் பிரிண்ட் செய்யப்பட்ட துணியை வாங்கி வந்து உடனே முயற்சியைத் தொடங்கினார்கள். டிசைன் உருவாக்கி அருகில் இருந்த டெய்லர் ஒருவர் உதவியுடன் வெவ்வேறு அளவுகளில் குர்த்தி தைத்துள்ளார்கள். லெகினி அந்த ஆடைகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். பலர் விரும்பி வாங்கியுள்ளனர்.
இப்படித்தான் தொடங்கியுள்ளது The Indian Ethnic Co பிராண்ட். இன்று இவர்களுக்கு சொந்தமாக மூன்று அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் டெலிவர் செய்கிறார்கள். 1000-க்கும் மேற்பட்ட கைவினைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.
இந்த பிராண்ட் 4 ஆண்டுகளில் 10 கோடி ரூபாய் டர்ன்ஓவரை எட்டியுள்ளது. ஒரு மாதத்தில் 3000 ஆர்டர்கள் பிராசஸ் செய்கிறார்கள்.
படிப்பும் வணிகப் பயணமும்
The Indian Ethnic Co இணைநிறுவனர் மற்றும் மார்க்கெட்டிங் தலைவர் லெகினி தனது அம்மாவிற்கு கைத்தறி மீது அதிக ஈடுபாடு இருப்பதாக எஸ்எம்பிஸ்டோரி-யிடம் தெரிவித்தார்.
“என் அம்மாவிற்கு துணிகள், டிசைன்கள் போன்றவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தது. அவரது திறமையை வெளியில் கொண்டு வரும் வகையில் வணிக முயற்சியைத் தொடங்க எண்ணி 50,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கினோம்,” என்கிறார் லெகினி.
2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை இந்நிறுவனம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டுமே விற்பனை செய்து வந்தது. அந்த காலகட்டத்தில் லெகினி எம்பிஏ படித்துக்கொண்டிருந்தார். படித்துக்கொண்டே ஆர்டர்களை நிர்வகிப்பது, தயாரிப்புகளை அனுப்புவது, சமூக வலைதளங்களில் மார்க்கெட்டிங் செய்வது போன்ற கூடுதல் பொறுப்புகளையும் ஏற்றார்.
எம்பிஏ முடித்த பிறகு ஐடிசி கொல்கத்தாவில் வேலை கிடைத்தது. வேலையா குடும்ப வணிகமா என்று தீர்மானிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வணிக முயற்சியை நிறுத்திக்கொள்வது கடினமான முடிவுதான். ஆனால் அதைவிட அம்மா மொத்த பொறுப்புகளையும் தனியாக ஏற்கவேண்டும் என்பதை நினைத்துப்பார்க்கும்போது மேலும் கவலையளித்தது.
வேலையில் சேர இரண்டு முதல் மூன்று மாதம் வரை அவகாசம் இருந்தது. அதற்குள் அம்மாவைத் தயார்படுத்த நினைத்தார். அதற்கான ஏற்பாடுகளையும் பரபரப்பாக செய்து முடித்தார்.
”சமூக வலைதளங்கள் மூலமாகவே எங்கள் வணிகம் தொடங்கியது. இருந்தாலும் என் அம்மாவால் கையாள முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. எனவே முதலில் சொந்தமாக வலைதளத்தைத் தொடங்கினோம்,” என்கிறார்.
கனடாவைச் சேர்ந்த Shopify உதவியுடன் வலைதளம் உருவாக்கினார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் முக்கியம் என்பதால் லெகினி டிஜிட்டல் ரீதியாக விளம்பரம் செய்ய தாமாகவே கற்றுக்கொண்டார்.
வலைதளம் உருவாக்கிய பிறகு லெகினியின் அம்மா கம்ப்யூட்டர் மற்றும் இணையத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார்.
2019-ம் ஆண்டு வலைதளம் தொடங்கிய ஓராண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 1 கோடி ரூபாயை எட்டியுள்ளது. அதற்கு முன்பு 2017-ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட 24 லட்ச ரூபாய் என்கிற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
லெகினி வேலையில் சேர்ந்தபோதும் தங்கள் பிராண்டின் அபார வளர்ச்சியைக் கண்டு இதில் முழுநேரமாக செயல்பட வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
பெருந்தொற்று காலத்தில் மும்மடங்கு வளர்ச்சி
பெருந்தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஆரம்பத்தில் ஆர்டர்கள் குறைந்தது. ரீடெயில் பிராண்டுகளுக்கான லாஜிஸ்டிக்ஸ் வசதிக்கு அனுமதி கிடைக்கும் வரை டெலிவரி செய்யமுடியாது என்கிற தகவலை வாடிக்கையாளர்களிடம் முன்னரே தெளிவாக சொல்லிவிட்டார்கள்.
“மார்ச் மாதம் 915 என்கிற எண்ணிக்கையில் இருந்த ஆர்டர் அளவு ஏப்ரல் மாதம் 589 ஆகவும் மே மாதம் 408 ஆகவும் குறைந்தது. ஜூன் மாதம் முதல் 1,000-க்கும் அதிகமான ஆர்டர்கள் வரத் தொடங்கின,” என்கிறார்.
மக்கள் வெளியில் செல்லாமல் மின்வணிகம் மூலமாகவே பொருட்களை வாங்கிய நிலையில் விற்பனை மும்மடங்காக அதிகரித்தது என்கிறார் லெகினி.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட சூழலில் வீட்டில் இருந்தே பணிகள் நடைபெற்றன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு 2020 அக்டோபர் மாதம் மும்பையில் மூன்று அலுவலகங்கள் திறக்கப்பட்டன. வணிக செயல்பாடுகளை நிர்வகிக்க 10 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.’
கைவினைஞர்கள்
இவர்களுக்கு ஆரம்பத்தில் தைத்துக் கொடுத்த டெய்லர் தற்போது முழுநேரமாக இவர்களுடன் இணைந்து டிசைனர் டெய்லர்கள் அடங்கிய குழுவை நிர்வகிக்கிறார். மேலும் 10 மாஸ்டர் டெய்லர்கள் இந்நிறுவனத்திற்காக பணியாற்றுகிறார்கள்.
இந்தத் தொழில்முனைவர் பிரபல அஜ்ரக் கைவினைஞர் அப்துல் ஜப்பரிடமிருந்து முதல் முதலாக துணி வாங்கினார்கள். ஹேதல் ஒரு வணிக வாய்ப்பிற்காக அவருடன் இணைந்து பணியாற்றினார். மெல்ல மற்ற கைவினைஞர்களுடன் நெட்வொர்க் உருவானது.
வணிக உரிமையாளர்களையும் கைவினைஞர்களையும் இணைக்கும் The Craft Channel என்கிற வாட்ஸ் அப் குழுவில் தற்போது உறுப்பினர்களாக இருப்பதாக லெகினி தெரிவிக்கிறார்.
அஜ்ரக், பாந்தினி, பாக், பட்ரூ, பலோட்ரா, தாபு, சங்கனேரி போன்றவற்றை இந்நிறுவனம் கையாள்கிறது. சல்வார், குர்த்தி போன்ற ஆடை வகைகள் மட்டுமல்லாது புடவை, துப்பட்டா, மேற்கத்திய மற்றும் இந்திய ட்யூனிக்ஸ், சில்வர் ஜுவல்லரி போன்ற தயாரிப்புகளையும் இந்நிறுவனம் விற்பனை செய்கிறது.
மார்க்கெட்டிங் உத்தி
எத்னிக் இந்திய பிரிண்ட்களை முன்னிலைப்படுத்தி தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு வழங்கவேண்டும். இவை சாதாரண பெண்களையும் சென்றடையவேண்டும். இதுவே அம்மா-மகள் இருவரின் விருப்பம். எனவே இவர்களது தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதில் பிரபல பெண்கள் இடம்பெறுவதில்லை. சாதாரண பெண்கள் இவற்றை அணிந்துகொண்ட புகைப்படங்களையே வெளியிடுகிறார்கள்.
சமூக வலைதளங்களில் ’டான்ஸ் ஸ்ட்ராடெஜி’ என்பதை நாங்களே முன்னோடியாக செயல்படுத்தினோம் என்கிறார் லெகினி.
“எங்களது டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது. எங்கள் ஆன்லைன் விற்பனை அதிகரிக்க உதவியது,” என்கிறார்.
வருங்கால திட்டம் குறித்து அவர் கூறும்போது,
“கைவினைஞர்கள் மற்றும் அவர்களது கைவினைக் கலைப் பற்றிய தகவல்கள் அடங்கிய என்சைக்ளோபீடியா உருவாக்கவேண்டும் என்பது என் அம்மாவின் விருப்பம். இதில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கக்கூடிய அனைத்து வகையான துணிகள் பற்றிய தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறார்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா