2019ல் ஒரே ஒரு கார் விற்பனை ஆன டாடா நானோ மாடல்!
’மக்களின் கார்’ என்று ரத்தன் டாடா அழைக்கும் நானோ கார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரே ஒரு யூனிட் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.
”மக்களின் கார்” என்று ரத்தன் டாடா அழைக்கும் நானோ கார் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலையில் 2019ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொடக்க நிலை நானோ கார் ஒரே ஒரு யூனிட் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. எனினும் பிப்ரவரி மாதத்தில் ஒரே ஒரு யூனிட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நானோ கார்களைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 82 கார்கள் உற்பத்தி செய்துள்ளது. 88 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நானோ கார்களின் உற்பத்தியோ விற்பனையோ ஏதும் இல்லை என்று அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் தெரிவித்துள்ளது.
அதேபோல் 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 66 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 77 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நானோ கார் உற்பத்தியோ விற்பனையோ ஏதும் இல்லை.
2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 71 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு 54 கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நானோ கார் உற்பத்தியோ விற்பனையோ ஏதும் இல்லை.
கடந்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் விற்பனை செய்யப்பட்ட ஒரே ஒரு கார் தவிர வேறு விற்பனை ஏதும் இல்லை என அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.
வருங்காலத்தில் நானோ கார் செயல்பாடுகள் பற்றிய தீர்மானம் ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது. தேவை, இருப்பு, திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே திட்டமிடப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நானோ கார் மாடல் புதிய பி.எஸ்.VI வாகன மாசுக் கட்டுப்பாடு விதிகளுக்கு உட்படாது என அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் நானோ காரை அறிமுகப்படுத்தியது. அப்போது டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா நானோ மாடலை ’மக்களின் கார்’ என்று குறிப்பிட்டார். எனினும் இத்தனை ஆண்டுகளில் இதன் விற்பனை சிறப்பாக இல்லை.
சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் முழுமையாக ஆய்வு செய்த பிறகே நானோ கார் உற்பத்தி நிறுத்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தகைய தீர்மானங்கள் எடுக்கப்படும்போது அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பி.எஸ்.VI வாகன மாசுக் கட்டுப்பாடு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாலும் மற்ற பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டும் இந்த மாடலில் கூடுதலாக முதலீடு செய்ய திட்டமிடப்படவில்லை. எனவே நானோ கார் உற்பத்தி மற்றும் விற்பனை ஏப்ரல் மாதம் 2020 முதல் நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக இந்நிறுவனத்தின் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
நானோ தொடக்க நிலை மாடலில் விலை ஏற்றம் இருப்பினும் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி ஒரு லட்ச ரூபாய் ஆரம்ப விலையில் நானோ கார் 2009-ம் ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும் ஆரம்பத்தில் இருந்தே நானோ கார் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. ஆரம்பத்தில் இந்தக் கார் உற்பத்திக்கான தொழிற்சாலையை மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அரசியல் ரீதியிலும் எதிர்ப்பு எழுந்தது. எனவே குஜராத்தின் சனந்த் பகுதிக்கு தொழிற்சாலை மாற்றப்பட்டது.
அதேபோல் இந்தக் காரில் திடீரென்று தீப்பற்றிக் கொள்வதாகவும் புகார்கள் எழுந்தன. ’மலிவு விலை கார்’ என நானோ காரை விளம்பரப்படுத்தியது தவறு என்றும் அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்தக் கார் மாடல் நஷ்டத்தை ஏற்படுத்தியது. 1,000 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்தது. டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் மிஸ்ட்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
நானோ காரில் லாபம் ஈட்ட வாய்ப்பில்லை என்றும் உணர்வு ரீதியான காரணங்களுக்காக உற்பத்தி நிறுத்தப்படாமல் தொடர்வதாகவும் மிஸ்ட்ரி கருத்து தெரிவித்தார்.
ஆதாரம்: பிடிஐ