[Tech30] பயிர்களில் களை எடுக்கும் ரோபோ: விவசாயிகளுக்கு உதவும் நிறுவனம்!
யுவர்ஸ்டோரியின் டெக் 20 பட்டியலில் இடம்பெற்றுள்ள விவசாய ஸ்டார்ட் அப்பான டார்டான்சென்ஸ், களைகளை கண்டறிந்து, பூச்சிக்கொல்லி தெளிக்கும் வேளாண் ரோபோவை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக அமைவது களைகள் தான். தேவையில்லாத களைகள்; பயிர்களின் தரம் மற்றும் விளைச்சலை பாதிக்கிறது. களை உயிரியலுக்கான சர்வதேச சஞ்சிகையில் வெளியான ஓரு ஆய்வு, களைகளால் 32 சதவீத பயிர் இழப்பு ஏற்படுவதாகவும், பூச்சிகள் மற்றும் நுண்ணியிர்களால் ஏற்படும் பாதிப்பை விட இது அதிகம் என்றும் தெரிவிக்கிறது.
எனவே தான் விவசாயிகள், களைகளை அகற்றுவதில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். விவசாயிகளின் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமான பெங்களூருவின் TartanSense என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2015ல் ஜெய்சிமா ராவால் துவங்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப், வயல்களில் செயல்பட்டு, களைகளை கண்டறிந்து பூச்சிக்கொல்லி தெளிக்கும் விவசாய ரோபோவை உருவாக்கியுள்ளது.
இதற்கு முன்னர் ஜெய்சிமா, சர்வதேச முதலீடு நிர்வாக நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதன் பிறகு இந்தியா திரும்பியவர், காபி தோட்டத்தை கவனிக்கத் துவங்கினார். அப்போது தான் விவசாய செயல்பாடுகள் தரவுகள் சார்ந்தவையாக இல்லாமல் இருப்பதை கவனித்தார். எனவே, இதற்கான நிறுவனமாக TartanSense துவக்கினார்.
முதலில் சென்சார்கள் மற்றும் டிரோன்கள் மூலம் விவசாயத் தகவல்களை சேகரிப்பதில் கவனம் செலுத்தி வந்தாலும், பின்னர் ஆலோசனைகள் மற்றும் ரோபோ உருவாக்கத்தில் ஈடுபடத்துவங்கியது.
“களைகளை அகற்றுவது விவசாயிகளுக்கு பெரிய வேலையாகும். அதிக செலவும் ஆகும். களையெடுப்பதில் விவசாயிகளுக்கு உதவக்கூடிய, அதே நேரத்தில் பயிர்களை பாதிக்காத ஒன்றை உருவாக்க விரும்பினோம்,” என்கிறார் ஜெய்சிமா.
தொழில்நுட்பப் பயன்பாடு
நிறுவனம், பிரிஜ்பாட் எனும் ரோபோவை உருவாக்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இந்த ரோபோ, வயல்களில் ஊர்ந்து, கம்ப்யூட்டர் காமிரா வழியே சோதனை செய்து, களைகளைக் கண்டறிந்து பூச்சிக்கொல்லி தெளிக்கிறது. விவசாயிகள் தலையீடு இல்லாமல் இந்த இயந்திரம் களையெடுக்கிறது.
மேலும், மண் வளம் தொடர்பான தகவல்களையும் சேகரிக்கிறது.
“கண்டறியப்பட்ட களைகள் மீது மட்டுமே பிரிஜ்பாட் பூச்சிக்கொல்லி தெளிக்கிறது. 3 செமீ அளவு இது துல்லியமாக இருக்கிறது. இதனால் ரசாயன பயன்பாடு 70 சதவீதம் வரை குறைவதோடு, பயிர்களும் பாதிக்கப் படுவதில்லை. மோசமான வானிலையில் கூட இந்திய வயல்களில் நீண்ட நேரம் செயல்படும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்கிறார் ஜெய்சிமா.
களையெடுப்பதற்கு மூன்று முதல் ஐந்து தொழிலாளர்கள் வரை தேவைப்படலாம். ஆனால், பிரிஜ்பாட், மனித தலையீடு தேவையில்லாமல் எட்டு மணி நேரம் செயல்படக்கூடியதாக இருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
“இந்த ரோபோ ஒரு ஏக்கரில் களையெடுக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. மாற்று வழிகளில் ஒரு நாளுக்கு மேல் ஆகலாம். மேலும், விவசாயிகளுக்கு எந்த நிதி இடரும் இல்லாமல் வழக்கமான செலவில் களையெடுப்பு சேவை வழங்கப்படுகிறது,” என்கிறார் ஜெய்சிமா.
நேரடி விற்பனையை நாடாமல், இந்த வசதியை ஒரு சேவையாக அளிக்கிறது இந்நிறுவனம். விவசாயிகள் இந்த சேவையை பயன்படுத்த விரும்பினால், இந்த இயந்திரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏக்கருக்கு ரூ.1,500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரோபோவை வாங்கி பராமரிக்க பத்து லட்சம் ஆகும்.
சவால்கள்
இந்த ரோபோ மூலம் விவசாயிகள், பூச்சிக்கொல்லிகள், உரங்களை திறம்பட பயன்படுத்தலாம். ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் காட்சி விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகள் முயற்சிக்குப்பிறகு உற்பத்தி வசதி தொடர்பான சவால்கள் எதிர்கொள்ளப்பட்டன. மேலும் சில பாகங்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. சுயநிதியில் துவக்கப்பட்டாலும், 2019ல் நிறுவனம் வென்சர் மூலதனம் திரட்டியது.
இந்த நிதிச் சுற்றில், Omnivore, Blume Ventures, and BEENEXT உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. எலன் மஸ்க், ஜெப் பெசோஸ், ஜக்கர்பர்க் ஆதரவு பெற்ற சிலிக்கான் வேலியின் Vicarious AI நிறுவனமும் இதில் பங்கேற்றுள்ளது.
எதிர்காலத்தில், விதைப்பது மற்றும் அறுவடைக்கான ரோபோவை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்யவும் விரும்புகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷினி பாலாஜி | தமிழில்:சைபர்சிம்மன்