[TechSparks 2020] 1,000 ஜோஹோ நாயகர்கள், 1,000 புதிய ஸ்டார்ட் அப்’கள்: ஸ்டார்ட் அப் சூழல் பற்றி ஸ்ரீதர் வேம்பு!
இந்தியாவில் மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க கூடிய 1,000 ஸ்டார்ட் அப்களை உருவாக்கும் திறன் கொண்ட 1,000 நாயகர்களால் ஜோஹோ நிறுவனம் உருவானதாக அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷர்த்தா சர்மாவிடன் கூறுகிறார்.
ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமம் தேவை என்கிறது ஒரு ஆப்பிரிக்க பழமொழி. ஸ்டார்ட் அப்'களுக்கும் இது பொருந்தும்.
யாராலும் தனியே எதையும் செய்ய முடியாது. மென்பொருளை சேவையாக வழங்கும் பிரிவில் முன்னணியில் விளங்கும் சென்னையைச் சேர்ந்த ஜோஹோ நிறுவன நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இதை முழு மனதாக ஒப்புக்கொள்கிறார்.
ஜோஹோ தன்னால் மட்டும் உருவாக்கப்படவில்லை என்று கூறுபவர், சுயநிதியில் வளர்ந்த ஜோஹோவை இன்று இருக்கும் நிலைக்கு, 1,000 நாயகர்கள் வளர்த்ததாகவும், இவர்கள் மேலும் 1,000 ஸ்டார்ட் அப்’களை உருவாக்கும் திறன் பெற்றவர்கள் என்றும் கூறுகிறார்.
11வது பதிப்பில் மெய்நிகராக நடைபெறும் யுவர்ஸ்டோரி டெக்ஸ்பார்க்ஸ் 2020 மாநாட்டில், பேசிய ஸ்ரீதர் வேம்பு,
“1,000 ஹீரோக்கள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் ஸ்டார்ட் அப்’களை துவக்கினால் மட்டும் தான் தெரிய வருவார்கள்,” என்று தெரிவித்தார்.
நிறுவனத்தின் மேலாளர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.க்களாக செயல்படும் திறன் பெற்றவர்கள் என்றும் இது வலுவான தொழில்நுட்ப அடித்தளத்தை உருவாக்க உதவுகிறது என்றும் கூறினார்.
வலுவான அடித்தளம்
மகத்தான நிறுவனங்களை உருவாக்க புதுமையாளர்கள் அடித்தளமான தொழில்நுட்பத்தை கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீதர் வேம்பு கூறினார்.
“இன்று நம்மிடையே நிறைய ஸ்டார்ட் அப்’கள் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் இவை எதுவும் இருக்கவில்லை. மகத்தான நிறுவனங்களுக்காக நாம் சிறந்த சூழலை உருவாக்கியுள்ளோம். ஆனால், அடித்தளமான தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய வளரும் மக்கள்தொகைக்கு ஈடு கொடுகும் வகையில் மேம்பட்ட தேசமாக இந்தியாவுக்கு தொழில்நுட்பத்தில் வல்லமை தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த 20 ஆண்டுகளில் இந்த சூழல், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற நுட்பங்களை நோக்கி நகரும் என்றும், இந்த நுட்பங்களில் ஜோஹோவும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
உங்களுக்கான விதிகள்
திறமை மற்றும் வாய்ப்புகள் பற்றி குறிப்பிட்ட ஸ்ரீதர் வேம்பு, பெருநகரங்களில் உள்ள திறமையாளர்கள் அந்த நகரங்களைஅ சேர்ந்தவர்கள் அல்ல என்றும், சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
“நாம் நிறுவனங்களை தரையில் இருந்து உருவாக்க வேண்டும். தொழில்நுட்பத்தை உருவாக்க மக்களை அழைத்து வருவதற்கு பதிலாக, அவர்கள் தொழில்நுட்பத்தை உருவாக்க அதை எடுத்துச்செல்ல வேண்டும்,” என்றும் கூறினார்.
தொழில்முனைவோர் தங்களுக்கான விதிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சொந்த சேவைகள் மற்றும் பொறியியல் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டார்.
“நான் ஜப்பான் மற்றும் சிலிக்கான் வேலியில் படித்தேன், இந்திய கலாச்சாரமும் தெரியும்.
“இந்தியா, ஜப்பான் மற்றும் சிலிக்கான்வேலி கலாச்சாரங்களில் இருந்து கடன் வாங்கி அவற்றை ஒன்றாக இணைத்தேன்,” என்று கூறும் ஸ்ரீதர் வேம்பு, போதும் என்ற தன்மை மற்றும் பணிவு இந்திய கலாச்சாரத்தின் சிறப்பம்சம் என்றும், அறிவை உருவாக்கிக் கொள்ள பணிவு மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்தார்.
தமிழில்: சைபர் சிம்மன்