'நான் ஊழல் செய்வதில்லை'–தெலுங்கானா மின்சாரத் துறை அதிகாரியின் அறிவிப்பு!
வடக்கு மின் விநியோக நிறுவனத்தில் உதவி கோட்டப் பொறியாளராக பணியாற்றும் பொடெட்டி அசோக் தனது அலுவலகத்தில் இத்தகைய வரிகளுடன்கூடிய அறிவிப்புப் பலகையை எதற்கு வைத்துள்ளார் தெரியுமா?
ஊழலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நம் வாழ்வில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் என ஊழல் கறை படியாதவர்களே இல்லை எனும் அளவிற்கு நம்மிடையே பரவியுள்ளது.
ஆனால் தெலுங்கானாவின் கரீம்நகர் மின்சாரத் துறையில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் தான் ஊழலில் ஈடுபடுவதில்லை என்பதை தனித்துவமான முறையில் அறிவித்துள்ளார்.
37 வயதான பொடெட்டி அசோக் கரீம்நகர் வடக்கு மின் விநியோக நிறுவனத்தில் (NPDCL) உதவி கோட்டப் பொறியாளராக (ADE) பணியாற்றுகிறார். இவர் தனது அலுவலகத்தில் ஒரு பலகையில் ”நான் ஊழல் செய்வதில்லை” என்று தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் எழுதி வைத்துள்ளார்.
’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உடனான உரையாடலில் அவர் கூறும்போது,
“நான் 2004-ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பிறகு 2005-ம் ஆண்டு மின்சாரத் துறையில் சேர்ந்தேன். அப்போதிருந்து நான் ஊழல் தொடர்பான நடைமுறைகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் மற்றவர்கள் லஞ்சம் வாங்குவதை என்னால் தடுக்கமுடியவில்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் உதவி கோட்டப் பொறியாளராக பதவி உயர்வு கிடைத்த பிறகு குறைந்தபட்சம் என்னுடைய அலுவலகத்தில் ஊழலைத் தடுக்க விரும்பினேன். எனவே இந்த அறிவிப்புப் பலகையை வைக்க முடிவு செய்தேன்,” என்றார்.
இவரது இந்த செயல் பலரை வியப்பில் ஆழ்த்தியது. பலர் இவரை நேர்மையான அதிகாரியாக பார்க்கும் அதேசமயத்தில் இவருடன் பணியாற்றும் சிலர் மாறுபட்ட கருத்தையும் முன்வைக்கின்றனர்.
இந்த பலகை வைக்கப்பட்டது தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என கரீம்நகர் NPDCL கோட்டப் பொறியாளரான எஸ் ராமசந்தர் ராவ் தெரிவித்ததாக ’தி லாஜிக்கல் இண்டியன்’ குறிப்பிட்டுள்ளது. அலுவலகத்தில் உள்ள மற்ற ஊழியர்கள் ஊழல் செய்கிறார்கள் என்பதையே இத்தகைய செயல் உணர்த்துவதாக ராவ் தெரிவிக்கிறார். இது குறித்து அசோக் கூறும்போது,
“யதார்த்தத்தை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். துறையில் ஊழல் நடப்பது அனைவரும் அறிந்ததே. ஒட்டுமொத்த துறையிலும் ஊழல் நடப்பதில்லை என்கிற கருத்தையே மக்களிடம் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்றார்.
மற்ற ஊழியர்கள் ஊழல் செய்கிறார்கள் என்கிற பிம்பத்தை ஏற்படுத்துவதால் அந்த அறிவிப்புப் பலகையை அகற்றவேண்டும் என்று அசோக்கிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ராவ் கூறினார்.
“உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொள்வார்கள்,” என்றார்.
ஆனால் அறிவிப்புப் பலகையை அகற்றும் எண்ணம் இல்லை எனவும் புதிய இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டாலும்கூட பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை அறிவிப்புப் பலகையை வைத்திருப்பேன் என்றும் அசோக் தெரிவிக்கிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA