'உலகத்தரம் வாய்ந்த, ஆழ் நுட்ப, ஸ்டார்ட் அப்'களை ஊக்குவிப்பதே நோக்கம்' - TamilNadu Story விழாவில் ஸ்டார்ட் அப் டிஎன் திட்ட இயக்குனர் சிவராஜா ராமாநாதன்!
மாநிலத்தில் ஸ்டார்ட் அப் சூழலில் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டம் பற்றியும் ஸ்டார்ட் அப் டிஎன். திட்ட இயக்குனர் சிவராஜா ராமநாதன் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
வடிவமைப்பு, மார்க்நெட்டிங் மற்றும் விற்பனையில் கவனம் செலுத்தும் வகையில் ஸ்டார்ட் அப்'களுக்கான இன்குபேட்டரை தமிழக அரசு அறிமுகம் செய்ய இருப்பதாக ஸ்டார்ட் அப் டிஎன். திட்ட இயக்குனர் சிவராஜா ராமநாதன் கூறினார்.
2021ல் துவக்கப்பட்ட 'Startup TN', மாநிலத்தில் தொழில்முனைவு மற்றும் புதுமையாக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் சூழலுக்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கம் கொண்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப்'கள் வளர்ச்சி, நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. மாநிங்கள் ஸ்டார்ட் அப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து முதலிடத்திற்கு வந்துள்ளது என்று, யுவர்ஸ்டோரியின் தமிழ்நாடு ஸ்டோரி 2024 நிகழ்ச்சியில் யுவர்ஸ்டோரி தமிழ் ஆசிரியர் இந்துஜா ரகுனாதன் உடன் பேசும் போது அவர் கூறினார்.
![startup tn](https://images.yourstory.com/cs/2/c5c652a0fb5a11eca125d7821ea2fbc4/LRIA9765-1721465518407.jpg?fm=png&auto=format&w=800)
மாநிலத்தில் தற்போது, 8,952 ஸ்டார்ட் அப்கள் உள்ளன. இதை 2028-க்குள், 15,000 ஆக உயர்த்த ஸ்டார்ட் அப் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசும் போது, இன்குபேஷனின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டவர்,
“மாநிலத்தில் 124 இன்குபேஷன் மையங்கள் இருந்தாலும், 20 சதவீதம் மட்டுமே அர்த்தமுள்ளவையாக உள்ளன. சில நேரங்களில் உண்மையை ஒப்புக்கொண்டாலே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். வளர்ச்சி வாய்ப்பு கொண்ட புதுமையாக ஸ்டார்ட் அப்பை உருவாக்கத் தேவையான ஆழத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்," என்று கூறினார்.
அரசு உத்தேசித்துள்ள இன்குபேட்டர் இதை சாத்தியமாக்கும், என்று பகிர்ந்த சிவராஜா ராமநாதன், எத்தனை நிறுவனங்கள் புதுமையாக்கம், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கொண்டுள்ளன என்பதை அறிய ஸ்டார்ட் அப் டிஎன் அமைப்பு ஆய்வு நடத்தி வருகிறது, என்றார்.
ஸ்டார்ட் அப் தொடர்பான புரிதலில் மாநில அரசு ஒரு மாயை உருவாக்க விரும்பவில்லை என்றும், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட் அப்களுக்குமான வேறுபாட்டை புரிய வைக்க விரும்புகிறது என்றும் தெரிவித்தார். இந்த நோக்கில் அரசின் இன்குபேஷன் முக்கியப் பங்கு வகிக்கும்.
ஸ்டார்ட் அப் டிஎன் அமைக்க உள்ள இன்குபேட்டர், துறைகள் சாராததாக, நிறுவனங்கள் பொருட்களை வடிவமைத்து, சந்தைப்படுத்தி விற்பனை செய்ய உதவும் வகையில் இருக்கும், என்றார்.
![ய்ச்](https://images.yourstory.com/cs/18/7f701c9008d911e9bb473d9d98ed1e05/LRIA9769-1721465477310-1721644115242.jpg?fm=png&auto=format)
சிவராஜா ராமநாதன் யூனிகார்ன் கருத்தாக்கத்தில் நம்பிக்கை கொண்டவர் அல்ல. அடிப்படையில் வலுவான நிறுவனங்களை உருவாக்குவதே இலக்கு என்று பகிர்ந்த அவர், நாட்டில் உள்ள வருமான ஏற்றத்தாழ்வு பற்றி குறிப்பிட்டார்.
SC/ST சமபங்கு நிதி, பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க, பெண்கள் ஸ்டார்ட் அப்களுக்கான நிதி, திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களை சுட்டிக்காட்டினார்.
நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி பெறுவது உள்ளிட்டவற்றில் அரசு உதவி மற்றும் மதுரை, நெல்லை, கடலூர், தஞ்சாவூர், சேலம், ஓசூர் ஆகிய நகரங்களில் ஸ்டார்ட் அப் மையம் அமைப்பது பற்றியும் அவர் பேசினார். கல்லூரி வளாகங்களில் இருந்தும் தொழில்முனைவோரை ஊக்குவிக்க விரும்புகிறோம், என்றார்.
"உலக சந்தைக்கான ஆழ் நுட்ப புதுமையாக்கம், தீர்வுகள், சேவைகள் கொண்ட ஸ்டார்ட் அப்களை உருவாக்குவதன் தேவையை வலியுறுத்தியவர், அடுத்த 10-12 ஆண்டுகளில் தமிழ்நாட்டை உலகின் முன்னணி 20 ஸ்டார்ட் அப் மையங்களில் ஒன்றாக உருவாக்குவதே நோக்கம்," என்றார்.
அடுத்த ஆண்டு சென்னையில் பெரிய அளவிலான 'சர்வதேச ஸ்டார்ட் அப் மாநாடு' (Global Startup Summit) நடைபெறும் என்றும், இதில் சிறந்த ஸ்டார்ட் அப் சூழல் காட்சிபடுத்தப்படும் என்றும், சர்வதேச முதலீட்டாளர்கள், இன்குபேட்டர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.
Edited by Induja Raghunathan