அஜித் பாட்டு பாடி ஒரே நாளில் பிரபலமான பார்வை குறைப்பாடுள்ள திருமூர்த்தி!
திருமூர்த்தி பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பிரபல இசையமைப்பாளர் அவருக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பளிக்க முன்வந்துள்ளார்.
சமூகவலைதளங்கள் தவறான செயல்களுக்கு மட்டுமல்ல சரியான முறையில் பயன்படுத்தினால் அதனால் ஒருவரின் வாழ்க்கையை மாற்ற முடியும். இதனை உணர்த்தியுள்ளது தமிழகத்தில் தற்போது நடந்துள்ள சம்பவம். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்த ரேணு மண்டலின் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக அவருக்கு இசையமைப்பாளர் ஹிமேஷ் பின்னணி பாடகியாக வாய்ப்பளித்தார்.
ரேணு மண்டல் போல தமிழகத்திலும் இளைஞர் ஒருவரின் பாடும் திறன் சமூக வலைதளத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நொச்சிபட்டி என்ற கிராமத்தில் இருந்து தனது இனிமையான குரலால் லட்சக்கணக்கான இணையதள வாசிகளின் மனதில் இடம்பிடித்துள்ளார் மாற்றுத் திறனாளி இளைஞர் திருமூர்த்தி.
திருமூர்த்தியின் தந்தை திருமால் நொச்சிப்பட்டி கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். இவரது இரண்டாவது மகனான திருமூர்த்தி பிறவியிலேயே கண்பார்வையை இழந்தவர். பார்வைத்திறன் இல்லாவிட்டாலும் கேள்விஞானம் அதிகம் திருமூர்த்திக்கு. சிறு வயது முதலே இசை மீது காதல் கொண்டிருந்தவர் எப்போதும் பாடியபடியே இருந்திருக்கிறார்.
திருமூர்த்திக்கு கண் பார்வை இல்லாததால் அவரை பெற்றோர் பர்கூரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் 1ம் வகுப்பு சேர்த்துள்ளனர். பின்னர் மகனை தனியாக விட அஞ்சி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிற்கே அழைந்து வந்துவிட்டனர். வீட்டிலேயே இருப்பதால் பொழுதபோக்கிற்காக கையில் கிடைத்த பொருட்களை வைத்து இசையமைப்பது தான் இவரது வேலை.
கொட்டாஞ்சியை வைத்து ஒலியெழுப்பி தன்னுடைய மெட்டில் பாட்டை பாடி அந்த ஊர் மக்களை தன் காந்தக் குரலால் கட்டிப் போட்டிருக்கிறார் திருமூர்த்தி.
திருமூர்த்தியின் தாயார் கடந்த ஆண்டு சர்க்கரை வியாதியால் உயிரிழந்த நிலையில் பார்வை குறைபாடு உள்ள திருமூர்த்தியை அந்த ஊர் மக்கள் தங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக வளர்த்து வருகின்றனர்.
17 வயதே ஆன திருமூர்த்தி 200க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை சரளமாக பாடுவார். இதுமட்டுமின்றி சொந்தமாக 10 பாடல்களையும் எழுதிப் பாடியுள்ளார். அண்மையில் திருமூர்த்தி நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் வரும் ’கண்ணான கண்ணே...’ பாடலைப் பாடியுள்ளார். கேட்போரை உருக வைக்கும் திருமூர்த்தியின் பாடலை அந்தப பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
அருண்குமார் திருமூர்த்தியின் வீடியோவை அந்தப் பகுதி அஜித் ரசிகர் மதனுக்கு அனுப்பியுள்ளார். மதன் இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்ய அடுத்த சில மணி நேரங்களில் திருமூர்த்தி உலகம் முழுவதும் வைரலானார். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்த விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் அவரது தொடர்பு எண்ணை கேட்டு ட்வீட் செய்திருந்தார். இதற்கு பலரும் திருமூர்த்தி பற்றிய தகவலைப் பதிவிட அடுத்ததாக பதிவிட்ட ட்வீட்டில் இமான் அந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
திருமூர்த்தியின் தொடர்பு எண்ணை பகிர்ந்து கொண்டவர்களுக்கு மிக்க நன்றி. அவர்களை தொடர்பு கொண்டு பேசிவிட்டேன். எனது இசையில் அவருக்கு பாட வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக இமான் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாளில் உலக அளவில் டிரெண்ட் ஆன திருமூர்த்தி ஒரு வேலை உணவிற்கு சிரமம்படும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது திறமைக்கு வாய்ப்பு வழங்குவதாக பிரபல இசையமைப்பாளர் இமான் கூறி இருப்பது தொடக்கமே. இசையமைப்பாளராக வேண்டும் என்ற திருமூர்த்தியின் கனவு நிறைவேற அரசும் அவருக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று திருமூர்த்தியின் உறவினர்களும், சுற்றத்தாரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.