செப்டம்பர் முதல் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை - பட்ஜெட்டில் வேறு என்னென்ன சிறப்பு?
திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உரிமைத் தொகை எல்லாப் பெண்களுக்கும் கிடைக்காது.
2021 தேர்தல் வாக்குறுதியில் திமுக முன் வைத்த பெண்களைக் கவரும் திட்டமாக இருந்தது இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்கிற அறிவிப்பு. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியும் இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடாமல் இருந்த நிலையில் நடந்து முடிந்த தமிழ்நாடு பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இது மட்டுமின்றி வேறு என்னென்ன அறிவிப்புகளை அவர் வெளியிட்டு உள்ளார் எனப் பார்க்கலாம்:
- முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 5,145 கி.மீ சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
- ரூ. 800 கோடி செலவில் அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 சிறிய நீர்நிலைகள், குளங்கள், ஊரணிகள் புதுப்பிக்கப்படும்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாப்பு திட்டத்திற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 22 ஆயிரத்து 562 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 7இ145 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்களில் நிதியுதவிக்காக முன்மொழியப்படும்.
- கோவையில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும். இதற்காக ரூ. 43 கோடி நிதி ஒதுக்கீடு.
- அரசு – தனியார் பங்களிப்புடன் ஏறத்தாழ ரூ.1,500 கோடி செலவில் 44 கி.மீ நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
- சென்னைத் தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை வனப்புடன் நகர்ப்புர பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புர வசதிகளை 50 கோடி ரூபாய் செலவில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும்.
- தலா ரூ. 1 கோடி செலவில் எழில்மிகு கோவை மற்றும் மாமதுரை என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படும்.
- “வடசென்னை வளர்ச்சி திட்டம்” என்ற திட்டத்தை 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும்.
நெடுஞ்சாலைகள்
- வரும் ஆண்டில், 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும்.
- நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 19,465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து
- ரூ.1,600 கோடி ரூபாய் முதலீட்டில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில்
- உள்ள பேருந்து பணிமனைகள் மேம்படுத்தப்படும்.
- 1,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும். 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
- மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திற்கு 2,800 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்திற்கு 1,500 கோடி ரூபாயும், டீசல் மானியத்திற்கு 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இந்திய இரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து, மாநிலத்தில் புதிய இரயில் திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்திட, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் (TIDCO) இணைந்து ஒரு சிறப்பு நிறுவனத்தை அரசு உருவாக்கும்.
- போக்குவரத்துத் துறைக்கு 8 ஆயிரத்து 56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்
- சென்னை பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின்நிலையப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025 டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- மதுரையில் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ இரயில் திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும். இந்த இரண்டு நகரங்களில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ இரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
எரிசக்தி
- 2030‑ம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு இருக்கும் வகையில் பசுமை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு சிறப்பு நிறுவனம் ஒன்றை அரசு உருவாக்கும். மேலும், மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளின் செயல்திறனை மறுசீரமைக்க புதிய கொள்கை ஒன்றும் வகுக்கப்படும்.
- 2030ம் ஆண்டுக்குள், 77,000 கோடி ரூபாய் செலவில் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அரசு-தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
கைத்தறி, துணி நூல்
- சேலத்தில் சுமார் 880 கோடி ரூபாய் செலவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் ஒன்றிய மாநில அரசுகளின் நிதியுதவியுடனும் தனியார் தொழில் முனைவோர்களின் பங்களிப்புடனும் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
- கைத்தறிப் பொருட்களின் தரத்தை உயர்த்தவும், நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவும், சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் 20 கோடி ரூபாய் செலவில் 10 சிறிய கைத்தறிப் பூங்காக்கள் அரசால் நிறுவப்படும். மேலும் புதிய துணிநூல் கொள்கை ஒன்று வெளியிடப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
- நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழில் வளர்காப்பகங்கள் (Business incubators) உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. காலநிலைத் தொழில்நுட்பம், ஊரகத் தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், கடல்சார் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற விழையும் தொழில் வளர்காப்பகங்களை ஆதரிக்கும் நோக்கில், உயர்நுட்ப மையங்களை அமைக்க புத்தொழில் தமிழ்நாடு இயக்கம் உதவும். தொழில் வளர்காப்பகங்கள் நிதி திரட்டிட உதவுவதுடன், 40 சதவீத மானியமும் வழங்கப்படும். மாநிலத்தில் தொழில் வளர்காப்பகங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த புத்தொழில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்படும்.
- முதல் - தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தில் (NEEDS), 144 கோடி ரூபாய் அளவிலான மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு, உரிய நேரத்தில் பணம் அளிக்கப்படுவதை உறுதிசெய்ய ‘மின்னணு வர்த்தக வரவு தள்ளுபடி’ (TReDS) தளத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இணைவது கட்டாயமாகிறது.
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 1,509 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்துறை
- உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஜனவரி 10, 11 தேதிகளில் சென்னையில் நடத்தப்படவுள்ளது. இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் இரண்டு புதிய தொழிற்சாலைகள் இராணிப்பேட்டையிலும், கள்ளக்குறிச்சியிலும் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 32,000 பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
- விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால், ஏறத்தாழ 22,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- தொழில்துறைக்கு 3 ஆயிரத்து 268 கோடி நிதி ஒதுக்கீடு.
தகவல் தொழில்நுட்பம்
- முதற்கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும்.
- உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக நிலைநாட்டுவதற்கும், பெருகி வரும் அலுவலகக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில்,“தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்கள் (TNTech city)” அமைக்கப்படும்.
- சென்னையைப் போன்று ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு இலட்சம் சதுரடி கட்டடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம், சுமார் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சமூகப் பாதுகாப்பு
- தகுதியான ஒரு இலட்சம் பேர்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக 5,346 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பணியாளர் நலன்
- அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம் 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சமாக வரும் நிதியாண்டிலிருந்து உயர்த்தப்படும்.
பதிவுத்துறை
- நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைப்பு. இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகை
- தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. செப்டம்பர் 15 முதல் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
- இந்த திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பற்றாக்குறை
2023-24ன் வருவாய்ப் பற்றாக்குறை 37,540.45 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரிவசூலை மேம்படுத்துதல், வரி விகிதங்களை சீரமைத்தல் உள்ளிட்ட வருவாயைப்
பெருக்கும் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறை 2024-25ம் ஆண்டில் 18,583.12 கோடி ரூபாயாக குறையும் எனவும், அதன் தொடர்ச்சியாக 2025-26 ஆம் ஆண்டில் 1,218.08 கோடி ரூபாய் வருவாய் உபரிக்கு வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதால் இது கூடுதல் மூலதனச் செலவினத்திற்கு வழிவகை செய்யும் என்று நிதியமைச்சர் தன்னுடைய பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டித் திட்டம் - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு!