இந்திய தேர்தல் ஆணைய சர்க்கஸின் சிறந்த ரிங் மாஸ்டராக திகழ்ந்த டி.என்.சேஷன்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் மிகச்சிறந்த அதிகாரியாக சேஷன் அறியப்பட என்ன காரணம்?
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்றவில்லை, ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் இடையே நடுநிலையாக செயல்படவில்லை என இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டு பட்டியல் நீள்கிறது.
தேர்தல் ஆணையத்தால் பணப்பட்டுவாடா, ஆள்பலம் காட்டுபவர்கள் இன்னும் பிற தேர்தல் முறைகேடுகளை சட்டங்களைக் கொண்டு ஒடுக்க முடியும் என்ற வரலாற்றை நமக்கு உணர்த்தியவர் 10வது தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன்.
86 வயதான சேஷன், வயோதிகம் காரணமாக சென்னையில் நவம்பர் 10ம் தேதி அவருடைய இல்லத்தில் இயற்கை எய்தினார். டி.என்.சேஷன் நம்மை விட்டு பிரிந்தாலும் இந்திய தேர்தல் சர்கஸில் சிறந்த ரிங் மாஸ்டராக அவர் இருந்த வரலாற்றுப் பதிவுகளை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார்.
தேர்தல் ஆணையத்தின் சக்தியை அதன் விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர் சேஷன். பிரதமர் சந்திரசேகரால் 1990–1996 காலகட்டத்திற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த சேஷன்.
தேர்தல் ஆணையம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான உதாரணமாக இருந்தவர் இவர். சேஷன் காலத்தில் இருந்தது போன்ற நம்பகத்தன்மை தேர்தல் ஆணையத்தின் மீது வரவேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஒரு முறை வழக்கு ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் மிகச்சிறந்த அதிகாரியாக சேஷன் அறியப்பட என்ன காரணம்?
1955 பேட்சை சேர்ந்த சேஷன் ஐ.ஏ.எஸ் நேர்காணல் ஒன்றில் “நான் எப்போதுமே தேர்தல் நடத்தியதில்லை. நான் பின்பற்றுவது இரண்டு குறிக்கோள்களையே : Zero delay and Zero deficiency,” என்றார்.
தன்னுடைய பணிக்காலத்தில் இதனை பின்பற்றியவர் சேஷன். தேர்தல் விதிகளை பின்பற்ற கையேடுகளை அச்சிட்டு அரசியல் கட்சிகளுக்கு அளித்தார். இவருடைய கடுமை மற்றும் சட்டம் என்னும் சாட்டையை கையில் எடுத்து சுழட்டுவதைப் பார்த்து சிலர் இவரை ’அல் சேஷன்’ என்று கூட அழைத்ததுண்டு.
தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தியது, வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம், வேட்பாளர் செலவுத் தொகைக்கு வரையறை, ஓட்டுக்கு பணம், மது விநியோகம், சுவரில் எழுதுவது, ஸ்பீக்கர்களை பயன்படுத்துவது,தேர்தல் பிரச்சாரத்தின் போது மதத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்பன போன்ற பல கெடுபிடிகளைக் கொண்டு வந்தார்.
தேர்தல் பார்வையாளர்கள் அறிமுகம், வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்கை துள்ளியமாகக் கணக்கு காட்ட வேண்டும், இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட வாக்காளர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய பல சாதனைகளை தன்னுடைய பணிக்காலத்தில் செய்து காட்டிய நம்பிக்கை நாயகன் சேஷன்.
எதற்கும் யாருக்கும் அஞ்சாத சேஷன், நினைப்பதை நினைத்த மாத்திரத்தில் வெளிப்படையாக கூறும் தைரியமிக்கவர். இவருடைய பணிக்காலத்தில் நடந்த தேர்தலலில் ஆளுநராக இருந்த ஒருவர் அவரது மகனுக்காக பிரச்சாரம் செய்ய அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடுமை காட்டினார்.
அரசுப் பணத்தில் உத்திரபிரதேச மாநில தலைமைச் செயலாளர் பத்திரிக்கையில் விளம்பரம் அளித்திருந்ததற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக பிரதமர் நரசிமராவின் அமைச்சரவையில் இருந்த 2 அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ய அழுத்தம் கொடுத்தார்.
1932ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி அப்போதைய திருநெல்வேலி (இப்போது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில்) பிறந்தவர் திருநெல்லை நாராயண ஐயர் சேஷன். பாலக்காட்டில் பள்ளிப் படிப்பையும் சென்னை தாம்பரம் கிருத்தவக் கல்லூரியில் பி.எஸ்.சி.(ஹானர்ஸ்) அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பொது நிர்வாகமும் படித்தவர். 1953ல் ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று அடுத்த ஆண்டே ஐ.ஏ.எஸ் அதிகாரியானார்.
கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்துத் துறை இயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தவர். 1989 ஆம் ஆண்டில் இந்தியாவின் 18வது அமைச்சரவை செயலாளராக பணியாற்றினார். 1990 டிசம்பர் 12ம் தேதி முதல் 6 ஆண்டுகளுக்கு இவர் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பல.
இவரது சில நடவடிக்கைகள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானபோதிலும் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர்திருத்தங்களை செய்தது குறிப்பிடத்தக்கது. 1996ல், அவர் ரமோன் மாக்சேசே விருதை வென்றார். சேஷன் 1997ல் இந்திய ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு கே.ஆர்.நாராயணனிடம் தோற்றார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சக்தி என்னவென்று புரிய வைத்து தேர்தல் விதிமீறல்கள் செய்யும் அரசியல் கட்சிகளின் கண்ணில் ரத்தக்கண்ணீர் வரவழைத்த டி.என்.சேஷன் சென்னையில் நேற்று காலமாகியுள்ளார். அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.