டிஎன்பிஎஸ்சி குருப் -1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட குரூப் -1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ரிசல்ட் பார்க்கும் லின்க் உள்ளே...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC Group-1) நடத்திய குருப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ் சரி பார்ப்பது மற்றும் நேர்காணல் வரும் 23ம் தேதி துவங்க உள்ளன.
தமிழகத்தில் குருப் 1 பிரிவில் 181 பணியிடங்கள் காலியாக இருந்தன. இவற்றை நிரப்புவதற்கான தேர்வு அறிக்கை கடந்த ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் நிலைத்தேர்வு நடைபெற்றது. 2.29 லட்சம் பேர் தேர்வு எழுதினர். பின்னர், 9,442 பேர் முதன்மை தேர்வு எழுதினர்.
இந்நிலையில், குருப் 1 முதன்மை தேர்வுகளுக்கான முடிவு வெளியிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி வரலாற்றிலேயே மிகவும் குறைந்த காலத்தில், தேர்வு நடைபெற்ற 145 நாட்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிக விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதிய நிலையில், மிகவும் குறுகிய காலத்தில் விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் நேர்காணல் 23ம் தேதி முதல் 31ம் தேதி (25 மற்றும் 29 தேதிகள் நீங்கலாக) வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் இந்த சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான குறிப்பாணை தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை தேர்வாணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்: இதற்கான இணைய முகவரி: www.tnpsc.gov.in
கட்டுரை உதவி: சைபர் சிம்மன்