'இந்தியாவில் பணிபுரிய சிறந்த டாப் 25 நிறுவனங்கள்’ எவை? - Linkedin வெளியிட்ட பட்டியல்!
உலகின் முன்னணி தொழில்முறை நோக்கிலான சமூக வலைப்பின்னல் தளமான Linkedin, தனது மேடையில் லட்சக்கணக்கான பயனாளிகளின் செயல்பாடு அடிப்படையில், இந்தியாவில் 2023ம் ஆண்டின் முன்னணி நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது.
ஏழாவது ஆண்டாக வெளியிடப்படும் இந்தப் பட்டியல், இந்தியாவில் பணிபுரிய சிறந்த 25 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது. குறிப்பிட்ட தேவை உள்ள திறன்கள், முன்னணி பணியிடங்கள், நிறுவனங்கள் அளவிலான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட தகவல்களையும் இந்த பட்டியல் கொண்டுள்ளது.
தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும் திறன் வளர்ச்சி, நிறுவன நிலைத்தன்மை, வெளி வாய்ப்புகள், நிறுவன சார்பு, பாலிய பரவலாக்கம், கல்வி பின்புலம், நாட்டில் ஊழியர்கள் இருப்பு ஆகிய எட்டு முக்கிய அம்சங்கள் அடிப்படையில் தனது மேடையில் இருந்து திரட்டப்பட்ட தரவுகள் மூலம் லிங்க்டுஇன் இந்தப் பட்டியலை தயாரித்துள்ளது.
இந்த ஆண்டு பட்டியலில் டாடா கன்சல்டன்சி முதலிடம் பெற்றுள்ளது. அமேசான் இரண்டாவது இடமும், மார்கன் ஸ்டான்லி மூன்றாவது இடமும் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திய நிலைக்கு மாறாக இந்த ஆண்டு, நிதி சேவைகள், எண்ணெய் நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் கேமிங் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.
முதல் முறையாக இந்தப் பட்டியலில் டிரீம்11 மற்றும் கேம்ஸ் 24x7 ஆகிய கேமிங் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் உள்ள 17 நிறுவனங்கள் இந்த ஆண்டு புதிதாக இடம்பெற்றுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. Zepto நிறுவனம் இந்த ஆண்டு பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
தொழில்நுட்பத்துறையில் உள்ள நிறுவனங்கள் ஏஐ, ரோபோடிக்ஸ், சாப்ட்வேர் சோதனை, கம்ப்யூட்டர் பாதுகாப்பு ஆகிய திறன்கள் அதிகம் எதிர்பார்ப்பதும் தெரிய வந்துள்ளது. தொழில் வடிவமைப்பு மற்றும் கேமிங் வளர்ச்சி ஆகிய திறன்களுக்கும் தேவை உள்ளது.
பணியிடத்தில் பெங்களூரு முன்னிலை வகிக்க, மும்பை, ஐதராபாத், தில்லி மற்றும் புனே அடுத்த வரிசையில் உள்ளன.
“இந்த நிச்சயமற்ற சூழலில், தொழில் வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் நீண்ட கால நோக்கிலான வெற்றியை அளிக்கும் நிறுவனங்கள் தொடர்பான வழிகாட்டலை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். இத்தகைய உள்ளொளிகள் நிறைந்ததாக 2023 முன்னணி நிறுவனங்கள் பட்டியல் அமைந்துள்ளது,” என்று லிங்க்டுஇன் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தொழில் வாழ்க்கை வல்லுனர் நீரஜிதா பானர்ஜீ கூறியுள்ளார்.
முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான குறிப்புகளையும் அவர் வழங்கியுள்ளார்:
நிறுவன ஆய்வு: லிங்க்டுஇன் தளத்தில் நிறுவன பக்கம், பதிவுகள், செய்திகள் ஆகியவற்றை பார்ப்பதன் மூலம் நிறுவனம் பற்றி ஆய்வு செய்து நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நிறுவன கலாச்சாரம் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
நம்பகத்தன்மை: பொதுவாக நிறுவனங்கள் போல் அல்லாமல், முன்னணி நிறுவனங்கள் நம்பகத்தன்மையை அதாவது, நேர்மை, வெளிப்படைத்தன்மையை முக்கியமாக கருதுகின்றன. உங்கள் பலம் மற்றும் நீங்கள் வளர்ச்சி அடைய விரும்பும் பிரிவுகளை எடுத்துக்கூறுங்கள்.
நோக்கம்: திறன் மற்றும் எதிர்பார்ப்புகள் அடிப்படையில் ஊழியர்கள் வேலைக்கு விண்ணப்பிப்பதை முன்னணி நிறுவனங்கள் விரும்புகின்றன. வேலைக்குத் தேவையான அனைத்து தகுதிகள் இல்லாவிட்டாலும் அதை பாதகமாக கருதுவதில்லை. நிறுவன வளர்ச்சிக்கு எப்படி பங்களிப்பு செலுத்த முடியும் என உணர்த்துங்கள்.
ஆர்வம்: தொழில்நுட்ப முன்னணி நிறுவனம் தொழில்நுட்பத் தகுதி கொண்டவர்களை மட்டுமே பணியில் அமர்த்தும் என்பது தவறான கருத்து. ஒரு சில பணிகளுக்கு இந்த தகுதி அவசியம் என்றாலும் மற்ற பணிகளுக்கு பரவலான பின்னணி கொண்டவர்கள் தேவை.
இவைத்தவிர, தேவை உள்ள திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் மற்றும், விடாமுயற்சி தேவை என்றும் கூறியுள்ளார்.
‘வேலைக்குச் செல்லும் 51% பெண்கள் வேலையை விடும் மனநிலையில் உள்ளனர்’ - ஆய்வு முடிவு!
Edited by Induja Raghunathan