ShareChat உருவாக சச்சின் டெண்டுல்கர் காரணம் என்று தெரியுமா?
ஒவ்வொரு மாதமும் 6 கோடி மக்கள் ஷேர் சாட் பயன்படுத்துகின்றனர். 15 மொழிகளில் உள்ள இவர்களின் படைப்புகள், 21 மில்லியன் படைப்பாளிளைக் கொண்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் என்றால், ஃபேஸ்புக், டுவிட்டர் பின்னர் இன்ஸ்டாகிராம் என்றுதான் பலரும் நினைத்து வந்தனர். ஆனால் அந்த எண்ணம் இந்த மூவரை அவர்கள் யோசனையை முயற்சித்துப் பார்ப்பதில் இருந்து தடுக்கவில்லை.
ஐஐடி கான்பூரில் ஒன்றாக படித்த பானு சிங், அன்குஷ் சச்தேவ் மற்றும் பரீத் ஆசன் மூவரும் இணைந்து துவங்கியது தான் இன்று நகரங்கள் அல்லாத இடங்களில் வாழும் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான உருவாகியுள்ள ‘ஷேர் சாட்’ ‘ShareChat'.
இதன் மூலம் பயனாளர்கள் அவர்கள் கருத்துக்கள், அவர்களின் தினசரிப் பதிவுகள், ஆகியவற்றை அவர்கள் மொழியில் பதிவு செய்து மேலும் புது நண்பர்களைப் பெறலாம்.
சமீபத்தில் நடைபெற்ற யுவர்ஸ்டோரியின் பியூச்சர் ஆப் வர்க் நிகழ்வில், அன்குஷ் தங்களின் 14 முயற்சிகள் தோல்வியுற்ற பிறகு எவ்வாறு ஷேர்சாட் யோசனை தங்களுக்கு வந்தது என்பதை பகிர்ந்தார்.
அந்த ஒரு தருணம் :
2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அன்குஷ் மற்றும் பானு தங்களின் 13வது திட்டத்தை செயல்படுத்தத் துவங்கினர். ஒபினியோ என்னும் விவாதம் செய்யும் தளம் அது. முகநூலில் இருந்து ஒபினியோ தளத்திற்கு மக்களை எவ்வாறு அழைத்து வருவது என்பதை அறிய அன்குஷ் முகநூலில் நுழைந்தார்.
"சச்சின் டென்டுல்கர் பேன் கிளப்" என்ற ஒரு பக்கத்தை பார்த்தேன். அந்த பக்கத்தில் ஒரு அறிக்கை இருந்ததை கவனித்தேன். ‘சச்சின் வாட்ஸ் அப்’ குழுவில் நீங்களும் இணைய விரும்பினால், உங்கள் தொலைபேசி எண்ணை இங்கு பதிவிடவும்," என்பதே அது.
அந்த பதிவிற்கு 5,00,000 லைக்குகளும், 50,000 கமெண்டுகளும் இருந்தன. அந்த நேரத்தில் அன்குஷை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயம், மக்கள் அவர்கள் தொலைபேசி எண்களை அங்கு பதிவிட்டது தான்.
"இவர்கள் யார், எதற்காக இதைச் செய்கின்றனர் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதன் பின்னர் ஆர்வ மிகுதியில், அங்கிருந்து 1000 தொலைபேசி எண்களை எடுத்து ஒரு குழுவிற்கு 100 பேர் என்ற கணக்கில் 10 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கினேன். இந்த குழுக்கள் அனைத்தும் சச்சினை மையமாகக் கொண்டவை," என்கிறார் அன்குஷ்.
பின்னர் அன்குஷ் மதிய உணவிற்கு சென்றுவிட, திரும்பி வந்து பார்க்கையில் அவரது தொலைபேசி முழுவதும் நோட்டிபிக்கேஷன்களால் நிறைந்திருந்தது. அவர் உருவாக்கிய 10 குழுவில், குழுவுக்கு 100 என நோட்டிபிக்கேஷன்கள் வந்திருந்தன. மக்கள் அவரவர் மொழிகளில் சச்சின் பற்றிய தரவுகளை அனுப்பி இருந்தனர்.
அந்தத் தருணத்தில் உதயமானது தான் ஷேர் சாட் யோசனை .
நிறுவனத்தின் வளர்ச்சி :
முதன் முதலாக கட்டமைக்கப்பட்ட ஷேர் சாட் ஒரு சாதாரண சாட் பாட்டாக மட்டுமே இருந்தது. அதில், நகைச்சுவை, வால்பேப்பர்கள் போன்றவற்றை அதன் பயனாளர்கள் பெறலாம்.
"பயனாளர்கள் தங்களுக்கு ஒரு வால்பேப்பர் வேண்டும் என நினைத்தால், அதனை ஒரு கோரிக்கையாக சாட்பாட்டிடம் சமர்ப்பிக்கவேண்டும். அது அதனை அவர்களுக்கு அனுப்பிவைக்கும்.”
இந்த சாட் பாட்டுகளில் சில மிகவும் கடினமானவையாக இருந்தன. அதில் ஒன்று பயனாளர்களுக்கு வேலைத் தேடி தர முயன்றது. எனவே பயனாளர்கள் தங்களைப் பற்றிய தனித்தகவல்களை அதனிடம் கொடுக்கவேண்டும்.
"ஆனால் யாருக்கும் வேலையோ அல்லது சேவைகளோ தேவைப் படவில்லை. அனைவருக்கும் ரிங்க்டோன்கள், வால்பேப்பர்கள், நகைச்சுவை மற்றும் வீடியோ தான் தேவைப்பட்டது," என விளக்குகிறார் அன்குஷ்.
முதலில் ஆங்கில மொழியை ஒரு தேர்வாக ஷேர்சாட் கொடுத்திருந்தது. ஆனால் தங்களுக்கு சரிவர புரியாவிட்டாலும், 80% பயனர்கள் அந்த மொழியை தேர்வு செய்தனர்.
"மக்கள் மனதில் ஒரு வித நம்பிக்கையின்மை இருந்தது. இதற்கு முன்பு இணையத்தில் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஒரு செயலி ஆங்கிலத்தில் இருந்தால் அது தரம் வாய்ந்தது என்று எண்ணுகின்றனர். அதன் காரணமாக அவர்களுக்கான மொழி தேர்வு இருந்தும் தவறான தேர்வை அவர்கள் செய்தனர்," என்கிறார் அன்குஷ்.
கிடைத்த ஆய்வுகளை மனதில் வைத்து, ஷேர்சாட் தங்கள் மூன்றாவது கட்ட செயலியை வெளியிட்டனர். இம்முறை அதில் ஆங்கிலம் என்ற தேர்வு இல்லை.
முதல் வருடத்தில் எங்கள் குழுவின் முழு கவனமும், பகிர்தலில் இருந்தது. ஷேர்சாட் கொடுக்கும் எந்த ஒரு விஷயமும் வாட்ஸ் அப்’பில் பகிரப்படும் பொழுது அதில் எங்கள் அடையாளம் மற்றும் பெயர் இருக்கும் படி செய்தோம். அவ்வாறு அந்த அடையாளத்தை மக்கள் கிளிக் செய்யும் பொழுது. எங்கள் செயலியை தரவிறக்கம் செய்யும் பக்கம் வரும்படி செய்தோம்.
"விளம்பரம் செய்ய எங்களிடம் பணம் இல்லை. எனவே மக்களே இதனை தரவிறக்கம் செய்யும் படி நாங்கள் திட்டமிட்டோம்," என்கிறார் அன்குஷ்.
எதிர்காலம் :
ஜியோ இந்தியாவில் துவங்கும் முன்பு, ஷேர்சாட்டில் பகிரப்பட்ட பல விஷயங்கள் எழுத்துக்களை மையமாகக் கொண்டவையே. வெறும் 20% மட்டுமே புகைப்படங்கள், ஒளி மற்றும் ஒலி தொடர்பானவை பகிரப்பட்டு வந்தன. ஆனால் ஜியோ காலம் துவங்கிய பின்பு அந்த கணக்கு தலைகீழாக மாறியுள்ளது. இப்பொழுது பகிரப்படுவது முழுவதும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளே.
ஒவ்வொரு மாதமும் 60 மில்லியன் மக்கள் ஷேர் சாட் பயன்படுத்துகின்றனர். அதில் ஒவ்வொரு பயனாளரும் சராசரியாக 23 நிமிடம் இந்தத் தளத்தில் உள்ளனர். 15 மொழிகளில் இவர்களின் படைப்புகள் உள்ளன. 21 மில்லியன் படைப்பாளிகள் உள்ளனர்.
அக்டோபர் 2019ல் இந்த தளத்தின் மதிப்பு $600 முதல் $650 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற வருடம் ஆகஸ்டில் நான்காம் கட்ட முதலீடாக $100 மில்லியன் பெற்றுள்ளதாக இந்நிறுவம் கூறியுள்ளது.
எழுதியவர்: டெபோலினா பிஸ்வாஸ் | தமிழில் : கெளதம் தவமணி