கோவிட்-19 நிவாரணம்: இந்தியாவிற்கு 15 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியது ட்விட்டர்!
கேர், எய்ட் இந்தியா, சேவா இண்டர்நேஷனல் யூஎஸ்ஏ ஆகிய மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு 15 மில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் சிஇஓ ஜாக் பேட்ரிக் டோர்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கோவிட்-19 நெருக்கடியை இந்தியா சமாளிக்க உதவும் வகையில் ட்விட்டர் நிறுவனம் 15 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது.
இந்தத் தொகை Care, Aid India, Sewa International USA ஆகிய மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் சிஇஓ ஜாக் பேட்ரிக் டோர்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதில் கேர் நிறுவனத்திற்கு 10 மில்லியன் டாலர் தொகையும் எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷனல் யூஎஸ்ஏ நிறுவனங்கள் தலா 2.5 மில்லியன் டாலர் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
சேவா இண்டர்நேஷனல் இந்து மதம் சார்ந்த நிறுவனம். மனிதநேயத்துடனும் லாப நோக்கமற்ற வகையிலும் சேவையளித்து வருகிறது. ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், Bipap இயந்திரம், CPAP (Continuous Positive Airway Pressure) இயந்திரம் போன்றவற்றை வாங்குவதற்கு இந்த நன்கொடை உதவும்.
சேவா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ‘இந்தியா கோவிட்-19 தொற்றை எதிர்த்து தோற்கடிக்க உதவுங்கள்’ (Help India Defeat Covid-19) என்கிற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இயந்திரங்கள் அரசு மருத்துவமனைகளுக்கும் கோவிட்-19 பராமரிப்பு மையங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து சேவா இண்டர்நேஷனல் மார்க்கெட்டிங் மற்றும் நிதி மேம்பாட்டுத் துறையின் துணைத் தலைவர் சந்தீப் கட்கேகர், டோர்சி சேவா நிறுவனத்தின் பணிகள் அங்கீகரிக்கப்பட்டு நன்கொடை வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
தன்னார்வலர்கள் சார்ந்து இயங்கும், லாப நோக்கமற்ற சேவா நிறுவனம் இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் அனைவருக்கும் சேவையளிக்க விரும்புகிறது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதை முன்னிறுத்தியே செயல்பட்டு வருகிறது என பிடிஐ இடம் கட்கேகர் தெரிவித்தார்.
“எங்கள் நிர்வாகச் செலவு சுமார் 5 சதவீதம். அதாவது நாங்கள் பெறும் நன்கொடை தொகையில் 95 சதவீதம், எந்தக் காரணத்தை முன்னிறுத்தி நன்கொடை பெறப்படுகிறதோ அதற்கு ஒதுக்கப்படும். கடந்த இரண்டு வாரங்களாக இந்திய சுகாதார அமைப்பு எப்படிப்பட்ட அழுத்தத்தை சந்தித்து வருகிறது என்பதை நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் இயன்ற வகையில் உதவ விரும்புகிறோம். நாங்கள் செய்யவேண்டிய பணிகளையும் செய்ய விரும்பும் பணிகளையும் செய்து முடிக்க ட்விட்டரின் நன்கொடை பேருதவியாக இருக்கும்,” என்கிறார்.
இந்தியாவில் கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்காக சேவா யூஎஸ்ஏ நிறுவனம் நிதி திரட்டி வருகிறது. தற்போது ட்விட்டர் வழங்கியுள்ள நன்கொடை தொகையுடன் சேர்த்து இந்நிறுவனம் இதுவரை 17.5 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது.
கேர் நிறுவனம் உலகளவில் வறுமையை ஒழிக்கப் போராடி வருகிறது.
இந்தியாவில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையை எதிர்த்து நாடு போராட கேர் நிறுவனம் போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு 10 மில்லியன் டாலர் நன்கொடைத் தொகை நிச்சயம் உதவும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தற்காலிகப் பராமரிப்பு மையங்கள் அமைப்பது, ஆக்சிஜன் விநியோகம், பிபிஈ கிட், முன்களப் பணியாளர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது, தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே இருக்கும் தயக்கத்தைப் போக்குவது, தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிப்பது என அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்த நிதித் தொகை உதவும் என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.
Association for India’s Development (AID) நிலையான, நியாயமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு தன்னார்வ அமைப்பு. கோவிட் தொற்றின் அறிகுறிகளைக் கண்டறிவது, பரவலைக் கட்டுப்படுத்துவது, பராமரிப்பு மற்றும் சிகிச்சை பெறுவது, ஆக்சிஜன், ஆக்சிமீட்டர், தெர்மாமீட்டர், பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அணுகுவது, ஊரடங்கு சூழலை எதிர்கொள்வது, வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது போன்றவற்றை வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு உறுதிசெய்ய இந்த நன்கொடை உதவும்.
அத்துடன் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கும் குறைந்த வருவாய் ஈட்டும் சமூகங்களுக்கும் சேவையளிக்கக்கூடிய மருத்துவமனைகள் மற்றும் என்ஜிஓ-க்களை வலுப்படுத்தவும் இந்தத் தொகை பயன்படும்.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், மருந்து போன்றவற்றின் பற்றாக்குறை நிலவுவதுடன் போதிய சுகாதாரப் பணியாளர்களும் இல்லாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. அத்துடன் தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவுகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனம் நன்கொடை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.