கொரோனாவால் வேலை இழப்பு; மளிகை டெலிவரி ஆப் உருவாக்கிய இரு பொறியாளர்கள்!
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாண்டசா பகுதியில் வசிக்கும் பொறியாளர்களான ரூபேஷ் மற்றும் தில்லி ராவ் வேலையை இழந்ததும் அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்க செயலி ஒன்றை உருவாக்கி வணிகம் செய்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஏப்ரல் மாதத்தில் 1.2 கோடி மக்கள் வேலையை இழந்ததுள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) மதிப்பிடுகிறது. பலருக்கு புதிய வேலை கிடைக்காத நிலையில் சிலர் வாழ்வாதாரத்திற்காக புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் மாண்டசா பகுதியைச் சேர்ந்த இரண்டு பொறியாளர்களுக்கும் இப்படி லாக்டவுனில் வேலை போனது. ஆனால் அவர்கள் மனம் தளராமல் புதிய முயற்சிகளில் களமிறங்கியுள்ளனர்.
ரூபேஷ் சிவில் பொறியாளராகவும், தில்லி ராவ் ரோபோடிக் பொறியாளராகவும் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் பெருந்தொற்று பிரச்சனையை எதிர்கொள்ள ஒரு சிறந்த தீர்வை உருவாக்கியுள்ளனர்.
“நாங்கள் ஏப்ரல் மாதம் எங்கள் நகருக்குத் திரும்பிவிட்டோம். செப்டம்பர் மாத இறுதிவரை வேலை ஏதும் கிடைக்கவில்லை. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர். இதற்குத் தீர்வளிக்கும் வகையில் செயல்பட எண்ணினோம்,” என்று தில்லி ராவ் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் தெரிவித்தார்.
மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் SSV Egrocery என்கிற ஆன்லைன் ஷாப்பிங் செயலியை அறிமுகப்படுத்தத் தீர்மானித்தனர். தரமான பொருட்களை வாங்க மொத்த விற்பனையாளர்களைத் தொடர்பு கொண்டனர்.
“வாடிக்கையாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதை உறுதிசெய்தோம். குறைந்த முதலீட்டுடன் வணிகத்தைத் தொடங்கினோம். செயலி உருவாக்கவும் விளம்பரத்திற்கும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கினோம்,” என்று தில்லி தெரிவித்தார்.
இந்தச் ஆப்’ல் ஆர்டர்கள் பெறப்படுகின்றன. 1,000 ரூபாய்க்கும் குறைவாக வாங்குபவர்களுக்கு வீட்டிற்கு சென்று டெலிவர் செய்ய வெறும் 9 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கின்றனர். சிறு நகராக இருப்பினும் இந்தச் செயலியில் நாள் ஒன்றிற்கு 30 ஆர்டர்கள் வரை பெறப்பட்டன.
பழங்கள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை இந்த ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம். காலை 8 மணி முதல் 1 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் என இரண்டு நேரங்களாகப் பிரித்து இவர்கள் டெலிவர் செய்கின்றனர்.
“நான் 800 ரூபாய்க்கு காய்கறிகளும் பழங்களும் ஆர்டர் செய்தேன். 45 நிமிடங்களில் டெலிவர் செய்துவிட்டனர். தொற்று பரவும் அபாயம் உள்ள சூழலில் மார்கெட் செல்வதற்கு பதிலாக இந்த ஆப்-ல் ஆர்டர் செய்து விடுகிறேன். SSV EGrocery செயலியில் ஆர்டர் செய்ததும் அரை மணி நேரத்தில் டெலிவர் செய்துவிடுகின்றனர். இங்கு சந்தை விலையைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது,” என்கிறார் மாண்டசா பகுதியில் வசிக்கும் சிவபிரசாத்.
கட்டுரை: THINK CHANGE INDIA