அமெரிக்காவிலும் TikTok, WeChat ஆப்’கள் தடை: ட்ரம்ப் அதிரடி!
இந்தியாவை அடுத்து அமெரிக்காவிலும் சீன செயலிகள் டிக்டாக், வீசேட் தடை செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் பிரபலமான செயலிகள் TikTok மற்றும் WeChat ஆகியவற்றை அமெரிக்காவில் தடை செய்வதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த இரண்டு செயலிகளும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக இரண்டு தனி ஆணைகளில் கையெழுத்திட்டுள்ள டிரம்ப், இந்த தடை 45 நாட்களில் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் டிக்டாக் மற்றும் வீசேட் செயலிகளை முதலில் தடை செய்த நாடாக இந்தியா விளங்குகிறது. சீனாவைச்சேர்ந்த மொத்தம் 106 செயலிகளை இந்தியா தடை செய்தது. இந்த நடவடிக்கையை அமெரிக்காவும் வரவேற்றிருந்தது.
சீன நிறுவனங்களுக்கு சொந்தமான செயலிகள் அமெரிக்காவில் விரிவாக்கம் பெற்று வருவது, தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக அதிபர் டிரம்ப் அந்நாட்டு நாடாளுமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.
“இந்தச் சூழலில், டிக்டாக் செயலிக்கு எதிராக நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது’ என்று அவர் கூறியுள்ளார்.
சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக், அதன் பயனாளிகளிடம் இருந்து அதிக தகவல்களை திரட்டுகிறது என டிரம்ப் மேலும் கூறியுள்ளார்.
இந்த தரவுகள், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை அணுக வழி செய்வதாகவும், இதன் மூலம், அமெரிக்க கூட்டமைப்பின் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நடமாட்டத்தை சீனா கண்காணித்து அவர்களை பற்றிய தனிப்பட்ட தகவல் சித்திரத்தை உருவாக்கி, மிரட்டல் மற்றும் உளவுக்கு சீனா பயன்படுத்த சாத்தியம் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சீன அரசு சர்ச்சைக்குறியதாக கருதும் உள்ளடக்கத்தையும் டிக்டாக் தணிக்கை செய்கிறது. சீன கம்ப்யூனிச கட்சிக்கு ஆதரவாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபடவும் டிக்டாக் உதவுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
"இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், இந்த ஆணை 45 நாட்களுக்கு பிறகு, பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்ட அளவில், சினாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துடன் அல்லது அமெரிக்க வர்த்தக துறை செயலாரால் அடையாளம் காணப்பட்ட வகையில் அமெரிக்காவில் ஆர்வம் கொண்ட அதன் துணை நிறுவனத்துடன் எந்தவித பரிவர்த்தனை அல்லது சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தடை விதிக்கிறது,” என டிரம்ப் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய விதிகள் மற்றும் வழிமுறைகளை வகுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரத்தில் வர்த்தகத் துறை செயலருக்கு அவர் வழங்கியுள்ளார். இந்த உத்தரவை செயல்படுத்த, சர்வதேச அவசரநிலை பொருளாதார அதிகாரம் சட்டம் அதிபருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தையும் இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
அனைத்து துறைகளும் தங்கள் வரம்புக்குள் இந்த உத்தரவை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மற்றொரு உத்தரவில், சீனாவின் டென்செண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீசேட் மேசேஜிங் சேவை, உலகம் முழுவதும் 100 கோடி பயனாளிகளுக்கு மேல் பெற்றுள்ளது என கூறியுள்ள டிரம்ப், டிக்டாக் போலவே, இந்த செயலியும் பயனாளிகளின் தகவல்களை திரட்டி, அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவலை சீன கம்யூனிஸ்ட் கட்சி அணுக வழி செய்யும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு வருகை தரும் சீனர்கள் தொடர்பான தகவல்களையும் வீசேட் திரட்டுவதாகவும், இதன் மூலம் சுதந்திரமான நாட்டில் சீன பிரஜைகளை அந்நாடு கண்காணிக்க வழி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘சீன அரசு அரசியல் நோக்கம் கொண்டதாக கருதும் தகவல்களை வீசேட் மற்றும் டிக்டாக் தணிக்கை செய்வதகாவும், சீன கம்யூனிச கட்சி சார்பாக பொய் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்படலாம் என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
டிக்டாக், அமெரிக்க பயனாளிகள் தகவல்கள் அமெரிக்க சர்வர்களில் சேமிக்கப்பட்டு சிங்கப்பூரில் பேக்கப் செய்யப்படுவதாக முன்னர் விளக்கம் அளித்திருந்தது.
செய்தி: பிடிஐ